Tuesday, 27 November 2012

மானிய மறக்கடிப்புத் திட்டம்

மானியம் மற்றும் உதவித் தொகைகளைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணமாகச் செலுத்தும் திட்டம் 51 மாவட்டங்களில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2013-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதிலும் இது அமல்படுத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது.

 ஊழல் காரணமாக, பயனாளிகளுக்கு முழுமையான பலன் போய்ச் சேருவதில்லை என்பதால்தான், இவ்வாறு நேரடியாகப் பணமாகக் கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அரசு தெரிவிக்கிறது. எந்த அளவுக்கு இந்தத் திட்டம் செயல்படும், பயன் தரும் என்பது சந்தேகத்துக்குரியது.

 கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றில் இவ்வாறு பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. இவற்றில் எல்லாம் ஊழல் ஒழிந்துவிட்டது என்றா சொல்லிவிட முடியும்?

 வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கான ஊதியத்தை வங்கியில் செலுத்திவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும், வங்கிக் கணக்கில் பணம் முறையாக வந்து சேர்வதில்லை. கிராம மக்கள் மறியல் செய்கின்றபோதுதான் "நேரடிப் பணப் பரிமாற்றம்' ("டைரக்ட் கேஷ் டிரான்ஸ்பர்') அந்த அதிகாரிகளுக்கு ஆகாததுதான் பிரச்னை என்று தெரிகிறது.

 பயனாளிகளுக்கான உதவித்தொகையை வங்கியில் செலுத்த வேண்டிய அதிகாரம் உள்ளூர் அளவில் இருந்தால், ஊழல் வேறு வடிவம் கொள்கிறது என்பதுதான் உண்மை நிலை. இத்தகைய நிலைமை முதியோர் உதவித்தொகை திட்டத்தில் இல்லை என்பதற்குக்  காரணம், அது மாவட்ட அளவில் ஒரே நேரத்தில் வழங்கப்படுவதுதான். மேலும்  முதியோர் ஓய்வூதிய ஆணை வழங்கும்போது ஒரே தவணையாக ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை "நேரடிப் பணப் பரிமாற்றம்' ஆகிவிடுவதும் மற்றொரு காரணம்.

 இந்தச் சிக்கல்கள் உதவித்தொகைகளை மட்டுமே பொருத்தவை. ஆனால், மறைமுகமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்துக்கொண்டிருக்கும் மானியத்தின் பயன் வேறானது. அதனையும் நேரடியாகப் பயனாளிக்குப் பணமாக வழங்குவது முறையாக இருக்காது. ஏனெனில் இத்தகைய மானியத்தை, ஒரு பயனாளி முன்கூட்டியே பெற முடியாது என்பதுதான் இதில் உள்ள சிக்கல்!

 தற்போது உர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உரமானியத்தை சந்தையில் விற்பனையாகும் உரத்தின் அளவுக்கு ஏற்ப வழங்குவது என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு உர நிறுவனமும் விற்பனை செய்துள்ள உர மூட்டைகளின் அளவை அந்நிறுவன முகவர்கள் விற்றுள்ள மூட்டைகளையும், விவசாயிகள் வாங்கியுள்ள யூரியா மூட்டைகளையும் சரிபார்த்து, பிறகு அதற்கான மானியத்தை அந்த உரநிறுவனத்துக்கு வழங்குவார்கள்.

 இந்தப் புதிய நடைமுறை பெரிய நிறுவனங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அவர்களால் இந்த மானியம் கிடைக்கும் வரை சில மாதங்கள் பொறுத்திருக்க முடியும். சாதாரண ஏழைக்கு இது பொருந்தாது.

 நியாயவிலைக் கடையில் இப்போது சர்க்கரையின் விலை கிலோ ரூ.13.50. வெளிச்சந்தை விலை தோராயமாக ரூ.35. இத்திட்டம் அமலுக்கு வந்தால், ஒரு நுகர்வோர் கிலோ ரூ.35 கொடுத்துதான் சர்க்கரையை வாங்கியாக வேண்டும். அந்த மாதம் சர்க்கரை வாங்கினார் என்ற புள்ளிவிவரம் வட்ட, மாவட்ட அளவில் பதிவாகும்போதுதான், இவர் ஒரு கிலோவுக்குக் கூடுதலாகச் செலுத்திய ரூ.20 இவரது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

 இதேபோன்றதுதான் எரிவாயு உருளையிலும். தற்போதைய நடைமுறைப்படி 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் தரப்படுகிறது. இத்திட்டம் அமலுக்கு வந்தால், அன்றைய சந்தை விலையைக் கொடுத்து வாங்க வேண்டும். பிறகு, காஸ் ஏஜன்ஸி மூலமாக எண்ணெய் நிறுவனங்களுக்குத் தகவல் போய், அவர்கள் இதற்குரிய மானியத்தை வங்கிக் கணக்கில் போடுவார்கள்.

 இந்த நடைமுறையை ஒவ்வொரு சிலிண்டருக்கும் செய்யாமல், அரையாண்டுக்கு ஒருமுறை மானியத்தை வழங்குதல் என்று அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், கூடுதல் பணிப்பளு, போதுமான ஆட்கள் இல்லை என்கின்ற வழக்கமான பதில் கிடைக்கும். அதுவரை ஒரு நடுத்தர, ஏழைக் குடும்பம் தாக்குப்பிடிக்க வேண்டும்.

 இதனால் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்று அரசு கூறினாலும், இவ்வாறு வங்கிகள் மூலம் நேரடியாக மானியம் வழங்கும்போது, போலிப் பயனாளிகளை உருவாக்கி, மானியத்தை ஒருபக்கம் ஒதுக்கிக் கொள்ள அதிகாரிகளால் முடியும். அல்லது, தற்போது வசதிபடைத்தவர்களின் குடும்ப அட்டைகளில் அரிசி, கோதுமை வாங்கப்பட்டதாக அவர்களே எழுதிக்கொள்வதைப்போல, மானியத்தை வேறு கணக்கில் செலுத்தும் முறைகேடுக்கும் வாய்ப்பு உள்ளது.

 இந்த நேரடிப் பணப் பரிமாற்றம் என்பதை மிகவும் உன்னிப்பாகப் பார்த்தால் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். இது ஊழலை ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமல்ல. மானியத்தை ஒழிப்பதற்கான திட்டம் என்பதுதான் அது.

 உலக வங்கி தொடர்ந்து, ""மானியத்தை ரத்து செய்யுங்கள், குறையுங்கள்'' என்று கூறி வருகிறது. மானியத்தைக் குறைத்தால் எதிர்க்கட்சிகளும் மக்களும் குரல் எழுப்புகிறார்கள். ஆகவே இந்தப் புதிய திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடிமகனையும் சந்தை விலையைக் கொடுத்து வாங்கப் பழக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைதான் இந்த "நேரடிப் பணப் பரிமாற்றம்'. சில காலத்துக்கு மானியம் கிடைக்கும். பிறகு குறைக்கப்படும். அப்புறம் சில இனங்களுக்கு மானியம் ரத்தாகும். பிறகு மானியம் முழுவதுமே விலக்கிக்கொள்ளப்படும். அப்போது, இதை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் சந்தை விலையைக் கொடுத்து வாங்கப் பழக்கிவிடப்பட்டிருப்பார்கள்.

 ஒரு நல்ல அரசுக்கு அடையாளம், அமைச்சர்கள், அதிகாரிகள் அளவிலான ஊழலை ஒழித்து, மக்களின் வாங்குசக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம், மானியம் பெறுவதை மக்கள் ஒரு அவமானமாகக் கருதும் நிலையை உருவாக்குவதுதான். மாறாக, இவ்வாறு மானியத்தை மறக்கடிக்க வைப்பதல்ல. தாய்ப்பாலை குழந்தை வெறுக்கச் செய்வதற்காக வேப்பெண்ணெய் தடவிக் கொடுப்பது போலத்தான் இதுவும்!






நன்றி: Dinamani

மத்திய அரசின் ரட்சகர்கள் எதிர்க்கட்சிகள்தான்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாம் நாளாக முடங்கியது.

 இப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வுகாண, திங்கள்கிழமை நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் எந்த உடன்பாடும் ஏற்படாததைக் காணும்போது, சென்ற மழைக்காலக் கூட்டத் தொடர் போல, குளிர்காலக் கூட்டத் தொடரும் ஒரு பணியும் நடைபெறாமலேயே முடிந்துபோகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

 நாடாளுமன்ற நடைமுறை விதிஎண் 184-ன் கீழ், இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதம் நடத்தவும், வாக்கெடுப்பு நடத்தவும் வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்திய அரசோ, விதி எண் 193-ன் கீழ் விவாதம் நடத்தலாம், ஆனால்  வாக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்கிறது. விவாதத்தை இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்ட நிலையில், "வாக்கெடுப்பு' பிரச்னையாவதற்குக் காரணம் அரசியல்தான்.

 விதிஎண் 184-ன் படி பாஜக கோரிக்கையை அரசு ஏற்கும் என்றால், வாக்கெடுப்பு நடத்த அரசு ஏன் தயங்க வேண்டும் என்று கேட்கலாம். மத்திய அரசு இதற்கு இணக்கம் தெரிவிக்கத்தான் போகிறது. ஆனாலும், எதிரியை வேண்டுமென்றே முன்னேறவிட்டு, பிறகு தாக்கித் தோல்வியுறச் செய்யும் உத்தியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கையாளுகிறது என்றுதான் தோன்றுகிறது.

 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வெளிப்படையான எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஆளும் கூட்டணிக் கட்சிகள், வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கக் கூடும் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு. அப்படியே அவர்கள் எதிர்க்காவிட்டாலும், குறைந்தபட்சம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து  அரசைக் காப்பாற்றக்கூடும். அதுவும்கூட அரசுக்குப் பின்னடைவுதானே என்பதும், அப்படிச் செய்வதால், திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநிலக் கட்சிகளின் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான எதிர்ப்பு போலித்தனமானது என்பது வெளிச்சம் போடப்படும் என்பதால், அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட மாட்டார்களா என்பதும்கூட எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

 விதி எண் 184-ன் படி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தினால், மத்திய அரசுக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்கிற நிலைமை இருப்பதுபோல ஒரு தோற்றம் காட்டப்படுகிறதே தவிர, நிலைமை அவ்வாறாக இல்லை. சிலருக்கு "விருந்தும்', சிலருக்கு "மருந்தும்'  ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே, வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாமல் வெளியேறும் கட்சிகளும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகும் கட்சிகளும் இந்த வாக்கெடுப்பை அரசுக்குச் சாதகமாகவே அமையச் செய்யும். தனது பாசறையை முதலில் ஒருமுறை சோதித்துப் பார்த்துக்கொள்வதற்கான காலஅவகாசம் பெறுவதற்காகவே, தற்போது வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்காமல் அரசு இழுத்தடிக்கிறதே தவிர, வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கேகூட காங்கிரஸ் கட்சி நிச்சயம் சம்மதிக்கும் என்று நம்ப இடமிருக்கிறது.

 மத்திய அரசுக்கு இதனால் இன்னொரு ஆதாயமும் உண்டு. குளிர்காலக் கூட்டத்தொடரையும் முடக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை அதிகப்படுத்த முடியும். அத்துடன், வாக்கெடுப்பு அரசுக்கு ஆதரவாக முடியும்போது, "இதற்காகவா இவ்வளவு நாள் நாடாளுமன்றத்தை முடக்கி வீணடித்தார்கள்?' என்று எதிர்க்கட்சிகளின் மீது மக்களுக்கு எரிச்சல் மேலும் அதிகரிக்கும். அதற்கான தந்திரமாகக்கூட இது இருக்கலாம்.

 சென்ற ஆண்டு, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அரசு அறிவித்தபோது அதைத் தடுத்து நிறுத்தியது, அப்போது மத்திய அரசில் இடம்பெற்றிருந்த திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே! கூட்டணியை விட்டுத் திரிணமூல் காங்கிரஸ் வெளியேறிய பிறகுதான் மத்திய அமைச்சரவை, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது.

 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது அந்தந்த மாநிலத்தின் விருப்பத்துக்கு உரியது. இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று கூறியபோது, 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எடுத்த எடுப்பில் ஆதரவு தெரிவித்துவிட்டன. அதன் பிறகு எதிர்க்கட்சிகள் நடத்திய கடையடைப்பு வேலைநிறுத்தம் மிகவும் பலமானதாக இருந்திருந்தால், மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கக்கூடும். ஆனால், உண்மை அவ்வாறாக இல்லை.

 அடுத்ததாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா இரு மாதங்களுக்கு முன்பே தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தனது அரசியலை ஸ்திரப்படுத்திக்கொள்ளவே அவர் இந்த நாடகம் ஆடுகிறார் என்று குற்றம்சாட்டிய இடதுசாரிகள், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு தரமாட்டோம் என்று அறிவித்தனர், சரி. ஆனால், மற்ற கட்சிகள் ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?

 நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக்கூடிய எண்ணிக்கை பலம் பாஜகவுக்கு இருக்கும்போது, அவர்கள் ஏன் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தைக் கேட்டு, நாடாளுமன்றத்தை முடக்கிக் கொண்டிருக்க வேண்டும்? நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி கண்டால் எதிர்க்கட்சிகளுக்கு அவமானம். ஆனால், விதிஎண் 184-ல் தோற்றுப்போனால், அது வெறும் அன்னிய நேரடி முதலீட்டில் கட்சிகளிடையே கருத்துமாறுபாடு மட்டுமே! ஒருவேளை தீர்மானம் நிறைவேறினாலும், அதனால் ஆட்சி கவிழ்ந்துவிடப் போவதில்லை. இன்னும் ஆறு மாதத்திற்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாத நிலைமையை திரிணமூல் காங்கிரஸின் தீர்மானத்தை ஆதரிக்காமல் எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன.

 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ரட்சகர்கள் வேறுயாருமல்ல, எதிர்க்கட்சிகள்தான். அதிலும் குறிப்பாக, பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும்!





நன்றி: Dinamani

மின்சார பற்றாக்குறை - இருப்பதை பகிர்வோம்

தமிழகம் அனுபவித்துவரும் வரலாறு காணாத மின்சார பற்றாக்குறை இன்றே தீர்க்கப்பட்டால்கூட, மின்வெட்டு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் சரியாக பல ஆண்டுகள் ஆகும் என்று தோன்றுகிறது. சில இழப்புகளை ஈடுகட்டவே முடியாது. பெரிய தொழில்கள் முடங்கி கிடக்கும் நிலையில் சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள் கதி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆலைகள் இயங்காத போதிலும் அவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் டிபன் கேரியரையும் நம்பிக்கையையும் சுமந்து கொண்டு ஆலைக்கு வந்த வண்ணம் இருந்தார்கள். மின்வெட்டின் தீவிரமும் தொடர்ச்சியும் அந்த இரண்டையும் படிப்படியாக குறைத்து வறட்சியில் தள்ளியது. நூற்பாலைகளை 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் குஜராத், மகாராஷ்டிராவுக்கு இடம் பெயர்க்க முதலாளிகள் முடிவெடுத்து விட்டதாக  தெரிகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். மாவட்டங்களில் 14 மணி நேரம், 16 மணி நேரம் என மின்வெட்டு சுழன்றடிப்பதால் எல்லா தரப்பு மக்களுமே அவரவர் வேலைகளை கவனிக்க முடியாமல் திணறுகின்றனர். வருமான இழப்பு, தூக்கமின்மை, எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற இயலாமை எல்லாமாக சேர்ந்து சராசரி பொதுமக்களை விரக்தியை நோக்கி விரட்டுகிறது. இத்தனைக்கும் நடுவில் அவர்கள் மனதில் தகித்துக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி: சென்னைக்கு மட்டும் ஏன் சிறப்பு கவனிப்பு? 'நாமெல்லாம் அடிப்படை தேவைக்கு மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும்போது சென்னையில் எங்கு பார்த்தாலும் ஏசி மெஷின்கள் இடைவிடாமல் இயங்குகின்றன.

 கடைகளும் கட்டடங்களும் அலங்கார விளக்கொளியில் சொர்க்கபுரியாக ஜொலிக்கின்றன. பகலில்கூட தெருவிளக்குகள் எரிகின்றன' என்று தலைநகருக்கு வந்தவர்களும் அவர்கள் சொல்ல கேட்டவர்களும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அது வயிற்றெரிச்சல் அல்ல. ஏக்கம். 'மின் உபயோகத்தில் இவர்கள் கொஞ்சம் சிக்கனமாக இருந்தால் இருளில் மூழ்கியுள்ள நமது வாழ்வில் சற்று வெளிச்சம் பிறக்குமே' என்ற ஆதங்கம். உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வழியில்லை. உபயோகத்தை சிக்கனமாக்க ஆயிரம் வழிகள் உண்டு. அரசு மட்டுமல்ல; சென்னையில் வசிக்கும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். சென்னைக்கு வெளியே வாழ்பவர்களும் தமிழக குடிமக்கள். அவர்கள் நமது சொந்தங்கள்.





நன்றி: Dinakaran

Monday, 26 November 2012

ஆம் ஆத்மி என்ற பெயரில் ஒரு கட்சி

இந்தியாவில் மேலும் ஒரு கட்சி உதயமாகியிருக்கிறது. ஆம் ஆத்மி என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கிறார் கேஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்தியவர், அன்னா ஹசாரேக்கு பக்க பலமாக இருந்தவர் இப்போது தனியாக வந்து அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே இருக்கும் கட்சிகளுடன் 1,454வதாக இதுவும் சேர்ந்திருக்கிறது.தேசிய கட்சிக்கு அனைத்து மாநிலங்களிலும் உறுப்பினர்கள், வட்டம், மாவட்ட அளவில்  அமைப்புகள் அவசியம். அப்போதுதான் அதிக எம்.பிக்களை வெற்றி பெறச் செய்து மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும். அந்த விஷயத்தில் காங்கிரசை தவிர வேறு எந்தக் கட்சிக்கும் தேசிய அளவில் பரவல் இல்லை என்றே சொல்லலாம். பாரதிய ஜனதாவும் கூட இந்தி பேசும் மாநிலங்களை குறிவைத்தே கட்சி நடத்துகிறது. தென் மாநிலங்களை பொருத்தவரை வெங்கையா நாயுடு போன்ற ஒரு சில தலைவர்களை தவிர வேறு யாரும் தேசிய அளவில் அரசியல் நடத்துவதில்லை. நடத்தும் அளவுக்கு செல்வாக்குடன் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நாடு முழுவதும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். கட்சி அமைப்புகளும் இருக்கின்றன. ஆனால் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா என சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மிகவும் குறைவு. பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் மட்டும் வெற்றி பெறுகிறார்கள். கேஜ்ரிவால் ஆரம்பித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் பெயரில் இருந்து, முதல் நாள் நடவடிக்கை வரை அனைத்திலும் இந்தி பேசும் மக்களின் ஆதரவு இருந்தால் போதும் என நினைக்கிறாரோ என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இருந்தவர்கள், 
கேஜ்ரிவால் கட்சி ஆரம்பித்த போது, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளனர். அவர்களை பங்கேற்கவே அனுமதிக்கவில்லை. வெளிப்படையான அரசு நிர்வாகம் வேண்டும் எனக் கேட்கும் கேஜ்ரிவால், கட்சியின் முதல் கூட்டத்திலேயே அதை கடைப்பிடிக்கவில்லையே என எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
மற்ற கட்சிகள் எப்படியோ, சாதாரண மனிதனுக்காக, அவன் முன்னேற்றத்துக்காக கட்சி ஆரம்பித்துள்ளதாக கூறும் கேஜ்ரிவால், இந்தியா முழுவதும் கட்சி சென்றடைய செய்தால்தான் அவர் நினைத்தது நடக்கும்.





நன்றி: Dinakaran 

Sunday, 25 November 2012

விதவைகள் பென்சன் பெறுவதற்கான வயது வரம்பு

இந்தியா எல்லா துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஆணுக்கு, பெண் இளைத்தவள் இல்லை என்று ராக்கெட் ஏவும் பணியில் இருந்து, எந்த இடத்திலும் எங்களால் ஒளிவிட முடியும் என்று- அது அரசியலாகட்டும், ஆட்சி பொறுப்பாகட்டும், எந்த பணியை கொடுத்தாலும் நாங்கள் ஆணுக்கு இணையாக முத்திரை பதிப்போம் என்று நமது தாய்க்குலம் சூளுரைத்து வேகமாக முன்னேறி வருகிறது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், ஆண்-பெண் சரிசமமாக வாழ்ந்தாலும், வாழ்க்கை துணையை இருவரில் ஒருவர் இழக்கும்போது, பெண்ணுக்கு மட்டும் பெரும் துயர் ஏற்படுகிறது. குடுகுடு கிழவன் என்றாலும், அவன் மனைவி இறந்தவுடன் அடுத்த கல்யாணத்துக்கு தயாராக புது மாப்பிள்ளையாகிவிடுகிறான். ஆனால், இளம் வயதில் கணவனை இழக்கவேண்டிய துர்பாக்கியமான நிலைமை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டாலும், தள்ளாத முதுமையின்போது தன் கணவனை இழக்க நேரிட்டாலும், அந்த பெண்ணுக்கு கைம்பெண், விதவை, தாலி அறுத்தவள் என்று சொல்லக்கூடாத வார்த்தைகளால் சொல்லி, அந்த பெண்ணின் மனதைப் புண்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமுதாயமும் அவளை சற்று தள்ளியே வைத்து பார்க்கிறது.

வாழ்க்கை துணை இழந்த பெண்ணின் துயரத்தை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 1942-ம் ஆண்டு எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில், விதவைகள் நிலைமை என்ற பொருளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய நாட்டின் ஆட்சி உரிமை இந¢திய மக்களுக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்த்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்பு பிரிவினையும், சாதி வேற்றுமையும் ஒழிய வேண்டுமென்று சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி, மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியராகிய பெண்கள் ஒருபக்கம் அழுத்தப்பட்டு வருவதைப்பற்றி எவருமே போதிய கவலைகொள்வதாக காணோம்.
மனிதப்பிறவி கொண்ட ஆணும், பெண்ணும் இயற்கை தத்துவத்திலும், சமுதாய வாழ்க்கை தன்மையிலும் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர்களல்ல என்பதை அறிவுடைய உலகம் மறுத்தற்கியலாது. உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப்போயிருக்கும் பழுத்த கிழவனாயினும், தம் மனைவியார் இறந்த பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் தக்க பருவமும், எழிலும் பொருந்திய இளங்கன்னியர்களைத் தன் துணைவியாக தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். ஆனால், ஓர் பெண் மகள் கொழுநன் இழந்துவிட்டால், இயற்கை கட்புலனை வலிய அடக்கிக்கொண்டு, மனம் நைந்து, வருந்தி மடியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வருவது என்னே அநியாயம் இது.

இந்த பரிதாபகரமான நிலைமை 1942-ல் மட்டுமல்ல, இப்போதும் இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருந்த இந்த காலத்திலும், விதவைகளை சமுதாயம் உரிய முறையில் அங்கீகரிப்பதில்லை. இளம் வயதில் கணவனை இழந்தவர்களில், படித்து வேலைபார்க்கும் பெண் என்றால் ஓரளவு சமாளித்துக்கொள்வார்கள். மறுமணம் செய்துகொள்பவர்களும் பழைய வாழ்க்கையை மறந்துவிட முடியும். ஆனால், படிப்பறிவும் இல்லாமல், மறுமணமும் செய்துகொள்ளாமல், ஏழ்மையில் வாழும் பெண்களின் நிலைமையோ அந்தோ பரிதாபம். தாலி கட்டிய கணவனை மனதிலே தெய்வமாக வைத்துக்கொண்டு வாழும் அவளுக்கு வயிற்றுபசிக்கு சோறிட மட்டும் வசதியில்லாத நிலைமை. நல்லவேளையாக மத்திய-மாநில அரசுகள் விதவைகள் பென்சன் என்று கூறப்படும் உதவிகளை அவர்களுக்கு வழங்குகிறது. ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மத்திய அரசாங்கத்தால் 40 வயதுக்கு மேல் இந்த பென்சன் வழங்கப்படுகிறது. 40 வயதுக்கு மேல் ஒரு பெண் விதவையானால், ஒருவேளை அவளை காப்பாற்ற அவளது பிள்ளைகள் தலையெடுத்துவிடுவார்கள். ஆனால், 18 வயதில் விதவையாகும் பெண்ணின நிலைமை பரிதாபத்துக்குரியது.

இப்போது மத்திய அரசாங்கம் விதவைகள் பென்சன் பெறுவதற்கான வயது வரம்பை 40  வயதிலிருந்து 18 வயதாக குறைக்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது. இதேபோல, திருமணமே செய்துகொள்ளாமல், முதிர் கன்னிகளாக வாழ்பவர்களுக்கும், விவாகரத்தானவர்களுக்கும் இதுபோல பென்சன் வழங்க மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது மிகவும் நல்ல திட்டம். இதை ஏற்கனவே தமிழக அரசு செயல்படுத்தி, பாரத திருநாட்டுக்கே முன்னோடியாக விளங்குகிறது. இதற்கு பரிசீலனையே தேவையில்லை. உடனடியாக மத்திய அரசு ஆதரவற்ற இதுபோன்ற பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் வயது வரம்பை 40 வயதிலிருந்து 18 வயதாக குறைக்கவேண்டும், எண்ணிக்கை வரம்பை இந்நேர்வில் ஒருபோதும் வலியுறுத்தக்கூடாது, மாநில அரசுக்கு முழுமையாக நிதி உதவி செய்யவேண்டும் என்பதுதான், சமூக நலனில் அக்கறைகொண்டுள்ள எல்லோருடைய கோரிக்கையாகும்.






நன்றி: Daily Thanthi

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு - ஆதரவு யார்? எதிர்ப்பு யார்?

கடந்த 2 நாட்களாக பாராளுமன்றம் இயங்க முடியாமல், அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு, இப்போது திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஒட்டுமொத்த நாடே பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது? என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் ஒரு திட்டத்தை அறிவித்தது. அறிவித்த காலத்திலேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இந்தியாவை பொறுத்தமட்டில், சில்லறை வணிகர்கள், மக்களோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். பெரிய தொழிற்சாலைகள் போன்றவற்றில் அன்னிய நாட்டு முதலீட்டை அனுமதித்தால், தொழில் வளர்ச்சி வளரும், பொருளாதாரம் பெருகும் என்று சொல்லும் காரணங்களெல்லாம், நிச்சயமாக மக்களிடம் எடுபடும். ஆனால், சில்லறை வணிகத்தில் அன்னியநாட்டு முதலீடு என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல், சில்லறை வணிகர்கள் மட்டுமல்லாமல், பல அரசியல் கட்சிகள், மாநிலங்களில் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முதலில் மத்திய அரசாங்கம் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கிறோம். ஆனால், தங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா? என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளட்டும் என்று கூறினர். மாநில அரசுகளை பொறுத்தமட்டில், எல்லா மாநிலங்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மராட்டியம், அசாம், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்கள் மட்டுமே சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரித்தது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இதை இதுவரையில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சில்லறை வணிகத்தில் முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரே பெருவாரியாக ஈடுபட்டு வந்தனர். வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள்தான் பெரும்பாலும் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லா சாதியிலும் உள்ள இளைஞர்களும் சில்லறை கடைகள் வைக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஒரு பெரிய கோரிக்கை கிளம்பியது. திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி, மத்திய அரசாங்கம் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தார். ஆனால், குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை அவரிடம் இல்லாததால், அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதில், மத்திய அரசாங்கத்துக்கு பெரிய லாபம் என்னவென்றால், அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசாங்கம் மீது யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதித்து, ஓட்டு எடுப்பு நடத்தவேண்டும் என்று பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் நோட்டீசு கொடுத்திருக்கிறது. மத்திய அரசாங்கத்தை பொறுத்தமட்டில், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், நிர்வாக ரீதியான முடிவுகள் மீது விவாதம் நடத்தமுடியாது என்று கூறுகிறது. இப்போது இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டு, ஓட்டு எடுப்புக்கு வந்தால், மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? எதிர்ப்பாக எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? என்பதில் ஒரு நிச்சயமற்ற நிலைமை இருக்கிறது. ஏனெனில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இப்போதுள்ள கணக்குபடி 235 உறுப்பினர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கிறது. இதுதவிர, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உறுப்பினர்களின் 18 ஓட்டுகள் நிச்சயமாக சில்லறை வணிகத்துக்கு ஆதரவாக இருக்காது என்ற நிலையிலும், 22 உறுப்பினர்களைக்கொண்ட முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், 21 உறுப்பினர்களைக்கொண்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியும் சில்லறை வணிகத்துக்கு எதிர்ப்பு கருத்தை கொண்டிருப்பதால், இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள்? என்று தெரியவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளின் பலம் இப்போதுள்ள நிலையில் 226 ஆகும்.

ஒரு நிச்சயமற்ற நிலையில் பிரதமர், திங்கட்கிழமை அன்று அனைத்து கட்சி தலைவர்களையும் இதுதொடர்பாக சந்தித்துப்பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில், ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டு, பாராளுமன்றம் தொடர்ந்து நடக்கவும், மக்களுக்கான பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடத்தவும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், எதிர்கட்சிகளும் உதவவேண்டும். சில்லறை வணிகர்களை பொறுத்தமட்டில், யார்-யார்? தங்களுக்கு ஆதரவு, யார்-யார்? தங்களுக்கு எதிர்ப்பு என்பதை கண்டுபிடித்துவிட முடியும். எங்கள் பதிலை தேர்தல் நேரத்தில் காட்டிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசாங்கம் சொன்னாலும், கதவை திறந்து உள்ளே வாருங்கள் என்று சொல்லிவிட்டு, அதன்பிறகு என்ன செய்யமுடியும்? என்பதைதான் மக்களின் குழப்பமான கேள்விக்குறி.






நன்றி: Daily Thanthi

புதிய மருந்து விலை நிர்ணயக் கொள்கை - சின்டிகேட்டிற்கு வழிவகுக்கும்

புதிய மருந்து விலை நிர்ணயக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதனால் 348 மருந்துகளின் விலை குறையும் என்று சொல்லப்படுகிறது.

 மருந்து விலை நிர்ணயக் கொள்கையைப் புதிதாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 2003-ம் ஆண்டிலிருந்து எழுப்பப்பட்டு வந்தாலும், தற்போதுதான் இது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

 இந்தியாவில் பெரும்பாலும் நல்லன யாவும் நீதிமன்றத்தின் நெருக்கடியால்தான் நடந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசின் மருந்து விலைக் கொள்கையும் இதில் அடங்கும். மருந்துகள் தற்போதைய சந்தை நிலவரத்தின்படி மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் புதிய மருந்து விலைக் கொள்கையை நவம்பர் 27-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதற்கு இணங்க, இப்போது இந்த கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 தற்போது, தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 74 மருந்து மாத்திரைகள் மட்டுமே உள்ளன. தற்போதைய புதிய கொள்கைப்படி, 348 மருந்து, மாத்திரைகள் அதில் இடம்பெறுகின்றன. அதனால், பெருவாரியான மருந்துகளின் விலை குறையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. இந்தப் புதிய கொள்கையின் அம்சங்களை மத்திய அரசு முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் ஒரேயொரு அம்சத்தை மட்டும் - அதாவது மருந்து விலை நிர்ணயம் தொடர்பான விவரத்தை மட்டும் - தெரிவித்துள்ளது. வெவ்வேறு பெயர்களில் மருந்தின் பல்வேறு நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் ஒரே மருந்தின் பல்வேறு விலைகளைக் கூட்டி, வகுத்து சராசரி விலை தீர்மானிக்கப்படும் என்பதுதான் அது.

 ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்திச் செலவு மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையைத் தீர்மானிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மருந்தை 50 நிறுவனங்கள் தயாரிக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். மருந்தின் விலை குறைந்தபட்சமாக ரூ. 20-லிருந்து ரூ. 200 வரை விற்கப்படுகிறது என்றால், இந்த 50 நிறுவனங்களில் 1 விழுக்காட்டுக்கு அதிகமான சந்தை பெற்றுள்ள நிறுவனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அத்தனை நிறுவனங்களின் விலையையும் கூட்டி, நிறுவனங்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் விலைதான் அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்படும்.

 இதனால், மக்களுக்கு எந்த வகையில் லாபம் என்று பார்த்தால், பெரிய நன்மை விளையாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய விலை நிர்ணயத்தால், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மருந்துச் சந்தையில் கோலோச்சும் உள்நாட்டின் பெரிய நிறுவனங்கள் மட்டுமே சிறிது பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால், அவர்கள் தற்போது விற்கும் விலையைவிடக் குறைவாக விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இவர்கள் "கூட்டணி' அமைத்துக்கொண்டு, சிறு நிறுவனங்களை வற்புறுத்தி, தொல்லை கொடுத்து, கூடுதல் விலைக்கு விற்கும்படி செய்தால், மருந்து விலை இந்த கம்பெனிகள் விரும்பும் சராசரி விலையிலேயே நிற்கும். இதைச் செய்வது அவர்களுக்கு எளிது.

 ரூ. 200க்கு விற்கப்படும் மருந்தின் விலை, இந்த கூட்டிக் கழிக்கும் நடைமுறையால் ரூ. 100 ஆகக் குறையும். ஆனால், ரூ. 20க்கு கிடைத்து வந்த மாத்திரையின் விலை உயரும்போது, இந்த சராசரி விலையும் உயரும்.

ஒரு நிறுவனத்தால் ஒரு மாத்திரையை ரூ. 20க்குத் தயாரிக்க முடியும் என்கின்றபோது, வெறும் தரம், பிராண்டு என்ற பெயரில் விலையை உயர்த்துவதை அரசு எப்படி அனுமதிக்கலாம்? உண்மையாகவே, மத்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால், ஒரு மருந்துக்கான மூலப்பொருள்கள் யாவை, அதற்கான விலை என்ன என்பதைத் தீர்மானித்து, அதைத் தரமான முறையில் தயாரிக்க ஆகும் செலவையும் அரசே தீர்மானித்து, அதற்கு மேலாக எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை விழுக்காடு லாபம் வைத்து விற்கலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். லாபத்தின் அளவை நிறுவனத்தின் விற்றுமுதல், தொழிற்கூடம், தொழிலாளர் எண்ணிக்கை, செலுத்தும் வரியை வைத்து வரிசைப்படுத்தவும் செய்யலாம். ஆனால், எதையும் செய்யாமல், சந்தையில் உள்ள ஒரே வகை மருந்துகளின் விலையை கூட்டி, வகுத்து சராசரி விலையைத் தீர்மானிக்க, பல்வேறு மருத்துவப் பட்டம் பெற்ற பலரைக் கொண்டிருக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தேவையா?

 புதிய மருந்து விலைக் கொள்கை குறித்து அரசு வெளிப்படையாகத் தெரிவித்துள்ள இந்த ஒரு அம்சத்துக்கே மருந்துக் கம்பெனிகள் அனைத்தும் முதலைக் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டன. இதனால் ஆண்டுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 4,200 கோடி வருவாய் குறையும் என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். உலக மருத்துவச் சந்தையில் அதிக மருந்து விற்பனையாகும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தினமும் ஏதாவதொரு மாத்திரையை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார். டாக்டர்களும் சாதாரண காய்ச்சலுக்குப் போனாலும், மளிகைச் சாமான் பட்டியல் போல மருந்துகளை எழுதித் தருகிறார்கள். இந்நிலையில், ஒரு அரசு எத்தனை பொறுப்புடன் இந்த விலை நிர்ணயத்தில் ஈடுபட வேண்டும் என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல.

 உச்ச நீதிமன்றத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்து விலைக் கொள்கை, மக்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை நுணுக்கமாகப் பார்க்க வேண்டிய நாடாளுமன்றம் அமளியில் முடங்கிக் கிடக்கிறது. அந்த "முடக்குவாதத்துக்கு' மருந்து கண்டுபிடிக்கப்படாத வரையில் இது போன்ற கண்துடைப்பு நிவாரணங்கள் வழங்குவதைத் தடுப்பது இருக்கட்டும், கேள்வி கேட்கக் கூட வழியில்லை.






நன்றி: Dinamani

சட்டம் அனைவருக்கும் சமமாகவா இருக்கிறது?

"சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்' என்று சொல்வதை விடப் போலித்தனமான ஒன்று இருக்க முடியாது. பணக்காரர்கள், அரசியல் தொடர்புடையவர்கள், அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானவர்கள் ஆகியோருக்கெல்லாம் சட்டத்தின் அணுகுமுறையே வித்தியாசமானது. சராசரிக் குடிமகனிடம் தனது கடமையைச் செய்யும் சட்டம், அவர்களுக்குச் சில விதிவிலக்குகளை வழங்குவதை பல உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

 கடந்த இருபது நாள்களில் நடந்திருக்கும் இருவேறு நிகழ்வுகள், சட்டம் எப்படி அப்பாவிகளின் மீது மட்டுமே பாய்கிறது அல்லது ஏவி விடப்படுகிறது என்பதையும், அதே சட்டம் அரசியல்வாதிகளையும், உயர் பதவிகளில் இருப்பவர்களையும் நெருங்கவே பயப்படுகிறது என்பதையும் வெளிச்சம் போடுகிறது.

 புதுவையில் சிறு தொழில் நடத்தும் ரவி என்பவர் "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பைச் சேர்ந்தவர். இவர் இணையதளத்திலுள்ள தனது "ட்விட்டர்' பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவைவிடப் பல மடங்கு சொத்து சேர்த்து விட்டிருப்பவர் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவொன்றும் புதிய குற்றச்சாட்டு அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில ஆவணங்களை இணைத்து கார்த்தி சிதம்பரத்திற்கு ஏர்செல் - மாக்சிஸ் முறைகேட்டில் தொடர்பு உண்டு என்பதுவரை குறிப்பிட்டுப் பிரதமருக்கு ஒரு கடிதமே எழுதியிருந்தார்.

 சுப்பிரமணியன் சுவாமியின்மீது மானநஷ்ட வழக்குப் போடவோ, அவரைக் கைது செய்யச் சொல்லியோ கேட்க கார்த்தி சிதம்பரத்திற்குத் துணிவு இல்லை. ஆனால் பாவம், ரவி என்பவர் அவரும் நண்பர்களும் மட்டுமே பகிர்ந்துகொள்ளும் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்தவுடன் கொதித்தெழுந்து, புதுவைக் காவல்துறையிடம் புகார் கொடுக்க அவர்களும் நன்றி விசுவாசத்துடன் ரவியைக் கைது செய்திருக்கிறார்கள். தனி மனிதரைப் பற்றிய அவதூறைப் பரப்பிய குற்றத்துக்காகத் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு "66 ஏ'யின் கீழ் ரவி கைது செய்யப்பட்டு, பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

 2008-இல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டப்பிரிவு செல்லுமா செல்லாதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதைத் தொடர அனுமதித்தால் இணையதளத்தில் எதுவுமே பதிவு செய்ய முடியாது, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியாது என்கிற நிலைமையல்லவா ஏற்பட்டுவிடும்? கார்த்தியின் பெற்றோர்கள் இருவரும் சட்டம் படித்தவர்களாக இருந்தும், குறைந்தபட்சம் சம்பந்தப்பட்டவருக்கு இது தொடர்பாக ஏன் வழக்குத் தொடரக்கூடாது என்று கேட்டுத் தாக்கீது அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா? ஆட்சியும் அதிகாரமும் கையிலிருக்கும் தைரியத்தில், காவல்துறையைத் தனது கைப்பாவையாக்கி ஓர் அப்பாவிக் குடிமகனைக் கைது செய்வது என்ன நியாயம்? சட்டம் அனைவருக்கும் சமமாகவா இருக்கிறது?

 மும்பையில் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இறந்தது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்தியப் பிரஸ் கௌன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு தனது சமூக வலைதளத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். "நான் ஏன் தாக்கரேவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை?' என்கிற தலைப்பிலான  அந்தக் கருத்துப் பதிவில், பால் தாக்கரே முன்வைத்த "மண்ணின் மைந்தர் கொள்கை' அரசியல் சட்டத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானது என்கிறார் அவர்.

 அதே பிரச்னையில் ஷஹீன்ததா என்கிற 21 வயதுப் பெண், "பால் தாக்கரேயின் மரணத்துக்காக மும்பை ஸ்தம்பித்ததன் காரணம் அச்சமே தவிர அவர்மீதான மரியாதை அல்ல. இந்த நிலை நம் மீதான திணிப்பு, நமது தேர்வு அல்ல என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்' என்று தனது முகநூலில் கருத்து வெளியிடுகிறார். தனக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு என்று ரேணு சீனிவாசன் என்கிற பெண் ஆமோதித்துப் பதிவு செய்கிறார்.

 சட்டப்பிரிவு 505(2)ன் கீழ் இரு தரப்பினருக்கிடையே பகையையும் வெறுப்பையும் வளர்க்கும் விதத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி மும்பை காவல்துறை ஷஹீன்ததாவையும், ரேணு சீனிவாசனையும் கைது செய்கிறது. இந்தக் கைது விவகாரம் விமர்சனத்துக்கு உள்ளானதால் அவர்கள் ரூ. 15,000 செலுத்திப் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

 இவர்கள்மீது பாய்ந்த சட்டப் பிரிவு 505(2) ஏன் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மீது பாயவில்லை? இவர்கள் அப்பாவிகள் அதனால்தான் சட்டம் பாய்கிறது.

 அன்றாடம் அரசியல் மேடைகளில் மிகவும் தரக்குறைவாகப் பேசும் அத்தனை பேச்சாளர்கள் மீதும் இந்தச் சட்டம் பாய வேண்டுமே, ஏன் இல்லை? தென்னிந்தியர்கள் மும்பையிலிருந்து வெளியேற வேண்டும் என்று பால் தாக்கரே பேசியபோதும், பிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்று அவரது சகோதரர் மகன் ராஜ் தாக்கரே பேசியபோதும் பாயவில்லையே ஏன்? அப்பாவிகளாக இருந்தால் ஒன்றுமில்லாத விஷயத்தைக்கூடக் குற்றமாக்கி சட்டம் தனது கடமையைச் செய்யும், அப்படித்தானே?

 தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66 ஏ ஆனாலும், சட்டப்பிரிவு 505(2) ஆனாலும், அவை அரசியல் சட்ட அடிப்படை உரிமையான 19(1)(எ)வுக்கு மேலானதாக இருக்க முடியாது. ஒரு தனிமனிதனின் பேச்சுரிமையையும், கருத்து உரிமையையும் கட்டுப்படுத்த எந்தச் சட்டத்தாலும் முடியாது என்பதால்தான் அதற்கு அடிப்படை உரிமை அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

 மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லும் உரிமைக்குப் பெயர்தான் சுதந்திரம். அதைத்தான் ரவியும், ஷஹீன்ததாவும், ரேணு சீனிவாசனும் செய்தார்கள். சுப்பிரமணியன் சுவாமியும், நீதிபதி மார்கண்டேய கட்ஜு-வும் செய்தார்கள். அவர்கள் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்தான், அவரவர் பாதையில்! ஆனால், சட்டம் ஏன் சமமாக இல்லை  என்பதுதான் வேதனையளிக்கிறது.

 நீதியை நிலைநாட்டுவதற்காக வகுக்கப்பட்ட சட்டம் அநீதிக்குத் துணை போகிறதே, அதுவும் வேதனையளிக்கிறது!






நன்றி: Dinamani

தொழிலதிபர்கள் பான்டீ சத்தா & ஹர்தீப் சத்தா - சிறு குறிப்பு

தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பான்டீ சத்தா என்கிற குரு பிரீத் சிங் சத்தாவும் அவரது தம்பி ஹர்தீப் சத்தாவும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு இறந்தார்கள். இரண்டு சமூகவிரோதிகள் மடிந்ததை, இந்தியாவின் அத்தனை தேசிய நாளிதழ்களிலும் முதல் பக்கச் செய்தியாக, சில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்படும் அளவுக்கு அந்தக் கொலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

 பான்டீ சத்தாவினுடைய வர்த்தகக் குழுமத்தின் ஆண்டுக்கான பற்றுவரவு 6,000 கோடி ரூபாயிலிருந்து 20,000 கோடி ரூபாய் வரை. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரேந்திர சிங், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, முலாயம் சிங் யாதவ் போன்றோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் பான்டீ சத்தா. அவரது "வேவ்' (அலைகள்) குழுமம் செய்யாத தொழில்கள் இல்லை. கை வைக்காத துறைகள் இல்லை.

 பஞ்சாபில் உள்ள மொஹாலியில் 264 ஏக்கர் பரப்பில் "பேர்லேக்ஸ்' என்றொரு ஒரு துணை நகரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. காஜியாபாதில் 4,800 ஏக்கரில் "ஹை - டெக் சிட்டி' என்கிற குட்டி நகரத்தை உருவாக்கி வருகிறது அவரது நிறுவனம். "கேரா டௌன் பிளானர்ஸ்' என்கிற நிறுவனத்தின் மூலம் ஜெய்ப்பூருக்கு அருகில் 125 ஏக்கரில் ஒரு நவீன குடியிருப்பு உருவாகி வருகிறது. மொராதாபாத் நகரில் 52 ஏக்கரில் "வேவ் கிரீன்ஸ்' என்கிற குடியிருப்பும், கிரேட்டர் நொய்டாவில் 29 ஏக்கரில் "புல்மேரியா கார்டன் எஸ்டேட்' என்ற பெயரில் ஒரு குடியிருப்பும் உருவாகி வருகிறது. இவை அனைத்தும் பான்டீ சத்தாவின் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுபவை.

 இத்துடன் முடிந்துவிடவில்லை பான்டீ சத்தாவின்  வியாபார சாம்ராஜ்யம். வடநாட்டிலேயே மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளர் பான்டீ சத்தாவாகத்தான் இருப்பார். உத்தரப் பிரதேசத்தில் ஏழு சர்க்கரை ஆலைகளும், பஞ்சாபில் ஒரு சர்க்கரை ஆலையும் அவருக்கு இருக்கின்றன. 2007-இல் அன்றைய மாயாவதி அரசு இயங்கிக் கொண்டிருந்த பத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் தனிநபர் மயமாக்கத் தீர்மானித்தது. அவற்றில் 5 சர்க்கரை ஆலைகள் மிகக் குறைந்த விலைக்கு பான்டீ சத்தாவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதுபற்றிக் கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் அரசுக்கு ரூ. 1,200 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கொடுத்த அறிக்கை தூசு பிடித்துக் கொண்டிருக்கிறது.

 "வேவ்' என்கிற பெயரில் மதுபானங்கள் தயாரிக்கும் பான்டீயின் நிறுவனம் பல சர்க்கரை ஆலைகளை வைத்திருப்பதுடன், வடநாட்டில் கோகோ கோலாவின் உரிமம் பெற்ற உற்பத்தியாளரும்கூட. மூன்று காகிதத் தொழிற்சாலைகள் வைத்திருப்பதுடன், 2,500-க்கும் அதிகமான சில்லறை மதுபான விற்பனைக் கடைகளும் இந்தக் குழுமத்துக்குச் சொந்தம். திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை பான்டீ சத்தா. திரைப்பட விநியோகம், தயாரிப்பு என்று மும்பை திரையுலகத்திலும் அசைக்க முடியாத சக்தியாக இந்தக் குழுமம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவந்தது.

 இவ்வளவு கதைகளும், பான்டீ சத்தாவின் வீரதீரப் பிரதாபங்களும் எதற்காக என்று கேட்டுவிட வேண்டாம். பான்டீ சத்தா ஒன்றும் பரம்பரைப் பணக்காரரோ, பல ஆண்டுகள் உழைத்து ஒரு மிகப்பெரிய குழுமத்தை உருவாக்கிய தொழிலதிபரோ அல்ல என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.

 பான்டீ சத்தாவின் தந்தை குல்வந்த் சிங் சாராயக் கடை ஒன்றின் அருகில் சோடா, நொறுக்குத் தீனி, ஆம்லெட், வேகவைத்த முட்டை, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவருக்குத் துணையாக பான்டீ சத்தாவும் சகோதரர்களும் பணியாற்றி வந்தனர். குல்வந்த்சிங்கிற்கு ஒரு சாராயக் கடை உரிமம் கிடைத்ததிலிருந்து வியாபாரம் கொழிக்க ஆரம்பித்தது. அதற்கு முக்கியமான காரணம், பான்டீ சத்தாவும் சகோதரர்களும் எந்தவித அடிதடிக்கும் தயாராக இருந்ததும், அடியாள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்ததும்தான்.

  அப்பா குல்வந்த் சிங்கின் மரணத்திற்குப் பின் குடும்பம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சகோதரர்கள் ஒற்றுமையாக வியாபாரம் செய்ய வேண்டுமென்றும் அவர்களது தாயார் பிடிவாதமாக இருந்தார். பான்டீ சத்தாவின் மகன் குர்தீப் தலையெடுக்கும்வரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. அதற்குப்பின் பான்டீ சத்தாவுக்கும் அவரது கடைசித் தம்பி ஹர்தீப்புக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை. ரூ. 1,200 கோடி தந்து ஹர்தீப்பை ஒதுக்கிவிட பான்டீ சத்தா தீர்மானித்திருந்த நிலையில்தான் ஹர்தீப் அண்ணனைச் சுட, அவர் திரும்பச் சுட, இருவரும் இறந்து விட்டனர்.

 பான்டீ சத்தாவின் கொலையை விடுவோம். அது ஏதோ உத்தரப்பிரதேசம் தொடர்பான ஒன்று என்று தள்ளிவிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் பான்டீ சத்தாக்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பதுதானே நிஜம்? கடந்த 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களான பலரும் பான்டீ சத்தாக்கள்தான் என்பதுதானே நிஜம்? மாயாவதி ஆண்டாலும் முலாயம் சிங் ஆண்டாலும் ஆட்சி மாற்றத்தால்  பாதிக்கப்படாத பான்டீ சத்தாக்கள் எல்லா மாநிலங்களிலும் பெருகி விட்டதுதானே நிஜம்?

÷சாராயம் விற்றுக் கொண்டிருந்தவர்கள், தொழிலதிபர்களாகி விடுகிறார்கள். தொழிலதிபர்களானவுடன் பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டி "கல்வித் தந்தை' என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்கிறார்கள். முடிந்தால் அரசியல் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ., எம்.பி., ஏன் அமைச்சர்களே கூட ஆகிவிட முடிகிறது.  சொந்தக் கட்சி தொடங்கி விடுகிறார்கள். கேட்டால் எல்லாமே சட்டப்படிதான் செய்திருக்கிறோம் என்கிறார்கள்.

÷ராபர்ட் வதேராவிலிருந்து நிதின் கட்கரியிலிருந்து, அத்தனை பேரும் சொல்வது அதைத்தான். 30% வருமான வரி கட்டிவிட்டால் எதுவும் சட்டப்படியாகிவிடும், அப்படித்தானே? ஒருவர் எப்படி சம்பாதித்தார் என்று தெரிந்துகொள்ள விரும்பினால், அது தனிமனித உரிமையில் தலையிடுவதாகிவிடும், அப்படித்தானே?

 அரசியல்வாதிகளின் துணையில்லாமல் இவர்களால் பணக்காரர்களாகி இருக்க முடியாது. இவர்களது துணையில்லாமல் நமது அரசியல்வாதிகளால் பொதுவாழ்க்கையில் தொடர முடியாது. அதுதான் சுதந்திரம் என்றால், எதற்காகத் தேர்தல், ஜனநாயகம் என்றெல்லாம் போலி வேஷம் போட வேண்டும்? யார் கொள்ளையடிப்பது, வசூலைப் பெறுவது என்பதற்கு வாக்குகளால் ஏலம் போடுவதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?






நன்றி: Dinamani

சிறைச்சாலை - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்

தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் கடந்த ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இரண்டு அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன. முதலாவது, இந்திய சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் இடநெருக்கடியும், அதனைத் தொடர்ந்து காணப்படும் பிரச்னைகளும். இரண்டாவது, இந்தியாவிலேயே அதிகமான துர்மரணங்கள் தமிழகச் சிறைச்சாலைகளில் நடந்திருப்பது!

 இந்தியாவிலுள்ள 1,382 சிறைச்சாலைகளில் அதிகபட்சம் 3,33,782 கைதிகளைத் தங்க வைக்கலாம். ஆனால் 3,72,296 கைதிகள் இருப்பதாகக் கூறுகிறது குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம். அளவுக்கு அதிகமான கைதிகள் சிறையில் அடைக்கப்படும்போது, அவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்துதர முடியாத சூழல் ஏற்படுவதும், முறையான பாதுகாப்பு வசதிகளைச் செய்யமுடியாத நிலைமை ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.

 சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் 3,72,296 பேரில் 3,56,902 பேர் ஆண்கள். 16,024 பேர் பெண்கள். இதில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் 68,935 கைதிகளில், 66,199 ஆண்களும், 2,736 பெண்களும் இருக்கிறார்கள். 4,959 பெண்கள் உள்ளிட்ட தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1,28,593 என்றால் 10,934 பெண்கள் உள்ளிட்ட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2,41,200. 2,020 தண்டனைக் கைதிகளும், 3,601 விசாரணைக் கைதிகளும் வெளிநாட்டவர்கள்.

 தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இந்தியச் சிறைச்சாலைகளில் இருக்கும் 477 கைதிகளில் 465 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள். இவர்களில் 174 பேர் உத்தரப் பிரதேசத்திலும், 61 பேர் கர்நாடகத்திலும், 50 பேர் மகாராஷ்டிரத்திலும், 24 பேர் தில்லியிலும் எப்போது தங்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரியாமல் காத்திருக்கிறார்கள்.

 இந்தியாவிலேயே அதிகமான அளவு கைதிகள் உத்தரப் பிரதேசத்தில்தான் காணப்படுகிறார்கள். அங்கே உள்ள 64 சிறைச்சாலைகளில் மட்டும் 82,383 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த இடத்தில் இருப்பது மத்தியப் பிரதேசம். பிகார் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சிறைச்சாலைகள் (215) உள்ள  மாநிலமான மகாராஷ்டிரம் கைதிகளின் எண்ணிக்கையில் நான்காவது இடத்தில்தான் இருக்கிறது.

 வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், பல்வேறு சிறைகளில் தங்கள் தாயுடன் 1,729 குழந்தைகளும் அடைபட்டுக் கிடப்பதுதான். இதில் 440 குழந்தைகள், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கும் 383 தண்டனைக் கைதிகளின் குழந்தைகள். ஆனால், ஏனைய 1,289 குழந்தைகளின் 1,177 தாய்மார்கள் விசாரணைக் கைதிகள். விசாரணை முடிந்து இவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும், சிறைச்சாலை நினைவுகள் அந்தக் குழந்தைகளின் பிஞ்சு மனதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்?

  கடந்த ஆண்டில் மட்டும் 43 பெண்கள் உள்பட 1,332 கைதிகள் சிறைச்சாலையில் மரணமடைந்திருக்கிறார்கள். இதில் 1,244 மரணங்கள் இயற்கையானவை. இயற்கை மரணமல்லாத பட்டியலில் முதலிடம் வகிப்பது தமிழகம்தான். தமிழக சிறைச்சாலைகளில் கடந்த ஆண்டில் நடந்த 15 மரணங்களில் 13 மரணங்கள் தற்கொலைகள் என்றும், ஒருவர் இன்னொரு கைதியால் கொல்லப்பட்டார் என்றும், ஒருவர் "இன்ன காரணம் என்று கூற முடியாத மரணம்' என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 2,04,480 ஆக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை இப்போது 2,41,200 ஆக அதிகரித்திருக்கிறது. இதில் சில விசாரணைக் கைதிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாகச் சிறைச்சாலைகளில் தங்கள் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா என்று விசாரித்துத் தீர்ப்புக் கூறுவதில் ஏற்படும் தாமதம்தான் இந்த நிலைமைக்குக் காரணம்.

  இதுபோல, தீர்ப்பு வழங்கப்படாமல் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை பிகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும்தான் மிக அதிகமாக இருப்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் "விசாரணைக் கைதிகள்' என்ற பெயரில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தவறு செய்யாமல் மாட்டிக்கொண்ட அப்பாவிகளாகவும், தங்களுக்காக வழக்கு நடத்த வழியில்லாத ஏழைகளாகவும் இருக்கக்கூடும்.

 ஏறத்தாழ 2 கோடி வழக்குகள் கீழமை நீதிமன்றங்களிலும், 35 லட்சம் வழக்குகள் மேலமை நீதிமன்றங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன. பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள கிரிமினல் வழக்குகளில் 6% வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, 94% வழக்குகளில் அப்பாவிகளோ, தகுந்த சாட்சியம் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவரோ விசாரணைக் கைதியாகக் காலத்தைக் கழித்த அவலம். உடனடி நீதி கிடைத்திருந்தால் அவர் சிறைச்சாலையில் தேவையில்லாமல் தமது வாழ்நாளை வீணாக்கி இருக்க வேண்டாம்.

 1998 உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உள்ளூர்வாசிதான் ஒருவருக்குப் பிணையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பல கீழமை நீதிமன்றங்கள் கைதிகளை ஜாமீனில் விடுவதற்குத் தயங்குகின்றன. அதன் விளைவாக விசாரணைக் கைதிகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. தேவையில்லாமல், விசாரணைக் கைதிகளுக்கும் சேர்த்து அரசு செலவு செய்ய வேண்டிய நிலை. விரைவான நீதி உறுதி செய்யப்படாதவரை, சிறைச்சாலைகள் நிரம்பித்தான் வழியும். பலரது வாழ்க்கை வீணாகும். மக்கள் வரிப்பணமும்தான்...!






நன்றி: Dinamani

ஆசிரியர் தகுதித் தேர்வு மிகவும் இன்றியமையாதது

ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை.

வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.

இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.

மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?

அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.

இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.

மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.

காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?






நன்றி: Dinamani

பிஜேபியின் நேரம் சரியில்லை

பாரதிய ஜனதா கட்சியின் தலைமை குழப்பத்தில் இருப்பது நன்றாக தெரிகிறது. ஊழல் புகார்களால் மத்திய அரசை திணறடித்த காலகட்டம் இத்தனை சீக்கிரம் மறையும் என்றோ, அரசு மீது ஏவிய அம்புகள் ஒவ்வொன்றாக பூமராங் போல் திரும்பி வந்து தாக்கும் என்றோ அதன் தலைவர்களில் எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.  டூஜி, நிலக்கரி போன்ற வார்த்தைகளை அவர்கள் உச்சரிப்பது நின்றுவிட்டது. புகார்களுக்கு இலக்கான தலைவர் நிதின் கட்கரியை காப்பாற்றுவதா கைவிடுவதா என்பதில் இரு அணிகளாக பிரிந்து நிழல் யுத்தம் நடத்துகின்றனர். அக்கட்சியின் கையிலிருந்த ஆயுதங்களில் அநேகம்  உடைந்துவிட்டதால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு என்பதை மட்டும் வலுவாக பிடித்துக் கொண்டு அரசின் நெற்றியில் ஒரு கோடாவது கிழிக்கலாம் என்று காத்திருந்தது.  அந்த நேரத்தில்தான் திடீரென்று சி.பி.ஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் மூக்கை நுழைத்து காயம்பட்டிருக்கிறது பிஜேபி தலைமை. தற்போதைய சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங்கின் பதவிக்காலம் இம்மாதம் 30ம் தேதி முடிகிறது. அந்த இடத்துக்கு ரஞ்சித் சர்மாவை அரசு நியமித்துள்ளது. அதை பிஜேபி எதிர்க்கிறது. நிறுத்தி வைக்குமாறு பிரதமருக்கு அருண் ஜேட்லியும் சுஷ்மா ஸ்வராஜும் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். 

பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய குழுதான் சிபிஐ இயக்குனரை நியமிக்க வேண்டும் என்று கேட்கின்றனர். மத்திய கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) -பரிசீலித்து பரிந்துரைக்கும் 3 பெயர்களில் ஒன்றை பிரதமர் தலைமையிலான நியமனங்கள் குழு தேர்வு செய்வது இப்போதுள்ள நடைமுறை. பிஜேபி சொல்லும் நடைமுறை ஒரு யோசனை என்ற அளவில் மட்டுமே நாடாளுமன்ற மேலவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது சட்டமாகுமா எப்போது ஆகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. அதுவரை சிபிஐ இயக்குனர் நாற்காலியை காலியாக வைத்திருக்க முடியுமா என்று காங்கிரஸ் கேட்கிறது. ராம் ஜெத்மலானியும் அதையே கேட்பது பிஜேபியின் நேரம் சரியில்லை என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சி என்பதால் அரசு செய்யும் எல்லாவற்றையும் எதிர்ப்பதா என்கிறார்.  இந்த குழப்பத்தை பார்த்தால், அன்னிய முதலீட்டை ஆதரித்து அக்கட்சியில் கோஷம் எழுந்தாலும் ஆச்சரியமில்லை.





நன்றி: Dinakaran

இலங்கையின் உச்ச அரசு நீதி மன்றம்

இலங்கையின் தலைமை நீதிபதியை நீக்க நாடாளுமன்றம் தொடங்கியுள்ள நடவடிக்கை தெற்காசிய நாடுகள் அனைத்திலும் ஆர்வமாக கவனிக்கப்படுகிறது. பிரிட்டனின் காலனியாக இருந்து விடுதலை பெற்ற இந்த நாடுகள் பிரிட்டிஷ் சட்ட நடைமுறைகளை பின்பற்றி நீதித்துறையை நிர்வகிக்கின்றன.  அந்த வகையில், உச்ச நீதிமன்ற  நீதிபதியை நீக்குவதற்கான வழிமுறை இந்த நாடுகளில் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. ஷிராணி பண்டாரநாயக மீது 14 குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. 54 வயதாகும் இந்த பெண்மணி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெரும் பணம் சேர்த்து அந்நிய வங்கிகளிலும் வெளிநாடுகளிலும் பதுக்கியுள்ளார் என்ற புகார்கள் பிரதானம். அரசியல் காரணங்களால் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக பலர் நம்புகின்றனர். இருக்கலாம். 'நல திட்டங்களுக்கான நிதியை எவ்வாறு செலவிடுவது என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்கலாம்' என்ற நடைமுறையை ராஜபக்ச அரசு மாற்றியதை எதிர்த்த வழக்கில் அரசை ஷிராணி விமர்சித்து இருந்தார். மாநில அரசுகளின் அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. அந்த அதிகாரத்தை கையாளும் அமைச்சர் ராஜபக்சவின் தம்பி. இது தவறான நடவடிக்கை என்றார் ஷிராணி. அடுத்த நாளே அவரை நீக்க ஆளும் கூட்டணியின் 120 எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டுவந்தனர். வேடிக்கை என்னவென்றால், ஷிராணி மீதான புகார்கள் என்ன என்பது அப்போது யாருக்கும் தெரியாது. நீக்குவது என முடிவு எடுத்துவிட்டு புகார்களை தேடுவதாக எதிர்க்கட்சிகள் கூறின. சட்டம் படித்துவிட்டு கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஷிராணியை திடீரென உச்ச நீதிமன்ற நீதிபதியாக , முதல் பெண் , நியமித்தவர் அப்போதைய அதிபர் சந்திரிகா. ஒருநாள்கூட வக்கீலாக நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் நீதிபதியாவதா என்று எதிர்ப்பு கிளம்பியது. அரசு கண்டுகொள்ளவில்லை. 14 ஆண்டுகளில் 11 முறை தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். நிரந்தர நீதிபதியாக அவருக்கு பிரமாணம் செய்வித்தவர் அதிபர் ராஜபக்ச. இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலம் அப்புறப்படுத்த முனைவதும் அவரே. நீக்கத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் விசாரிக்கப்படும் வரையில் நாடாளுமன்றம் இந்த நடவடிக்கையை நிறுத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சம்பந்தப்பட்ட யாரும் பொருட்படுத்தவில்லை. முடிவு என்னாகும் என்பதை இதிலிருந்தே ஊகிக்க முடியும்.





நன்றி: Dinakaran 

மம்தா ஆளும் அரசியலுக்கு இன்னும் பக்குவப்படவில்லை

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மன்மோகன் சிங் அரசை கவிழ்க்கப்போவதாக அறிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கை வெத்து வேட்டாக முடிந்திருக்கிறது. அவருடைய திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் 18 உறுப்பினர்களும் மற்றொரு கட்சியின் 3 உறுப்பினர்களும் மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்களவையில் குறைந்த பட்சம் 50 உறுப்பினர்களாவது கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கொடுத்தால் மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை எதிர்த்து இந்த தீர்மானம் கொண்டுவர மம்தா திட்டமிட்டு இருந்தார். பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா அன்னிய முதலீட்டை எதிர்க்கிறது. இடதுசாரி கட்சிகளும் எதிர்க்கின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக போன்ற கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இந்த சூழ்நிலையில் மன்மோகன் அரசை வீழ்த்த தனக்கு எல்லோருடைய ஆதரவும் கிடைக்கும் என மம்தா தப்புக் கணக்கு போட்டார். இதற்காக மேற்கு வங்கத்தில் இன்னமும் செல்வாக்குடன் இருக்கும் தனது பரம விரோதியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் ஏற்க அவர் தயாராக இருந்தார். வேண்டுகோள் விடுத்தார். அதற்கும் மேலே ஒரு படி சென்று, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி கொண்டு வந்தால் அதை ஆதரிக்க தனது கட்சி தயார் என்றும் அறிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு வரையில் மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த சந்தர்ப்பவாத அரசியலை நாடு வேடிக்கை பார்த்தது. 
ஆனால் மம்தாவின் தந்திர வலையில் பாரதிய ஜனதாவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் விழவில்லை. மம்தாவுடன் நட்புறவு கொண்டுள்ள அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூட, நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டுதான் ஆதரிப்பது பற்றி முடிவு செய்வோம் என எச்சரிக்கையுடன் கூறியிருந்தார். மம்தாவின் முயற்சி தோல்வியில் முடிந்திருப்பது, எதிர்க்கட்சி அரசியலுக்கு பழகிப்போன அவர் ஆளும் அரசியலுக்கு இன்னும் பக்குவப்படவில்லை என்பதையே காட்டுகிறது. 





நன்றி: Dinakaran 

கசாபை தூக்கிலிட்டதில் அரசியல் லாப நஷ்டம்

குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனை அவ்வளவு சீக்கிரத்தில் நமது அரசுகளால் நிறைவேற்றப்படுவது இல்லை. அஜ்மல் கசாப் வழக்கு ஒரு விதிவிலக்கு. குற்றம் நடந்த நான்கு ஆண்டுகளில் தண்டனை அனுபவித்து விட்டான். 2008 நவம்பர் 26ல் மும்பை தாக்கப்பட்டது. செப்டம்பர் 11ல் அமெரிக்கா தாக்கப்பட்டதை 9/11 என்று சுருக்கமாக குறிப்பிட்டதை பின்பற்றி மும்பை அட்டாக் நமது ஊடகங்களால் 26/11 என்று பெயர் பெற்றது. இன்னும் 5 நாள் காத்திருந்தால் நினைவுநாள் வந்திருக்கும். அதற்கு முன்னால் 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கிய சம்பவத்தில் கைதான காஷ்மீர் ஆசாமி அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கும் முன்னால் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேர் 21 ஆண்டுகளாக காவலில் இருக்கிறார்கள். பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கை கொன்ற பல்வந்த் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மூன்று வழக்குகளிலும் முறையே காஷ்மீர், தமிழக, பஞ்சாப் அரசுகள் கொலையாளிகளுக்கு கருணை காட்டுமாறு குரல் கொடுத்துள்ளன. கசாபுக்கு அவ்வாறு எந்த திசையிலிருந்தும் ஆதரவு குரல் வரவில்லை. அவன் மரணம் இந்த வழக்கின் விசாரணையை முடக்க உதவலாம் என்பதால் பாகிஸ்தான்கூட குரல் எழுப்பவில்லை. மும்பை தாக்குதலில் பலியானவர்கள் 166 பேர். காயம் அடைந்தவர்கள் 300 பேருக்கு மேல். அவர்களின் குடும்பத்தினர் கசாப் தூக்கில் போடப்பட்டதை வரவேற்றுள்ளனர். தாமதமானாலும் நீதி கிடைத்ததே என்று அவர்களில் பலர் திருப்தி தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் பல இடங்களிலும் நாட்டின் வேறு சில பகுதிகளிலும் மக்கள் லட்டு பரிமாறி இந்த மரணத்தை கொண்டாடியிருக்கிறார்கள். எந்த மனிதனின் மரணமும் கொண்டாட்டத்துக்கு உரியது அல்ல என்று நீதி நூல்கள் போதிக்கலாம். பழிக்குப் பழியா என்று பெரிய மனிதர்கள் முகம் சுளிக்கலாம். ஆனால் குற்றம் செய்தவன் தண்டனை பெறுவது என்பது எந்த வகையிலும் பழி வாங்கும் செயலாகாது. அதுதான் உண்மையான தர்மம். சட்டப்படியும் நியாயப்படியும் சரியான செயல். கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் குழந்தைகளையும் பெண்களையும் எந்த தவறும் செய்யாத அப்பாவிகளையும் கொடூரமாக துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொன்று குவித்த பாதகர்களுக்கு இதைவிட கடுமையான தண்டனை கொடுக்க முடியாமல் போனதே என்ற ஏக்கம்தான் 60 மணி நேரத்துக்கு மேலாக உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பான அந்த தாக்குதலை பார்த்தவர்கள் மனதை நிறைத்திருக்கும். நாடாளுமன்றத்தை தாக்கும் முயற்சியை நமது ராணுவ வீரர்களும் போலீஸ்காரர்களும் உயிரைக் கொடுத்து தடுத்தார்கள். இல்லையேல் அன்று இந்தியாவின் தேசிய அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக பலியாகி உலக சரித்திரத்தில் எந்த நாடும் சந்தித்திராத மிகப்பெரிய சோகத்தையும் சோதனையையும் இந்தியா எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். வீரர்களின் தியாகத்தால் அந்த சதி முறியடிக்கப்பட்டது. அந்த தோல்வியை தாங்க முடியாமல் இந்திய குடிமக்களை பழிவாங்குவதற்கு மும்பைக்கு கூலிப்படையை அனுப்பியது பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுத்துறை. டெலிவிஷன் சேனல்கள் விவரம் தெரியாமல் நடத்திய இடைவிடாத ஒளிபரப்பை பார்த்துக் கொண்டே செல்போன் மூலம் கசாபுக்கும் அவனுடன் வந்த 9 பேருக்கும் உத்தரவுகளை பிறப்பித்த அதிகாரிகள் இன்னும் பாகிஸ்தானில் பத்திரமாக இருக்கிறார்கள். எல்லைதாண்டி சென்று அவர்களை வேட்டையாட அமெரிக்காவை போல நாம் வல்லரசு அல்ல. அதனால்தான் தாக்கியவர்களில் செத்தவர்கள் தவிர மிஞ்சிய ஒரே ஆளான கசாபை தூக்கில் போட்டிருக்கிறோம். அதுவும் 53 கோடி செலவு, நான்காண்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு பிறகு. கசாபை தூக்கிலிட்டதில் தவறில்லை. அதை நிறைவேற்ற தேர்ந்தெடுத்த நேரம் பல கேள்விகளுக்கு இடமளிக்கிறது. நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. பல பிரச்னைகளை அரசு சந்திக்க வேண்டும். குஜராத்தில் தேர்தல் வருகிறது. பலவீனமான அரசு, பலவீனமான பிரதமர் என்ற நரேந்திர மோடியின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அனைத்தையும் திசை திருப்ப கசாப் பயன்பட்டிருக்கிறான்.   இதை விமர்சனம் செய்வோர் இருக்கிறார்கள். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுப்பவர்கள் சுறுசுறுப்பாவார்கள். அரபு நாடுகள், சீனா, அமெரிக்கா போன்று உடனே விசாரித்து உடனே மரண தண்டனையை நிறைவேற்றும் வழக்கம் இங்கு இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் ஒரு ஆசாமிதான் தண்டிக்கப்பட்டுள்ளான். 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தனஞ்சய் என்பவன் 2004ல் தூக்கிலிடப்பட்டான். 

'கசாபைக்கூட தூக்கிலிடும் தைரியம் இந்த அரசுக்கு கிடையாது. டெங்கு காய்ச்சலால் இறந்தவனை கயிற்றில் தொங்கவிட்டுள்ளனர்' என்று சிலர் பிரசாரம் செய்கின்றனர். அதை பொருட்படுத்த தேவையில்லை. அதே சமயம், மனித வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிமுக்கியமான முடிவைக்கூட அரசியல் லாப நஷ்டம் பார்த்துதான் எடுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.





நன்றி: Dinakaran 

தர்மபுரி கலவரம் ஒரு காதல் நாடகம்

தர்மபுரி கலவரம் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மகள் ஒரு தலித் வாலிபனை காதலித்து மணம் செய்ததால் மனம் உடைந்த தந்தை தூக்கில் தொங்கினார் என்றும்; அதனால் ஆவேசம் அடைந்த அவரது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஊரை ஒட்டியுள்ள தலித் காலனிகளை சூறையாடியதாகவும் முதலில் கூறப்பட்டது. கலப்பு திருமணத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி உறுதியான நிலை எடுத்துள்ளதன் தொடர்ச்சியாக இச்சம்பவம் சித்தரிக்கப்பட்டது. சிறிய தாமதத்துக்கு பின்னர் அக்கட்சியின் நிறுவனர் அளித்த பேட்டியில் தர்மபுரி கலவரத்துக்கும் தனது கட்சியினருக்கும் தொடர்பில்லை என மறுத்துள்ளார். 'தற்கொலை செய்தவர் விஜயகாந்தின் தேமுதிகவை சேர்ந்தவர். தலித் வீடுகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் வன்னியர்கள் அல்ல. நாங்கள் காதலுக்கு விரோதியும் அல்ல' என விளக்கம் தந்தவர், எந்தெந்த ஜாதிகளை சேர்ந்த எத்தனை பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் வெளியிட்டு இருக்கிறார். தான் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அமைப்பு விரிவாக திட்டமிட்டு தமிழகம் முழுவதும் உள்நோக்கத்துடன் காதல் நாடகத்தையும் கட்டாய திருமணத்தையும் அரங்கேற்றி வருவதாக அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். முதலில் கடைக்கண் பார்வை வீசுவது, அடுத்து கடிதம் கொடுப்பது, அதன் பலனாக வாய்க்கும் முதல் ரகசிய சந்திப்பில் கைபேசி பரிசளிப்பது, அதன் மூலம் நெருக்கத்தை வளர்ப்பது, ஏமாற்றி உறவு கொள்வது, நிர்பந்த சூழலில் தாலி கட்டுவது, சொத்து அல்லது பணம் பறிப்பது, முழுமையாக  கழற்றிவிடுவது ஆகியவை இந்த காதல் நாடகத்தின் காட்சிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் விவரிக்கிறார். 

இவ்வாறான மோசடி ஏனைய மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகம் நடப்பதாக சொல்வதை உறுதிப்படுத்த புள்ளிவிவரங்கள் இல்லை. பேராசையில் மனிதன் செய்யும் பல தில்லுமுல்லு நடவடிக்கைகளில் கபடக் காதலும் அடங்கும். ஆனால் ஜாதி வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க சுலபமான வழி இதுதான் என்று தீர்மானித்து அதற்காக யாரோ திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது உண்மையானால் அரசு உடனே தலையிட்டு தடுக்க வேண்டும். தவறினால் மிகப்பெரிய சமூக சீரழிவு நிகழ்வதை தவிர்க்க இயலாது.






நன்றி: Dinakaran

கருத்து சுதந்திரம் - குற்றவாளிகளுக்கு பயந்து நிரபராதிகள் கைது

பால் தாக்கரே மாதிரி தினமும் எத்தனையோ பேர் பிறக்கிறார்கள், மரிக்கிறார்கள். அதற்கெல்லாம் பந்த் நடத்தினால் மக்கள் என்னாவது? ஃபேஸ்புக்கில் இந்த காமென்ட் போட்ட 21 வயது பெண்ணை மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. ஷாஹீன் தத்தா போட்ட காமென்டை ஆமோதித்து 'லைக்' போட்ட இன்னொரு இளம்பெண்ணுக்கும் அதே கதி.'கருத்து சுதந்திரத்தில் கைவைப்பதா, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடு' என்று பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கோபத்துடன் அறிக்கை விடுத்திருக்கிறார். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான கட்ஜுவுக்கு இருக்கும் சுதந்திரம் மற்றவர்களுக்கு கிடையாது. ஷாஹீன் தன் காமென்டை அழித்துவிட்டு, அதனால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்ன பிறகும் ஒரு கூட்டம் அந்த பெண்ணின் கிளினிக்கை சூறையாடி இருக்கிறது. பல லட்சம் பேர் திரண்ட ஊர்வலத்தின் இறுதியில் கலவரம் நடக்கலாம் என எதிர்பார்த்ததற்கு மாறாக அசம்பாவிதம் ஏதுமின்றி முடிந்ததை பலரும் பாராட்டும் வேளையில் இந்த சம்பவம். மும்பை போலீஸ் கூறும் காரணம் வினோதமாக இருக்கிறது. 'இரண்டு பெண்களையும் நாங்கள் கைது செய்யாமல் இருந்தால் கும்பல் அவர்களை தாக்கி பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்' என்கிறது. குற்றவாளிகளுக்கு பயந்து நிரபராதிகளை கைது செய்வதை நியாயப்படுத்தும் முயற்சிக்கு கைதட்டலாம். ஒரு பிரிவு மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்தியன் பீனல் கோட் 295 ஏ ஷரத்தின்கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பலர் கேலி செய்கிறார்கள். 'இந்த சட்டப்பிரிவின்கீழ் மிகவும் அதிக முறை குற்றம் இழைத்தவர் பால் தாக்கரே அல்லவா?' என்று கேட்கிறார்கள். 

பேச்சுரிமைக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் பேர்பெற்ற இங்கிலாந்தில்கூட இன்டர்நெட் கருத்துக்கள் தொடர்பாக புகார்களும் கைதுகளும் பெருகி வருகின்றன. ஆபாசமாக, அவதூறாக கருத்து வெளியிட்டதாக சென்ற ஆண்டு அங்கு 1,843 புகார்கள் பதிவாகின. 1,286 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அந்த அளவுக்கு கடுமையாக  இந்த சட்டத்தை அமல்படுத்தினால் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கக்கூடும். இப்போதைக்கு காமென்ட் போடும்போது உஷாராக இருப்பதை தவிர வேறு வழியில்லை.





நன்றி: Dinakaran 

திடீர் கோடீஸ்வரர்கள் மரணம்

சாராய சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் சத்தாவும் அவரது சகோதரரும் துப்பாக்கி சண்டையில் உயிரை இழந்திருக்கிறார்கள். சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்திராவிட்டால் டெல்லியில் நடந்த இந்த சம்பவம்தான் தேசிய அளவில் ஊடகங்களில் பிரதான இடத்தை பெற்றிருக்கும். கொலை செய்யப்பட்ட சத்தாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது மிகவும் குறைந்த தொகை; சொத்துக்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆச்சரியமாக தெரியவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. தமிழகத்தைவிட மூன்று மடங்கு பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் முழுவதற்கும் மது சப்ளை செய்தவர் சத்தா ஒருவர்தான். இந்த அளவுக்கு ஒருவர் சொத்து குவிப்பது இந்தியாவில் இப்போது செய்தியே அல்ல. ஆனால் கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்திய ஒருவர் மிகவும் குறுகிய காலத்தில் இத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆவது பொருத்தமற்ற உண்மை. நிச்சயமாக குறுக்கு வழியில் பயணம் செய்தால் மட்டுமே ஒரு ஏழையால் இந்த உயரத்தை தொட முடியும். அந்த குறுக்குவழி பயணத்தில் அவருக்கு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் தாராளமாக உதவியிருக்கிறார்கள். சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது சத்தாவுக்கு மாநிலம் முழுமைக்கும் மது வினியோகம் செய்யும் உரிமம் வழங்கப்பட்டது. அப்போது முலாயம்சிங் முதல்வராக இருந்தார். அமர்சிங் அவருடைய கட்சியில் முக்கிய பொறுப்பைவகித்தார். இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்ட அமர்சிங், டெல்லி அரசியலில் ஒரு முக்கியமான அதிகார தரகராக செயல்பட்டார் என்பது ரகசியமல்ல. சமாஜ்வாடிக்கு பிறகு உ.பி.யில் ஆட்சியை பிடித்த பகுஜன் சமாஜ், சத்தாவின் சாராய சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் முதல்வர் மாயாவதி, முலாயம் சிங்கை காட்டிலும் சத்தாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் சத்தா போன்ற திடீர் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். இந்திய அரசியலில் ஒரு அசிங்கமான முகமாக மக்கள் இதைப்பார்க்கிறார்கள். இதற்கு முடிவு கட்டினால்தான் அரசியலை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்க முடியும்.





நன்றி: Dinakaran

பிஞ்சுகளின் மீதான பாலியல் வன்முறை!

(இவர்கள் தெய்வங்களா? இல்லை, அதையும்விட மேலானவர்கள்!
கேடுகெட்ட இச்சமூகம் இவர்களை ஒதுக்குதல் ஆச்சரியம் இல்லை!)
பிஞ்சுகளின் மீதான பாலியல் வன்முறை!

By சுப்ரஜா ஸ்ரீதரன்(இந்தவார தினமணி கதிரில்)

ஜெனிதா ஊட்டியில் வசித்து வருகிறார். இவருடன் பழகிய பழைய தோழிகள் இப்போது அவருடன் முன் போல சிரித்துப் பேசுவதில்லை. தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கூட வீட்டின் உள்ளே அனுப்பி விட்டு இறுகிய முகத்துடன் பேசுகிறார்கள். முப்பது வருடமாகப் பழகியவர்கள் கூட தங்கள் வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளை இவரிடம் சொல்வதில்லை. இவர்கள் எல்லாரும் புறக்கணிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் செய்து விட்டார் ஜெனிதா?

மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்தித்துச் செயல்படுவதுதான் காரணம்.

சமூகப்பணி - முதுநிலை படித்த இவர் தற்பொழுது இருப்பது ஃப்ரீடம் ஃபர்ம் அமைப்பில். அந்த அமைப்பில் தீவிரமாக ஜெனிதா ஈடுபட ஆரம்பித்ததில் இருந்து அவர் நட்பு வட்டாரம் குறுகிப் போனது. ஜெனிதா இதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. அந்த அமைப்பின் இந்திய இயக்குநர் க்ரேக் உடன் சேர்ந்து தனது பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

அவரே சொல்கிறார்:

""எனது சொந்த ஊர் ஊட்டி. ஆரம்பத்தில் மற்றவர்களைப் போலதான் நானும் இருந்தேன். மாஸ்டர் டிகிரி முடித்தவுடன் என் வாழ்க்கை மாறிப் போனது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்தில் வருடம் முழுவதும் இருபது லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் ஐந்து லட்சம் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்.

சமீபத்தில் எங்களது இயக்குநர் க்ரேக், பாட்னாவில் ஒரு குழந்தையை மீட்கச் சென்றார். இடைத்தரகன் அவரை கஸ்டமர் என்று நம்பி அழைத்துச் சென்றுள்ளான். இரண்டு குழந்தைகளுடன் மூன்றாவதாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை காட்டி, இவளுக்குப் பத்து வயது. வயதுக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஒன்றரை லட்சம்.. ஓட்டல் அறை நாங்களே ஏற்பாடு செய்கிறோம், என்று சொல்ல க்ரேக் அந்த குழந்தையைப் பார்க்கிறார். தான் விலைப் பேசப்படுகிறோம் என்பதே தெரியாமல் அந்த குழந்தை சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. பணம் ஏற்பாடு செய்து கொண்டு வருவதாக சொல்லி திரும்பிய க்ரேக், சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீஸ் துணையுடன், அந்த குழந்தையை மீட்டு உள்ளார். முறைப்படி அது அரசிடம் ஒப்படைக்கப் பட்டு பின் எங்களிடம் வரும். அதற்கு அடிப்படை கல்வி அறிவு, மற்றும் வாழ்க்கையில் சொந்த காலில் நிற்க தொழில் என கற்பித்து சொந்த ஊருக்குக் கொண்டு சேர்ப்போம். சிலர் மன உறுதியுடன் சொந்த காலில் ஏதாவது வேலையில் சேர்ந்து வாழ்க்கையை தொடர்வார்கள்.

உலகம் முழுக்க எங்களது நெட்வொர்க் இருக்கிறது. இந்தோனேஷியாவில் இரண்டு சின்னப் பெண்களை மீட்டு கொண்டு வந்தோம். மீட்டு வருவதோடு நாங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. அவர்களைப் பாலியல் தொழிலுக்கு தள்ளியவர்களை கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தர எங்களிடம் சிறந்த உலகத் தரம் வாய்ந்த வக்கீல்கள் உள்ளனர். அந்த இந்தோனேஷியப் பெண்களை நாங்கள் மீட்ட இடம். வீட்டு வேலைக்கு என்று சொல்லி அழைத்து வந்து அவர்களை தொழிலில் தள்ளியது ஒரு மும்பை கும்பல். அவர்கள் கேஸ் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஊட்டியில் எங்களிடம் சிறப்பு பயிற்சிகள் பெற்று நாட்டுக்கும் திரும்ப அனுப்பி விட்டோம். ஒன்றரை வருடம் முன் வழக்கு விசாரணைக்கு வர அவர்களுக்கு விமான டிக்கெட் வாங்கி அனுப்பி வரவழைத்தோம். கேஸ் நடக்கும் சென்னையில் பத்திரமாக தங்க வைத்து காத்திருந்த அன்றுதான் வக்கீல்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் வெடித்து கேஸ் தள்ளிப் போனது. அவர்கள் திரும்ப அனுப்பப் பட்டனர். அதன் பின் ஒரு முறை ஹியரிங்க் வந்தது. இன்னும் முடியவில்லை.

இந்த மீட்புப் பணியில் நிறைய ஆபத்துகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இது ஒரு கேஸ்தான். இது போல் உலகம் முழுக்க எங்கள் இயக்கம் இயங்கி வருகிறது.

ஆண்களின் வக்கிரத்தனம்தான் இந்த அக்கிரமங்களுக்குக் காரணம். தன் மனைவியிடம் காட்ட முடியாத பாலியல் வன்முறைகளை அவர்கள் இந்தப் பிஞ்சுகள் மீது காண்பிக்கின்றனர். உளவியல்ரீதியாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம் இது. சின்னப் பிஞ்சுகளோடு உறவு கொள்ள உலகம் முழுவதும் காமுகர்கள் காத்திருக்கின்றனர், கழுகுகளைப் போல் பையில் பணத்தை வைத்துக் கொண்டு. பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை இதில் ஈடுபடுத்தும் பெண்கள் உண்டு. பெண்ணின் தாயார், சித்தி, பாட்டி இப்படி பலர் அவர்களை இந்த படுகுழியில் தள்ளுகின்றனர். ஆறேழு வயதிலேயே விலைக்கு வாங்கப்படும் சிறு பெண்கள் பல கைகள் மாறுகிறார்கள். ஒரு பெண் முதல் நாலு நாட்கள் மாறி மாறி ரயிலிலேயே அழைத்துச் செல்லப் பட்டு பல கைகள் மாறி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாள். அவள் உடம்பில் சதைப் பற்று ஏற பன்றிக்கும் முயலுக்கும் கொழுப்பு சேர ஏற்றப் படும் ஊசி ஏற்றப்பட்டதுதான் கொடுமை. பணக்கார வக்கிரத்தனம் கொண்ட பரதேசி ஒருவன் அவளை சுவைக்க மூன்று லட்சம் கொடுத்துள்ளான். நாங்கள் அவளை மீட்கும் போது துவண்டு போயிருந்தாள். பயத்தில் இருந்தாள். எந்த மொழியும் அவளுக்கு தெரியவில்லை. எல்லாமே சைகைதான். நாங்கள் அவளை முறைப்படி மீட்டு வந்தோம். அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து, சொந்த காலில் நிற்க மணி மாலைகள் , கைவினைப் பொருள்கள் செய்ய சொல்லிக் கொடுத்தோம். அவள் எங்களது குழுவிலேயே இணைந்து இப்பொழுது பணியாற்றி வருகிறாள்.

எங்களிடம் பயிற்சிப் பெற்று திரும்பிய பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் கண்காணிப்போம். அவர்களுக்கே தெரியாமல் சில நேரங்களில் கண்காணிப்பதும் உண்டு. ஒரு பெண் புனாவைச் சேர்ந்தவள். அவள் சிறு வயதில் இருந்தே குரூப் டான்ஸ் ஆடுபவளாக மாற்றப்பட்டாள். அவளின் பெற்றோரே அவளை அந்த தொழிலில் ஈடுபடுத்தினர். ஊர் ஊராக சென்று நடனமாடும் குழு அவளின் கற்பை சிறு வயதிலேயே சூறையாடி விட்டது. அவளை மீட்டு நல்ல வழிக்கு திருப்பி புனா சென்ற அவள், மீண்டும் நடனமாட அந்த குழுவிற்குச் சென்ற போது துன்புறுத்தப்பட திரும்ப எங்களிடமே வந்து விட்டாள். அவளுக்கு கால் சென்டர் பணிக்கான பயிற்சி அளித்து ஒரு நிறுவனத்தில் வேலையும் வாங்கி தந்து விட்டோம். இப்பொழுது நலமாய் இருக்கிறாள்.

சென்னை போன்ற நகரங்களிலும் இது சர்வ சாதாரணமாய் நடக்கிறது. அதற்கு என்று தரகர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு இது பற்றி ஏதேனும் சின்னத் தகவல் கொடுத்தால் கூட நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். எங்களிடம் பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் கஸ்டமர்களைப் போல் செல்வார்கள். குறிப்பாக இளைஞர்கள், வெளி நாட்டவர்கள் அணுகினால்தான் இடைத் தரகர்கள் சிறு பெண்களை காட்டுவார்கள். இதில் இந்த மீட்பு பணியில் கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது உயிருக்கே ஆபத்தில் கூட முடிந்து விடும் அபாயம் உள்ளது. நீங்கள் உங்கள் ஏரியாவில் எந்த சிறு பெண்ணிடமாவது சம்பந்தமே இல்லாமல் கரிசனம் காட்டுபவர்கள் இருந்தால் உஷாராக இருங்கள். அவர்கள் அந்த கும்பலின் நெட்வொர்க்கில் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. வீட்டு வேலைக்கு என்று சிறு பெண்களை அழைத்துச் செல்பவர்கள் யார், நிரந்தர முகவரி என்ன என தீர ஆராய்ந்து அனுப்பச் சொல்லுங்கள். திறந்த கண்களோடும் பனித்த இதயத்தோடும் இருங்கள். உங்களால் ஒரு பெண் காப்பாற்றப் படலாம்.

Monday, 19 November 2012

சி.ஏ.ஜி.க்கு ஏன் பயப்பட வேண்டும் ?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றன. விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்று ஒவ்வொருவரின் குடும்ப பட்ஜெட்டையும் பல்வேறு பிரச்சினைகள் பாதிக்கின்றன. அவற்றை எல்லாம் தாங்கிக்கொள்ளும் மக்களிடம் கடந்த சில ஆண்டுகளாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவது, தொடர்ச்சியாக கூறப்பட்டு வரும் ஊழல்புகார்கள்தான். தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி என்று அழைக்கப்படும் சி.ஏ.ஜி. அமைப்பின் தலைவர் தனது அறிக்கையில், தொடர்ந்து பல ஊழல்களை, முறைகேடுகளை பகிரங்கப்படுத்தி வந்திருக்கிறார். சி.ஏ.ஜி. அறிக்கை என்பது காலாகாலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒன்றுதான். மத்திய-மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகளை ஆராய்ந்து, ஒவ்வொரு துறையிலும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் முறையாக செலவழிக்கப்படுகிறதா?, துறையின் செயல்பாடுகளும் எப்படி இருக்கிறது? நிறை-குறை இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து அறிக்கையாக தருவார்கள். இந்த அறிக்கை மூலம், நாட்டில் என்ன நடக்கிறது? என்பதை பொதுமக்களும், என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்பதை அரசாங்கமும் முடிவு செய்வதற்கு அது உறுதுணையாக இருக்கும்.  

