Sunday, 26 August 2012

சொந்த நாட்டில் அகதிகள்


சொந்த நாட்டில் அகதிகள் என்ற முத்திரை மோசமானது மட்டுமல்ல, முரண்பாடானதும்கூட. அசாம் மக்களுக்கு அந்த நிலைமை உண்டானது துரதிர்ஷ்டம். வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் எல்லோரும் அவரவர் வசிக்கும் மாநிலத்தை விட்டு விட்டு சொந்த மண்ணுக்கு திரும்புகிறார்கள் என்ற தகவல் தவறானது. மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அப்படி கிளம்பவில்லை. அவர்களுக்கு மிரட்டல் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான சாயல் இருக்கிறது. மங்கோலிய இனத்துக்குரிய தோற்றம். புனே நகரில் இந்த தோற்றத்துடன் இருந்தவர்களை மடக்கிய கும்பல் அவர்கள் அசாமியர்கள் அல்ல என தெரிந்ததும் தாக்காமல் விட்டிருக்கிறது. மும்பையில் சென்ற ஆண்டு மராத்திய தீவிரவாதி களின் தாக்குதலை எதிர்கொண்ட எல்லோருமே பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள். உத்தர பிரதேசத்து ஆட்களை யாரும் தொடவில்லை. அது பம்பாயாக இருந்த காலத்தில் மதராசிகளுக்கு எதிராக நடந்த தாக்குதலில் தமிழர்கள் மட்டும்தான் அடிவாங்கினார்கள்.வெறியாட்டத்திலும் தேர்ந்த ஒரு திட்டமிடுதல் இருப்பதற்கு இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். காவிரி, முல்லை பெரியாறு விவகாரங்களின் உபயத்தில் தமிழன் அதற்கு ரொம்பவே பழகிவிட்டான். காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்ட இந்துக்கள் அந்த வேர்களை தொலைத்து தலைமுறைகள் கடந்துவிட்டன. முன்னுதாரணங்களுக்கு பஞ்சமில்லை என்றாலும் இப்போது நடப்பது இன்னும் புதிராகவே தோன்றுகிறது.சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை என்பதால்தான் இந்த அசாமிகள் கன்னியாகுமரி வரை விலகி வந்து வேலை செய்தார்கள். அத்தனை பேரும் திரும்பி சென்றால் அங்கே தங்குவதற்கு கூட இடம் போதாது. இங்கிருந்து அனுப்பி  கொண்டிருந்த சொற்ப பணத்தில் செலவுகளை சமாளித்து  கொண்டிருந்த பெற்றோரும் உற்றாரும் இனி என்ன செய்வார்கள்?
முதலமைச்சர்கள், டிஜிபிக்கள் ரயில் நிலையத்துக்கு வந்து தாஜா செய்ததையும் பொருட்படுத்தாமல் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் நின்றுகொண்டே பயணிக்க துணிந்தார்கள் என்றால் பாதுகாப்பு விஷயத்தில் அரசாங்கம் மீதும் காவல்துறை மீதும் அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்றுதானே அர்த்தம்? 


நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment