Sunday, 26 August 2012

விக்கிலீக்சை இறுக்கும் அரசியல் சதுரங்கம்

விக்கிலீக்சை இறுக்கும் அரசியல் சதுரங்கம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் விவகாரம் தொடர்கதையாக நீள்கிறது. அரசாங்க ரகசியங்களை அவர் அம்பலப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் பல நாடுகளுக்கு இடையிலான உறவில் பிரச்னை உருவானது. அசாஞ்ச் கைதான பிறகு அந்த புகைச்சல் அடங்கிவிட்டது. அதற்கு பதிலாக வேறு வகையில் சர்வதேச உறவுகள் சிக்கலை சந்திக்கின்றன. விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய ரகசிய ஆவனங்களில் பெரும் பகுதி அமெரிக்க அரசுக்கு சொந்தமானவை. எனவே அமெரிக்கா அவரை பிடித்து தண்டிக்க மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஸ்வீடன் நாட்டு பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக வந்த புகாரின் பேரில் அசாஞ்சை கைது செய்ய ஐரோப்பிய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. லண்டன் கோர்ட்டில் அவர் போட்ட அப்பீல் மனு தள்ளுபடி ஆனது. அதை தொடர்ந்து அங்குள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் ஜூன் மாதம் அசாஞ்ச் தஞ்சம் புகுந்தார். ஈக்வடார் அரசு அவருக்கு அடைக்கலம் அளிப்பதாக அறிவித்தது. பிரிட்டன் அதை ஏற்கவில்லை. தூதரகங்கள் எல்லாம் அவற்றை அமைத்திருக்கும் நாடுகளுக்கு சொந்தமே தவிர, அமைந்திருக்கும் நாட்டுக்கு அவற்றின் மீது எந்த அதிகாரமும் கிடையாது என்பது சர்வதேச மரபு. பிரிட்டன் அதை மதிக்காமல் தூதரகத்துக்குள் போலீசை அனுப்பி அசாஞ்சை பிடிக்க விரும்புவதால் ஈக்வடாருக்கு கோபம். இது புதிய காலனியாதிக்கம் எனக்கூறி ஏனைய தென் அமெரிக்க நாடுகளை அணி திரட்டுகிறது. அசாஞ்ச் பத்திரமாக ஈக்வடார் நாட்டுக்கு செல்வாரா அல்லது மீண்டும் கைதாவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும். மீடியாவை சந்திக்க விரும்புவதாக அசாஞ்ச் தகவல் அனுப்பியுள்ளார்.

 தூதரகத்தின் சில பகுதிகளில் லண்டன் போலீஸ் கால் வைக்க அனுமதி தேவையில்லை என்பதால் அசாஞ்ச் உஷாராக பால்கனியில் நின்று பேட்டி அளிக்கக்கூடும். ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் மதிப்பதாக கூறும் மேலைநாடுகள் அசாஞ்ச் விஷயத்தில் வேறு மாதிரி நடக்கின்றன. அதே சமயம், இப்போது அவரை ஆதரிக்கும் லத்தீன்  அமெரிக்க நாடுகள் அப்படியொன்றும் மனித உரிமைகளை மதிப்பவை அல்ல. ஒரு தனி மனிதரை முன்னிட்டு நான்கு கண்டங்களில் நடைபெறும் அரசியல் சதுரங்கத்தில் எத்தனை ஆட்டக்காரர்கள் என்பதை தெரிந்துகொள்ளவே இன்னும் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.


நன்றி : Dinakaran

No comments:

Post a Comment