சி.ஏ.ஜி. பதவிக்கு பொருத்தமானவரை பிரதமரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி நியமிக்கிறார். தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி பதவி என்பது சாதாரணமானது அல்ல. அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பதவி. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் அந்தஸ்திற்கு இணையானது. சி.ஏ.ஜி. அறிக்கையை பாராளுமன்றத்தில் உள்ள பொது கணக்கு குழு ஆராய்ந்து, நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யும். தற்போது தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக இருப்பவர் வினோத் ராய். இவர், பதவி பொறுப்பை ஏற்றதில் இருந்து பல ஊழல்களை வெளியே கொண்டு வந்திருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் என்று பல ஊழல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார். அந்த ஊழல்கள், பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன. ஊழல்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது, நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடக்கின்றன.

சி.ஏ.ஜி. அறிக்கை என்றாலே, இனிமேல் ஊழல்வாதிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். மக்களுக்கும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி மீது பெரிய நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல், ஊழல்கள் நடந்தால், நிச்சயமாக சி.ஏ.ஜி. அதிகாரியின் கழுகு பார்வையில் இருந்து தப்பவே முடியாது என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால், சி.ஏ.ஜி. அறிக்கைகளால் அரசுகளுக்கு சங்கடம்தான். சி.ஏ.ஜி. அறிக்கையில் இனிமேல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் எந்த ஊழலும் வராமல், தூய்மையான அரசாங்கத்தை நடத்துவோம், ஊழலுக்கு விடைகொடுப்போம், நாட்டில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதி அளித்துக்கொண்டு, பணியாற்றவேண்டிய அரசியல்வாதிகள், சி.ஏ.ஜி. அமைப்பையே குறைகூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஊழல் இல்லையென்றால், சி.ஏ.ஜி.க்கு ஏன் பயப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் கேள்வி.

சி.ஏ.ஜி. அமைப்பை இன்னும் அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றுவதற்கு பதிலாக, இதை பலவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபடுகிறதோ? என்ற சந்தேகத்தை பிரதமர் அலுவலக இணை மந்திரி நாராயணசாமி உருவாக்கி உள்ளார். சி.ஏ.ஜி. அமைப்பில் இப்போது தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி என்ற ஒரேயரு பதவி இருக்கிறது. இதை, பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக மாற்றுவது குறித்து மத்திய அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசின் முடிவுகளை, சி.ஏ.ஜி. அமைப்பு விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது. தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அரசியல் அமைப்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் எல்லைக்குள் இருந்து பணியாற்ற வேண்டும் என்று கூறிவிட்டு, நாடு முழுவதிலும் இருந்து வந்த எதிர்ப்பு அலைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்போது, தான் அவ்வாறு பேசவில்லை, குறிப்பிட்டு சி.ஏ.ஜி.யை சொல்லவில்லை. தன் பேச்சு திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று சமாளிக்கிறார்.

அரசியல்வாதிகளே எப்போதும் எதையாவது கூறிவிட்டு, அது பாதகமான விளைவை ஏற்படுத்தினால், பத்திரிகையாளர்கள் திரித்து எழுதிவிட்டார்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால், மத்திய மந்திரி நாராயணசாமி சொன்ன கருத்தை, பி.டி.ஐ. செய்தி நிறுவனம் டேப் எடுத்தே வைத்திருக்கிறது. சி.ஏ.ஜி. அமைப்பை பலவீனப்படுத்த முயற்சி செய்யவில்லை என்றால், நல்லதுதான். ஆனால், இனிமேலும் ஒருபோதும் அதை பலவீனப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையே வரக்கூடாது என்பதுதான் பொது மக்களின் வேண்டுகோள்.




நன்றி: Daily Thanthi

Sunday, 18 November 2012

சவிதாவின் மரணம் கூறும் செய்திகள்

தமிழக மக்கள் எப்போதுமே அன்புக்கும், இரக்கத்துக்கும் பெயர்போனவர்கள் என்பது காலாகாலமாக சரித்திர காலத்தில் இருந்தே நிகழ்ந்து வரும் ஒரு உண்மையாகும். அதனால்தான் கர்நாடகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநில மக்களை, தங்கள் சொந்த சகோதர, சகோதரிகளாக கருதி, அவர்களின் சுகதுக்கங்களில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்கிறார்கள். தங்கள் அண்டை மாநில சகோதரி, தங்கள்மீது தான் செலுத்தும் அன்பை காட்டாவிட்டாலும், இவர்கள் அந்த மக்கள் மீது வைத்திருக்கும் பாசத்தின் அளவு ஒருபோதும் குறைவதில்லை. கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மாட்டேன் என்று சொன்னபோதும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடாது, காட்கில் கொள்கைப்படி, எந்த மாநிலத்தில் அணுமின் சக்தி நிலையம் இருக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு மொத்த உற்பத்தியில் 50 சதவீதம்தான் வழங்க வேண்டும், மீதமுள்ள மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அந்த வகையில், 250 மெகாவாட் மின்சாரத்தை கர்நாடகத்துக்கு தரவேண்டும் என்று கர்நாடக மின்சாரத்துறை மந்திரி ஷோபா கூறியபோதும், தமிழக மக்கள் ஆத்திரப்படவில்லை. எங்கள் மாநிலத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சினை, மின்சார பிரச்சினை ஆகியவற்றை நன்கு தெரிநதும், இவ்வாறு நடந்துகொள்கிறார்களே என்ற வருத்தம், தமிழக மக்களுக்கு உண்டு.

ஆனாலும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அயர்லாந்து நாட்டில் ஏற்பட்ட கொடுமை கண்டு, ஒட்டுமொத்த தமிழகமே துடித்துவிட்டது. பெல்காமில் கர்நாடக மின்சார பகிர்மான கழக செயற்பொறியாளராக பணியாற்றி, ஓய்வுபெற்ற அண்டனப்பாவின் ஒரே மகள் சவிதா. பல் மருத்துவரான சவிதாவுக்கு வடகர்நாடகத்தில் உள்ள ஹவேரி என்ற ஊரில் உள்ள பிரவீண் என்ற பொறியாளருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மணமக்கள் இன்பத்தின் உச்சியிலேயே சிறகடித்து பறந்தனர். பிரவீண், அயர்லாந்து நாட்டில் உள்ள கால்வே என்ற நகரில் பணிபுரிந்ததால், சவிதா தன் இல்வாழ்க்கையைத் தொடங்க அங்கு சென்றார். மணவாழ்க்கையின் அடையாளமாக சவிதா கருவுற்றதும், மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார். தங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கவேண்டும் என்று இருவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

ஆனால், கருவுற்ற 17-வது வாரத்தில் சவிதாவுக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. கரு சிதைவுக்கான அறிகுறியும் அவருக்கு தென்பட்டது. மருத்துவம் படித்த பெண்ணாயிற்றே, உயிரைக்காப்பாற்ற கருச்சிதைவு செய்துவிடுங்கள்   என்று சவிதாவும்,  பிரவீணும்,  டாக்டரிடம் கெஞ்சினார்கள், கதறினார்கள். ஆனால், மருத்துவமனை டாக்டர்கள் இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு. எங்கள் மதத்தில் அபார்ஷன் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும் என்று கூறி, மறுத்துவிட்டனர். சவிதா கேட்கிறார், உங்கள் நாட்டில் உள்ள இந்த சட்டம், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்குத்தானே பொருநதும். நான் இந்து பெண்ணல்லவா? எனக்கு எப்படி பொருந்தும்? என் உயிரை காப்பாற்றவிடாமல் இந்த சட்டத்தை ஏன் குறுக்கே போடுகிறீர்கள்? அபார்ஷன் செய்துவிடுங்கள் என்று கதறி அழுதார். அவரது கணவர் பிரவீணும், டாக்டர்களிடம் கெஞ்சினார். ஆனால், மத சட்டத்தில் இடமில்லாததால், சவிதா என்ற பிஞ்சுமலர் கருகிவிட்டது. அயர்லாந்து நாட்டில் இந்த சம்பவம், பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

உடனடியாக இத்தகைய சட்டத்தில், மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர். ஏற்கனவே, தாயின் உயிருக்கு ஆபத்து என்றால், அபார்ஷன் செய்யலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு இருந்தாலும், அதை அந்த நாட்டு அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. மத நம்பிக்கை வேண்டியதுதான். ஆனால், இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மதங்களில் வைத்திருந்த கோட்பாடுகள், இந்த காலத்திற்கு பொருந்தாது. காலம் மாறும்போது, கோட்பாடுகளும் மாறவேண்டும். அன்றைய காலக்கட்டங்களில், தவறான உறவுகளைத்தடுக்க அபார்ஷன் தடை செய்யப்பட்டது சரிதான். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் தாயின் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது, அதே சட்டத்தை காரணம் காட்டுவது சரியல்ல. மத்திய அரசாங்கம் உடனடியாக இந்த பிரச்சினையை அயர்லாந்து நாட்டு அரசாங்கத்திற்கும், போப் ஆண்டவரின் கவனத்திற்கும் எடுத்துச்செல்ல வேண்டும். சவிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் வேறொரு சவிதாவுக்கு ஏற்படாமல் இருக்க, சர்வதேச நாடுகளும், கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையும் நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே, தமிழக மக்களின் கோரிக்கையாகும்.





நன்றி: Daily Thanthi

Saturday, 17 November 2012

படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்ந்தால்...

ஓருபுறம் மத்திய செய்தித் துறை அமைச்சர் மணீஷ் திவாரி. மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங். இந்த இருவருக்கும் வெறுப்பையும், கோபத்தையும், ஏளனத்தையும் வெளிக்காட்டக் கிடைத்த வடிகால், தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய். அலைக்கற்றை ஏலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் வரவில்லை என்பதும், ஜி.எஸ்.எம். பிரிவில் அரசு எதிர்பார்த்த ரூ. 28,000 கோடிக்குப் பதில் கிடைத்திருக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் ரூ. 9,400 கோடிதான் என்பதும் அவரைக் குற்றம் சாட்ட இவர்களுக்குக் கிடைத்திருக்கும் நொண்டிச் சாக்கு!

முதலில் நாம் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பு. நாடாளுமன்றத்தைப்போல, தேர்தல் ஆணையத்தைப்போல, இந்திய அரசின் இன்றியமையாத, பிரித்துப் பார்க்க முடியாத அமைப்பு அது. இந்திய அரசியல் சட்டத்தின் பேரில் பதவி உறுதிமொழி எடுத்த ஓர் அமைச்சர், அந்த அமைப்பையோ, அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவரைப் பற்றியோ குற்றம் குறை கூறுவது தவறு. அப்படிச் சொன்னால் அது அரசைக் குறை கூறுவதாகத்தான் கருத வேண்டும்.

இந்த ஏலத்தின் பின்னால் கூட்டு சதி காணப்படுகிறது என்கிற ஐயப்பாடு ஒருபுறம் இருக்கட்டும். தனியார் நிறுவனங்களுக்கு, சட்டத்தின் வரம்புகளுக்கு உள்பட்டு, நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாத வகையில், குறைந்த விலைக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டை "முறைப்படி' செய்வதுதான் அரசின் உள்நோக்கம் என்பதையும் தள்ளி வைத்து விடுவோம். குறைந்த அளவிலான ஏலத்தொகைக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன.

பல எதார்த்தப் பொருளாதார உண்மைகளை, அரசுத் தரப்பு சிந்தித்துப் பார்க்காமல் எடுத்த முடிவுகள்தான் இன்று ஏலத்தில் எடுக்க ஒப்பந்தப்புள்ளிகள் வராமல் இருப்பதற்குக் காரணம் என்பதை வெளியில் தெரியாமல் மறைப்பதற்குத்தான், தேவையில்லாமல் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரிமீது பாயத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார நிலைமையும், முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கையின்மையும்தான் இப்படியொரு சந்தி சிரிக்கும் நிலைமைக்கு அலைக்கற்றை ஏலத்தைக் கொண்டு நிறுத்தியிருக்கின்றன என்பதை ஏன் அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட உத்தேச இழப்பு என்பது 2008-இல் இருந்த நிலைமையைக் கருத்தில்கொண்டு தரப்பட்ட கணக்கு. அன்றைய நிலையில் இந்தியாவில் இருந்த அலைபேசி சந்தாதாரர்கள் வெறும் 2.34 கோடி மட்டுமே. மொத்த அலைக்கற்றை அளவில் வெறும் 24%. அன்றைய நிலையில் 8 கோடி சந்தாதாரர்களுக்கு 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்று விரிவுபடுத்தும் வாய்ப்பு காணப்பட்ட நிலைமை.

அன்றைய நிலைமையை யோசித்துப் பார்த்தால் பிரமிப்பு மேலிடும். மாதத்துக்கு எண்பது லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் புதிதாக அலைபேசி இணைப்புகள் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. 2008-09-இன் ஒரு மாதத்தில் 2 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்ததாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. அந்த நிலைமையைக் கருத்தில்கொள்ளும்போது, இந்த அளவுக்குக் குறைவான விலைக்கு அலைக்கற்றையை ஏலமில்லாமல் அளித்ததால் அரசுக்கு இந்த அளவு உத்தேச இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டி இருந்தார். அதில் என்ன தவறு?

இன்றைய நிலைமை அதுவல்ல. ஏறத்தாழ 9 கோடி அலைபேசி சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். 70% அலைக்கற்றை பயன்பாடு காணப்படுகிறது. சொல்லப்போனால், புதிய இணைப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்ட தேக்க நிலைமை.

இன்னொன்றையும் அரசு கருத்தில்கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். சராசரி அலைபேசி உபயோகக் கட்டணம் 2008-இல் மாதத்துக்கு ரூ. 316 ஆக இருந்தது. இப்போது வெறும் ரூ. 97 ஆகக் குறைந்திருக்கிறது. பயன்பாட்டையும் குறைத்து, பயனாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பில்லாத நிலையில், அலைக்கற்றை ஏலத்திற்கான வரவேற்பும் குறையக்கூடும் என்று அரசு எதிர்பார்க்காதது ஏன்?

2008-இல் சர்வதேச அளவில் அன்னிய நேரடி முதலீடு இந்தியாவில் வந்து கொட்டிக் கொண்டிருந்தது. 2010-இல் கூட 3ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏல வருவாய் கிடைத்ததன் காரணம், பொருளாதாரத் தேக்கம் இல்லாமல் இருந்ததுதான். இன்று, தொடர்ந்து வெளிவரும் ஊழல்களும், முறைகேடுகளும், அரசின் நிலையற்ற தன்மையும், சர்வதேசப் பொருளாதாரத் தேக்கமும், முதலீட்டாளர்களுக்கு இந்தியாமீது நம்பிக்கை இல்லாத நிலைமை. இதுவும்கூட எதிர்பார்த்த ஏல வருவாய் கிடைக்காததற்குக் காரணமாக இருக்கக்கூடும். இந்தச் சூழலில் பெரிய தொகைக்கு ஒப்பந்தப்புள்ளிகளை வழங்கி ஏலம் கேட்கத் தனியார் நிறுவனங்கள் தயங்கும் என்பதை அரசு ஏன் முன்கூட்டியே உணர்ந்து காப்புத்தொகையை நிர்ணயிக்கவில்லை?

அதையெல்லாம் சிந்தித்துப் பார்ப்பதற்குப் பதிலாக, மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர்களும் ஏதோ தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி தவறாகக் கணித்துவிட்டதாக அவர்மீது பாய்ந்து குதற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு விரல் அவரைக் குற்றம் சாட்டும்போது நான்கு விரல்கள் அரசை நோக்கித் திரும்பி இருப்பதை உணர்ந்தால் நல்லது. வம்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் களங்கத்தைத் துடைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்ந்தால் அது அவரவர் முகத்தில்தான் திரும்பிவந்து விழும் என்பதுகூட அமைச்சர் மணீஷ் திவாரிக்குத் தெரியாமல் போனது வேதனைக்குரிய ஒன்று. அவர் தன்னை இன்னும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வப் பத்திரிகைத் தொடர்பாளராக நினைத்துக்கொண்டு செயல்படுவதால் ஏற்படும் கோளாறு இது. இப்படியெல்லாம் பேசுவது அமைச்சருக்கும் அழகல்ல. அரசுக்கும் அழகல்ல!





நன்றி: Dinamani

அலைக்கற்றை மறுஏலம் - திருடன் கையில் சாவி

அலைக்கற்றை ஏலத்தில் எதிர்பார்த்த தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் கிடைத்துள்ளது. ஜிஎஸ்எம் பிரிவில் அரசுக்கு ரூ.28,000 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த ஏலத்தின் மூலம் அரசுக்குக் கிடைத்துள்ள ஒப்பந்தப்புள்ளிகள் ரூ.9,400 கோடி வரைதான்.

இதையும் கூட வரவு என்று சொல்லிவிட முடியாது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்படாத நிறுவனங்கள், தாங்கள் ஏற்கெனவே உரிமம் பெற்றபோது செலுத்திய முன்பணத்தை இப்போது கழித்துக்கொள்ள முடியும். ஆகவே, இந்த ஏலத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.5,000 கோடிதான்.

ஏலத்தில் பங்குகொள்வோருக்கு காப்புத்தொகை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால்தான் ஏலத்தில் பலர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டாலும், அந்த வாதம் ஏற்கக்கூடியதாக இல்லை. காப்புத்தொகை என்பது, ஏலம் எடுக்காத நிலையில் திருப்பி அளிக்கப்படும் தொகை. பல கோடிகளில் புரளும், பல கோடிகள் லாபமடைய விழையும் இந்த நிறுவனங்களுக்கு அது ஒன்றும் பெரிய தொகை அல்ல.

கடந்த 3 நாள் ஏலத்தில் மும்பை, தில்லி, கர்நாடகம் ஆகியவற்றுக்கான ஏல ஒப்பந்தப்புள்ளிகளை யாருமே கொடுக்கவில்லை என்பதுதான் இந்த விவகாரத்தில் நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

ஜிஎஸ்எம் பிரிவில் ஏலத்தின் மூலம் ரூ.28,000 கோடி கிடைக்கும் என்று அரசு தீர்மானித்தபோது, அந்தத் தொகையில் 65% பெங்களூர், தில்லி போன்ற பெருநகரின் செல்போன் பயன்பாட்டு அளவைக் கருதித் தீர்மானிக்கப்பட்டது என்பது அரசுக்கும், இந்த ஏலத்தில் பங்கேற்கும் மற்ற நிறுவனங்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் அந்தப் பகுதிகளுக்கு ஏன் யாருமே ஒப்பந்தப்புள்ளி தரவில்லை?

மதுக்கடை ஏலத்தில், ஏலம் கேட்பவர்களே தங்களுக்குள் கூட்டணி (சிண்டிகேட்) அமைத்துக்கொண்டு, ஒவ்வொரு கடைக்கும் அரசு நிர்ணயிக்கும் விலையைவிட சில ஆயிரங்கள் மட்டுமே கூடுதலாகக் கேட்க வேண்டும் என்று முன்னதாகவே தீர்மானித்துக்கொண்டு வந்து ஏலம் கேட்பார்கள். அத்தகைய "சிண்டிகேட்' தற்போது அலைக்கற்றை ஏலத்திலும் ஏற்பட்டு இருக்கிறது என்கின்ற சந்தேகத்தை இந்த ஜிஎஸ்எம் அலைக்கற்றை ஏலம் உண்டாக்குகிறது.

இந்த அலைக்கற்றை நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் மத்திய தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபலின் பேச்சும் அமைந்திருக்கிறது. அலைக்கற்றை ஏலத்துக்கான விலையைத் தீர்மானிப்பதில் அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நாம் விலையைத் தீர்மானித்ததால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது என்று அமைச்சரே கருத்துத் தெரிவிக்கிறார். இந்த நிதியாண்டுக்குள் ஏலம் போகாத இடங்களுக்கும், சிஎம்டிஏ பிரிவில் 800 மெகாஹெர்ட்ஸýக்கும் ஏலம் நடத்தப்படும் என்றும் கூறுகிறார்.

ஏற்கெனவே சிஎம்டிஏ பிரிவில் ஏலக்கேட்புக்கு விண்ணப்பித்த நிறுவனங்களில் சில, அடிப்படைத் தொகை மிக அதிகம் என்று கூறி விலகிக்கொண்டன. ஆகவே, தற்போது இந்தப் பிரிவுக்குப் புதிய தொகையைத் தீர்மானிக்கும் கட்டாயத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்ளாகியிருக்கிறது. இந்நிலையில், ஜிஎஸ்எம் பிரிவிலும், எதிர்பார்த்த ஏலத்தொகை கிடைக்கவில்லை என்பதும், ஏலம் போகாத பகுதிகளுக்கு மீண்டும் ஏலம் என்பதும், மத்திய அரசு விலையைக் குறைத்துக் காப்புத்தொகையைத் தீர்மானிக்கப் போகிறது என்பதையே காட்டுகிறது.

மத்திய அரசு செய்ய வேண்டியது, மறுஏலம் நடத்துவோம் என்கிற அறிவிப்பு அல்ல. மாறாக, ஏலம் போகாத அலைக்கற்றைத் தொகுப்பு, அரசு நிறுவனமாகிய பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும் என்கிற அறிவிப்புதான். ஆனால், அதைச் செய்ய அரசு ஏன் தயங்குகிறது? ஏன் ஏலத்தின் அடிப்படைத் தொகையைக் குறைத்துக்கொள்ள முற்படுகிறது? அதில்தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது.

செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் அதிக லாபம் அடைந்தவர்கள் தனியார் நிறுவனங்கள் மட்டுமே. பிஎஸ்என்எல், மற்றும் எம்டிஎன்எல் ஆகியவை செல்போன் சேவையில் இருந்தாலும் அவற்றால் லாபகரமாகச் செயல்பட முடியவில்லை. அல்லது செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. திறமையின்மையும், அரசு நிறுவனம் என்பதால் மெத்தனமும் இருக்கிறது என்றாலும், அவை மட்டுமே இழப்புக்குக் காரணமல்ல.

இந்நிலையில், இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, யாரும் ஏலம் கேட்காத தில்லி, மும்பை போன்ற பகுதிகளை பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு ஒதுக்கினால், இந்நிறுவனங்களுக்கு தானாகவே அதிக லாபம் கிடைக்குமே! குறைந்தபட்சம், தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு ஏலம் கேட்க முன்வரக்கூடுமே!

சிஏஜி அறிக்கை கூறியபடி, தற்போது ஏலத் தொகை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், சிஏஜி அறிக்கையைப் பொய்யாக்க வேண்டும் என்று அலைக்கற்றை நிறுவனங்கள் திட்டம்போட்டுச் செயல்படுகின்றன. அதற்கு அரசும் மறைமுகமாகத் துணை போகிறது.

ஜிஎஸ்எம் ஏலத்தின் முடிவில் தீர்மானிக்கப்படும் விலையை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கெனவே 4.4 மெகாஹெர்ட்ஸýக்கு அதிகமாக அலைக்கற்றையைப் பயன்படுத்திய நிறுவனங்கள் ஒருதடவைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பும், இவ்வாறான சிண்டிகேட் அமையக் காரணமாக அமைந்துவிட்டது.

யாரும் விலை கேட்காத தில்லி, மும்பை, கர்நாடகம் ஆகிய மூன்றையும் அரசு நிறுவனங்களுக்கே ஒதுக்கினால்தான், தனியார் செல்போன் நிறுவனங்களின் கூட்டணி உடையும். அவர்கள் அச்சத்துடன் நியாயமான ஏலக்கேட்பில் ஈடுபடுவார்கள்.

இதெல்லாம் அரசுக்குத் தெரியாதா என்ன? "சிஏஜி அறிக்கையின் கணிப்புத் தவறு. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. ஏலத்தில் பங்குகொள்ளக்கூடிய நிறுவனங்கள் தயாராக இல்லாத நிலையில், ஊடகங்கள் ஒன்றுமில்லாத பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகின்றன', என்று நிரூபிக்க எத்தனிக்கிறது அரசு. தனியார் நிறுவனங்களுக்குக் குறைந்த விலைக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஒதுக்கித் தங்களது தனியார்மய விசுவாசத்தைக் காட்ட விரும்புகிறது.

திருடன் கையில் சாவியைக் கொடுத்தால் என்னவெல்லாம் நடக்குமோ அவையெல்லாம் நடக்கிறது!




நன்றி: Dinamani

இந்தியாவைச் சுரண்ட இப்படியும் ஒரு வழியா?

ஓரு புறம் ஊழல், முறைகேடுகள் என்று நடந்து கொண்டிருந்தாலும், மத்திய அமைச்சரவையில் சில அமைச்சர்கள் நாட்டு நலனையும், அடித்தட்டு மக்களின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்படுவது சற்று ஆறுதலாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடாவடிக் கோரிக்கையை நிராகரித்ததால் இலாகா மாற்றம் செய்யப்பட்ட ஜெய்பால் ரெட்டியைப் போலவே, சில தனியார் சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களின் முறையற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற விடாமல் தடுத்திருக்கிறார் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களின் தேவைதான் என்ன என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவர்களது தலையீடு பல ஏழை விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டுமளவுக்கு கிராமப்புற நிதி நிலைமையைப் பாதித்திருக்கிறது. அது போதாதென்று, சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களைப் பாதுகாக்க மத்திய அரசு ஒரு மசோதாவை நிறைவேற்ற இருந்ததை நல்லவேளை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலையிட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்.

1992-இல் தேசிய ஊரக மற்றும் விவசாய வளர்ச்சி வங்கி (நபார்டு) கிராமப்புற விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும், கிராமப்புற மகளிரின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் முன்வைத்த யோசனைதான் சுயநிதிக் குழு அமைப்புகள். வங்கிகள் மூலம் இந்த சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர்கள் சிறு தொழில்கள், வியாபாரங்களில் ஈடுபட்டு ஒட்டுமொத்த கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பார்கள் என்பதுதான் அந்தத் திட்டத்தின் உள்நோக்கம்.

எந்தவிதப் பிணையுமில்லாமல் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்குவதில் முதலில் வங்கிகள் தயக்கம் காட்டியதென்னவோ உண்மை. ஆனால், ஏறத்தாழ 100% கடன் திருப்பி அடைக்கப்படுவது கண்டு வங்கிகளும் ஆர்வமாக சுயஉதவிக் குழுக்களுக்கு உதவ முன்வந்தன. 1992-இல் வெறும் 255 அமைப்புகள் மட்டுமே இயங்கி வந்தது போய், 2010-க்குள் ஏறத்தாழ 69.53 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் இந்தியா முழுவதும் செயல்படத் தொடங்கின. ஏறத்தாழ 28,038.28 கோடி ரூபாய் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பற்றுவரவு செய்யப்பட்டது.

சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு இரட்டிப்பு லாபம். வங்கிகள் எவ்வளவு கடன் அளிக்கின்றனவோ அதில் சரிபாதித் தொகை குறைந்த வட்டியில் நபார்டால் தரப்பட்டுவிடுகிறது. மேலும், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளை அந்த வங்கிகளில் வைத்திருக்கிறார்கள். கடனாகத் தரப்பட்ட பணம் வங்கிகளில் தொடர்ந்து புழங்குகிறது. அதனால் மொத்தக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வங்கிகளின் பங்களிப்பு.

அப்படி இருக்கும்போது, இடைத்தரகர்களாக எதற்காக சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்கள் என்கிற கேள்விக்குப் பதிலில்லை. காளான்களாக முளைத்துவிட்ட இந்த நிறுவனங்கள் வங்கிகளிலிருந்து சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் கொடுப்பதற்குக் குறைந்த வட்டியில் கடன் பெற்று 24% முதல் 60% வட்டிக்கு அவர்களுக்குக் கடன் கொடுப்பது மட்டுமல்ல, மிரட்டி உதைத்துக் கடனைத் திருப்பிப் பெறவும் தொடங்கின. ஆந்திரத்திலுள்ள ஒரு சிறுநிதி கடனுதவி நிறுவனம் 2011-12 நிதியாண்டில் மட்டும் 112 கோடி ரூபாய் லாபம் காட்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இடைத்தரகு நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஏராளம்.

தொடர்ந்து நடந்த விவசாயிகள் தற்கொலைகள் ஆந்திர அரசை இந்த சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டமொன்றை இயற்ற வைத்தது. அதன் தொடர்ச்சியாக இந்த நிறுவனங்களின் லாபம் குறைந்தது. மாநில அரசின் சட்டத்தை முடக்கி, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அவர்கள் கொண்டுவர முயன்ற மசோதாவைத்தான் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

எங்களால் எல்லா கிராமங்களையும் சென்றடைய முடியாததாலும், சுயஉதவிக் குழுக்களின் தேவைகளுக்கு உடனுக்குடன் ஈடுகொடுக்க முடியாததாலும் சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களின் மூலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம் என்று அரசோ, வங்கிகளோ சொல்வதில் உண்மையில்லை. இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை சென்றடையும் அமைப்பு ரீதியிலான இணைப்பு அரசுக்கும், வங்கிகளுக்கும் இல்லாமல் இல்லை.

அரசு மற்றும் பட்டியல் வங்கிகளுக்கு இந்தியாவில் 83,000-க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இதில் 15,400 கிராம வங்கிகளின் கிளைகளும் அடக்கம். லட்சத்துக்கும் மேற்பட்ட அடிப்படை விவசாயக் கடன் குழுமங்களும், 12,000 கூட்டுறவு வங்கிக் கிளைகளும் இருக்கின்றன. சுயஉதவிக் குழுக்களை தபால் நிலையங்களுடன் இணைத்து சேமிப்புக் கணக்குகளை இயக்க முடியும். இந்தியாவிலுள்ள 1.55 லட்சம் தபால் நிலையங்களில் 1.39 லட்சம் தபால் நிலையங்கள் கிராமப்புறங்களில்தான் இயங்குகின்றன.

கிராம வங்கிகளை நிறுவியதே கிராமப்புற ஏழைகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதற்காகத்தான். அப்படி இருக்கும்போது, எதற்காக இடைத்தரகர்களாக சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்கள்? "நபார்டு' தரும் புள்ளிவிவரப்படி பார்த்தால், பட்டியல் மற்றும் அரசு வங்கிகள், 1,407 சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கும் குறைந்த வட்டிக் கடன் மார்ச் 2010 வரை 10,095 கோடி ரூபாய்! வேடிக்கை என்னவென்றால் கிராம வங்கிகள்கூட 103 தனியார் கடனுதவி நிறுவனங்களுக்கு 52.22 கோடி ரூபாய் வழங்கி இருக்கின்றன.

இந்தத் தனியார் சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்கள், மக்கள் பணத்தில் இயங்கும் வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டிக்குப் பணம் பெற்று அதிக வட்டிக்கு ஏழை விவசாயிகளுக்கும், சுயஉதவிக் குழுக்களுக்கும் கொடுத்துப் பிழைக்கின்றன. இந்த நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டிய அரசு, அவர்களைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் சட்டம் இயற்ற முற்படுகிறது. அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மட்டும் தலையிடாமல் இருந்தால் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகி இருக்கும்.

இந்தியாவைச் சுரண்ட இப்படியும் ஒரு வழியா?





நன்றி: Dinamani