Monday, 13 August 2012

"வாழையடி வாழை" தமிழ்நாடு மலைவாழை விவசாயிகள் சங்கம் செய்த சாதனை

"வாழையடி வாழை" தமிழ்நாடு மலைவாழை விவசாயிகள் சங்கம் செய்த சாதனை 

எந்த பிரச்னை வந்தாலும் அதை தீர்க்கத்தான் அரசாங்கம் இருக்கிறதே என சொல்லிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. நாமே களத்தில் இறங்கினால்தான் தீர்வு கிடைக்கும். அப்படித்தான் திண்டுக்கல்லை சேர்ந்த விவசாயிகள் சங்கம் களத்தில் இறங்கியது. அழியும் நிலைக்குப் போய்விட்ட வாழப்பழ வகைகளை மீண்டும் விளைவித்து சாதனை படைத்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார கிராமங்கள் விருப்பாட்சி, சிறுமலை. இங்கு விளையும் சுவையான வாழைப்பழ வகைகள்  சிறுமலை மற்றும் விருப்பாட்சி. மிகவும் சுவையான இவற்றை மலை வாழைப்பழங்கள் என்பார்கள். பழனி மலை முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க இந்த பழங்களைத்தான் பயன்படுத்துவார்கள். வேறு எங்கும் இவை விளையாது. இதனாலேயே சர்வதேச அளவில் புவிசார் குறியீடு சான்றிதழையும் பெற்றுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வாழை மரங்களை கடந்த 1970களில் ஒரு வகை வைரஸ் தாக்கியது. பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் குலை தள்ளாமலேயே நோய்வாய்ப்பட்டு சரிந்தன. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வைரஸ் தாக்குதலால் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு மலைவாழை விவசாயிகள் சங்கம் உருவானது. 350 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கம் மலைவாழை பழங்களை மீண்டும் பெரிய அளவில் பயிரிட முயற்சிகளை மேற்கொண்டது. விவசாயிகளின் ஆர்வத்தை பார்த்த தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும் சுவையான மலைவாழை பழங்களை மீண்டும் பயிரிடவும் வாழை இனத்தை அழியாமல் காக்கவும் உதவின. இடைவிடாத முயற்சிக்கு பலன் கிடைத்தது.இப்போது 3,000 ஏக்கரில் மீண்டும் சிறுமலை, விருப்பாட்சி வாழை பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. மேலும் 10 ஆயிரம் ஏக்கருக்கு விரிவுபடுத்த விவசாயிகள் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதைப் பாராட்டித்தான் மத்திய அரசு ரூ.10 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. மக்கள்தான் அரசாங்கம். அரசாங்கம் செய்யும் என எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதை நாமே செய்து கொள்ள வேண்டும். சென்னையின் சில பகுதிகளில் திருடர் பயத்தில் இருந்து விடுபட சாலைகளில் கேட், சந்திப்புகளில் சிசிடிவி, இரவு ரோந்து போன்றவற்றை மக்களே பார்த்துக் கொள்கிறார்கள். இதுதான் உண்மையான மக்களாட்சி.





நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment