Sunday, 26 August 2012

தமிழக மீனவர் உரிமை

தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளில் நமது மீனவர்கள் 181 தாக்குதல்களை சந்தித்துள்ளதாக ஒரு கணக்கு இருக்கிறது. ஏறத்தாழ நூறு பேர் இறந்திருக்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது புதிராக இருக்கிறது. சின்னஞ்சிறு நாட்டின் கடற்படைக்கு அத்தனை துணிச்சல் உண்டாக காரணம் இருந்தாக வேண்டும். எல்லை தாண்டி வருவதால்தான் விரட்டுகிறோம் என அவர்கள் சொல்வது முழு உண்மையாக தோன்றவில்லை. இந்தியா 1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக கொடுத்த பிறகுதான் இந்த எல்லை பிரச்னையே முளைக்கிறது. எனினும் அந்த தீவை உள்ளடக்கிய பாக்  நீரிணையில் , ஜலசந்திக்கு என்ன அழகான  தமிழ் வார்த்தை , தமிழக மீனவர்களுக்கு உரிமை இருப்பதாக இருதரப்பு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. மீன் பிடிக்கவும், தீவில் வலைகளை உலர்த்தவும், திருவிழாவுக்கு செல்லவும் உரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது. திடீரென 1983ல் இலங்கையில் இன கலவரம் வெடித்தபோது அந்த சண்டையில் நமது மீனவர்கள் உயிருக்கு ஆபத்து நேரக்கூடாது என்பதால் அங்கே போகாதீர்கள் என மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.நீரிணைக்கு தெற்கிலுள்ள மன்னார் வளைகுடா, வடக்கிலுள்ள வங்காள விரிகுடா பகுதிகளுக்காக இரு நாடுகளும் செய்துகொண்ட 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தில்தான் மீனவர்கள் அவரவர் நாட்டின் கடல் எல்லையை தாண்டக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை அந்த இரு பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். இப்போது விடுதலை புலிகளால் பிரச்னை இல்லை என்பதால் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமையை மறுக்க இலங்கை அரசுக்கு இனி எந்த முகாந்திரமும் கிடையாது. அதன் கடற்படை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புலப்படவில்லை போலிருக்கிறது. இதை தவிரவும் சில பிரச்னைகள் இருக்கின்றன. தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் படகுகள், வலைகள் குறித்து இலங்கை மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இரு தரப்பும் பேசியதில் தீர்வு எட்டவில்லை. ஆகவே, மத்திய மாநில அரசுகள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து மீனவர்களையே முன்னிறுத்தி இலங்கையுடன் பேசி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நன்றி: Dinakaranl

No comments:

Post a Comment