Sunday, 12 August 2012

முற்பகல் செய்யின்... ஈழம் எதிர்த்த கலைஞர்

முற்பகல் செய்யின்... ஈழம் எதிர்த்த கலைஞர்


சென்னையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்திருந்த, "இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு' (டெசோ) இன்று நடக்குமா, நடக்காதா என்ற நிலையில், "ஈழம்' குறித்து பேசும் கருணாநிதி, தான் ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது, "ஈழம்' குறித்து பேசியவர்கள் மீது, அவர் தொடுத்த யுத்தங்கள் அதிகம்.

கடந்த, 1990 ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்த போது, பழ.நெடுமாறன், "தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாடு' நடத்த திட்டமிட்டார். அந்த மாநாட்டில், "ஈழம்' என்ற தலைப்பில், கண்காட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தவிர, மாநாடு தொடர்புடைய, சாலை.இளந்திரையன் உள்ளிட்ட பலர், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.சென்னையில், 1996ம் ஆண்டு, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பா.ம.க., நடத்திய மாநாட்டில், "ஈழம்' குறித்து பேசியதற்காக, சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க., கூட்டணியில் இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில், 2008 டிச., 27ம் தேதி, "ஈழ உலக அங்கீகார மாநாடு' நடத்தினார். அப்போது, "ஈழம்' என்ற வார்த்தையை போஸ்டர் ஒட்டியும், பெயின்ட் அடித்தும் போலீசார் மறைத்தனர். அப்போதும், தமிழக முதல்வராக கருணாநிதி தான் இருந்தார்."இலங்கை போரை நிறுத்த வேண்டும்' என, தீக்குளித்து இறந்த முத்துக்குமரனுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சாணுரப்பட்டியில் ரத்தினவேலன், தன் சொந்த இடத்தில் சிலை வைக்க முயன்றார்.

அதற்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் இயங்கிய அரசு, சிலை வைக்க தடை விதித்தது. கலெக்டர் சண்முகம் சிலை வைக்க அனுமதி தர மறுத்தார். ரத்தினவேலன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, "தனியார் இடத்தில் சிலை வைக்க தடை விதிக்க முடியாது. அது அவரது சொந்த விருப்பம்' என்று தெரிவித்தார்.இப்படி, "ஈழம்' குறித்து பேசியவர்கள், மாநாடு நடத்தியவர்கள் மீது, கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, தாக்குதல் நடத்தியுள்ளார். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது போல, கருணாநிதி நடத்தும், "டெசோ' நாடகத்துக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

நன்றி:
இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment