Sunday, 26 August 2012

இந்த நாட்டின் சாபக்கேடு


சாலையில் நிகழும் ஒவ்வொரு மரணமும் மனதை உலுக்குகிறது. தினம் தோறும் நடக்கிறது. விதம் விதமான விபத்துகள். காஞ்சிபுரம் அருகே பிற்பகலில் விபத்தில் ஒன்பது பேர் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள். அந்த கொடூரத்தை வர்ணிக்க கோரம் என்ற வார்த்தை போதாது. பலியானவர்கள் செய்த பாவம் என்ன? தேசிய நெடுஞ்சாலையில் உப்பு லாரியை நிறுத்தியிருக்கிறான் ஒரு மடையன். வயிறு நிறைய சாப்பிட்ட மயக்கத்தில் கண்ணசந்து அதில் பஸ்ஸை மோதியிருக்கிறான் இன்னொருவன். உடல் சிதைந்து கதறிக் கொண்டிருந்தவர்களை பார்த்து 108க்கு பொதுமக்கள் போன் போட்டால் ஆம்புலன்ஸ் வரவில்லை. நெடுஞ்சாலை ரோந்துக்காக நியமித்த காவல்துறை வாகனத்தையும் காணவில்லை. மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போனால் அவசர சிகிச்சைக்கு அங்கே வசதிகள் போதவில்லை. நாடு முழுவதும் இதுதான் நிலைமை. மனித உயிருக்கு எந்த மதிப்பும் கிடையாது. அதனால்தான் சாலை மரணத்தில் இந்தியாவுக்கு முதல் இடம். 6 நிமிடத்துக்கு ஒரு உயிர் பலியாகிறது. ஆண்டுக்கு 15 லட்சம் விபத்துகள். 1.4 லட்சம் மரணங்கள். பதிவு செய்யப்படாத கிராம விபத்துகள், டிஸ்சார்ஜ் ஆனபின் நேரும் மரணங்கள் தனி. உயிர் பலியால் ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் இழப்பு. காயம் அடையும் 13 லட்சம் பேருக்கு ஏற்படும் இழப்பு வேறு கணக்கு. மொத்த ஊழல்களையும் ஒன்றாக கூட்டினாலும் நெருங்க முடியாது. ஒரு லட்சம் நிவாரணம் கொடுப்பதோடு அரசு கைகழுவுகிறது. சிகிச்சை செலவு, வருமான இழப்பு எல்லாம் குடும்பத்தின் தலையில்.

உலக வாகனங்களில் 1 சதவீதம்தான் இந்தியாவில் ஓடுகிறது. ஆனால் விபத்து மரணங்களில் 11 சதவீதம் இங்கே நடக்கிறது. ஏனென்றால் எந்த சட்டமும் இங்கே அமலில் இல்லை. லைசென்ஸ் வாங்குவது முதல் விபத்து வழக்கில் விடுதலையாவது வரையில் கடைந்தெடுத்த ஊழல். குடிகாரன் கொன்றால் தூக்கு. குடிபோதையில் டிரைவர் 50 பேரை கொன்றால் வெறும் அபராதம். அந்த தைரியத்தில்தான் மணல் கொள்ளையர்கள் தாசில்தார் மீது லாரி ஏற்றி கொல்கிறார்கள். குற்றம் செய்தவர்கள் எப்படியாவது தப்பித்து விடுகிறார்கள். சட்டத்தையும் விதிகளையும்  மதித்து நடப்பவர்கள்தான் சாலைகளில் உயிரை விடுகிறார்கள் என்பது இந்த நாட்டின் சாபக்கேடு.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment