Sunday, 12 August 2012

மின்சார உற்பத்தி வெளிச்சம் பிறக்குமா?

மின்சார உற்பத்தி வெளிச்சம் பிறக்குமா?

உலகமே இதுவரை கண்டிராத மிகப்பெரிய இருட்டடிப்பாம். 22 மாநிலங்களில் 67 கோடி மக்கள் இருட்டில் தள்ளப்பட்டதை உலக சாதனையாக சித்தரிக்கிறார்கள். ரயில்கள் நின்றன. மெட்ரோ ரயில் நிலையங்கள் பூட்டப்பட்டன. சிக்னல்கள் இயங்காமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன்கள் ரத்து. கடைகள், கம்பெனிகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. குடிநீர் வினியோகம் நின்றது. அவமானமாக இருக்கிறது. அட்டகாசமான பொருளாதார வளர்ச்சி; வல்லரசாக உருவெடுக்கிறது இந்தியா என்று அசட்டுத்தனமாக ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். மின்சாரம் இல்லாமல் எதுவுமே நடக்காது. வீடானாலும் நாடானாலும் அதுதான் உண்மை. ஆனாலும் ஏதேதோ சொல்லி மின்சார உற்பத்தி அதிகரிப்பதை தடுக்கிறது ஒரு கூட்டம். நாட்டின் இன்றைய உற்பத்தி திறன் 205 ஜிகாவாட். தேவை இதைவிட மிக அதிகம். இன்னும் ஐந்தாண்டுக்குள் மேலும் 76 ஜிகாவாட் அதிகரிக்க 40,000 கோடி டாலர் மதிப்பில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் 85 ஜிகாவாட்தான் சேர்க்க முடிந்தது. அதை நினைத்தால் புதிய இலக்கை அடைய முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீரில் இருந்து தயாரிக்கும் மின்சாரம் 19 சதவீதமாக இருந்தது. படிப்படியாக குறைந்து வருகிறது. பருவமழை தவறினால் இதுதான் நடக்கும். மழைக்கு பதில் நிலத்தடி நீரை எடுக்க விவசாயிகளுக்கு அதிக மின்சாரம் தேவை. காற்று, வெயில் எல்லாம் முழுமையாக நம்ப முடியாது. நிலக்கரிதான் நிச்சயம். ஆனால் கோல் இந்தியா அரசு நிறுவனமாக இருந்தாலும் தனியார் போல் லாப நோக்கில் செயல்படுகிறது. இங்குள்ள சுரங்கங்களில் உற்பத்தி அதிகரிக்கவில்லை. இறக்குமதி செய்யவும் தயாராக இல்லை.

பொது மின் தொகுப்பில் இருந்து சில மாநிலங்கள் நிர்ணயித்த அளவுக்கு மேல் மின்சாரத்தை இழுக்கும்போது மொத்த வினியோகமும் பணால். அதுதான் இப்போது பார்ப்பது. உற்பத்தி ஆகிற மின்சாரத்தை எப்படி பயன்படுத்துகிறோம்? வினியோகத்தில் இழப்பு 20 சதவீதம். இலவச வினியோகம் 20 சதவீதம். திருட்டு 20 சதவீதம். ஏழை முதல் கோடீஸ்வரன் வரை வெட்கமில்லாமல் மின்சாரம் திருடும் நாடு இது. இவ்வளவு மோசமான சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் இப்போதைக்கு சாத்தியமாக தோன்றவில்லை.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment