Saturday, 18 August 2012

உடல் உறுப்பு தானம் செய்வீர்

உடல் உறுப்பு தானம் செய்வீர்

உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் சொல்லிக் கொள்ளும்படியாக வளரவில்லை. எத்தனை கோடி மக்கள் இருந்தும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரும் கொடையாளர்கள் இல்லாததால் தினமும் நூற்றுக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக். உயிருடன் இருக்கும் போது சில உறுப்புகளையும் இறந்த பிறகு சில உறுப்புகளையும் தானம் செய்யலாம். இது தவிர மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்பு மாற்று சிகிக்சையில் பொருத்தப்படும் பெரும்பாலான உறுப்புகளை பெறலாம். ஆனால், மூளைச்சாவு அடைந்தவர்களை இறந்தவர்களாக இந்தியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதயம் நின்று போனால்தான் அவர்களைப் பொறுத்தவரை மரணம். இந்த தவறான எண்ணம் காரணமாக உறுப்பு தானம் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை பெற முடியாமல் போய் விடுகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து இதயத்தில் தொடங்கி சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், தோல், கணையம் என 37 வகையான உறுப்புகளை பெற முடியும்.உயிருடன்  இருப்பவர்களிடம் இருந்து ஒரு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதி என்று குறிப்பிட்ட சில பாகங்களை பெற்று பலரை உயிர் பிழைக்க வைக்க முடியும். இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியும். இறந்த பின்பு உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக தரலாம். இதற்கெல்லாம் தேவைப்படுவது விழிப்புணர்வு. உறுப்பு தானத்தில் உலகிலேயே அமெரிக்காதான் முதல் இடத்தில் இருக்கிறது. 10 லட்சம் பேருக்கு 22 பேர் உறுப்பு தானம் செய்கிறார்கள். ஆனால், அங்கு உறுப்பு தானத்துக்காக காத்திருபோர் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

இந்தியாவில் உறுப்பு தானம் செய்வோர் மிகவும் குறைவு. 10 லட்சம் பேருக்கு வெறும் 0.05 பேர்தான். இவர்களும் பெரும்பாலும் உறுப்பு தானம் தேவைப்படுபவர்களின் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். யாரோ ஒருவருக்கு தனது உறுப்புகளை தானம் செய்யும் எண்ணம் இன்னும் இங்கு வரவில்லை. அப்படி மாற்றம் வந்து விட்டால் உறுப்பு தானம் கிடைக்காமல் இறப்பவர்கள் இருக்க மாட்டார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் உறுப்பு தானம் செய்பவர்கள் அதிகம். அந்த வகையில் நாம் முன்னோடி என பெருமைபட்டுக் கொள்ளலாம்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment