Sunday, 12 August 2012

தீர்ப்புகள்: கடவுள்தான் கண் திறக்க வேண்டும்

தீர்ப்புகள்: கடவுள்தான் கண் திறக்க வேண்டும்

குடிபோதையில் 6 பேர் மீது கார் ஏற்றி கொலை செய்தவருக்கு 2 வருட சிறை போதும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. சம்பவம் நடந்தது 1999ல். பலியானவர்களில் 3 பேர் போலீஸ்காரர்கள். ஓட்டியது தொழிலதிபரின் மகன் சஞ்சீவ் நந்தா. முன்னாள் கடற்படை தளபதியின் பேரன். கீழ் கோர்ட் 5 ஆண்டு தண்டனை கொடுத்தது. கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்திய குற்றம்தானே என்று ஹைகோர்ட் இரண்டாக குறைத்தது. தெரிந்தே ஏற்படுத்திய மரணம் கொலைக்கு சமம் என்று டெல்லி போலீஸ் அப்பீல் செய்தது. அதை ஏற்றுக் கொண்டு சுப்ரீம் கோர்ட் இவ்வாறு இரண்டாண்டு வழங்கியுள்ளது ஆச்சரியம். காரில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது மனிதாபிமானம் இல்லாத செயல் என நீதிபதி கண்டித்துள்ளார். அதற்காக 50 லட்சம் அபராதம் விதித்து, 2 ஆண்டுகள் நந்தா பொது சேவை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மோதி விட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவ மத்திய அரசு இந்த நிதியை பயன்படுத்த கோர்ட் ஆலோசனை கூறியிருக்கிறது.

 கார், லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடும் செய்திகளை நிறைய பார்த்திருக்கிறோம். பணம் இருப்பவர்கள் இதுபோன்ற வழக்குகளில் சுலபமாக தண்டனைக்கு தப்பிவிடுகிறார்கள்  என்ற கருத்தும் மக்களிடம் இருக்கிறது. அதனால்தான் விபத்து ஏற்படுத்திய டிரைவர் சிக்கினால் தர்ம அடி கொடுக்கிறார்கள். வாகனத்தை கொளுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஆறு உயிர்கள் பலியாக காரணமான குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது அவர்களுக்கு நெருடலாகவே இருக்கும். குடியும் கார்களும் தாறுமாறாக பெருகிவிட்டதால் பாதசாரிகள் அனுபவிக்கும் கஷ்டங்களை நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். நடைபாதைகள் நடப்பவர்களுக்காக அல்ல என்பதை எல்லா நகரங்களிலும் பார்க்க முடிகிறது. அது பல நூறு கோடிகள் கைமாறும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பு என்பது பலருக்கு தெரியாது. அதனால்தான் பாதசாரிகள் நடுரோட்டுக்கு வர நேர்கிறது. அவர்களின் உயிர் கேள்விக்குறி ஆகிறது. பாதுகாப்புக்கு உத்தரவிடும் அதிகாரம் கொண்ட நீதிமன்றம் வெறும் கவலையோடு ஒதுங்கிவிட்டால் கடவுள்தான் கண் திறக்க வேண்டும்.



நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment