Saturday, 18 August 2012

வதந்திகளைத் தடுத்து நிறுத்துங்கள்

வதந்திகளைத் தடுத்து நிறுத்துங்கள்

அது சுதந்திர போராட்ட காலம். பல பகுதிகளில் கலவரம். பிரிட்டிஷ் மேல்மட்ட தலைவர்கள் லண்டனில் கூடினர். இந்தியாவுக்கு விடுதலை கொடுத்து விடலாமா என்று ஆலோசனை. கூடவே கூடாது; இந்தியர்கள் இன்னும் சுய ஆட்சிக்கு தயாராகவில்லை என சிலர் ஆட்சேபித்தனர். கையில் ஒரு கரித்துண்டு கிடைத்தால் போதும்; இந்தியாவை மீண்டும் பல தேசங்களாக ஆக்கிவிடலாம் என்று ஒரு தளபதி சொன்னாராம். மதம், ஜாதி, மொழி என பல வகையிலும் மனதால் பிரிந்து கிடக்கும் மக்களில் யாரேனும் ஒருவரை பற்றி ஒரு சுவரில் அவதூறு எழுதினால் உடனே கலவரம் வெடிக்கும் என்ற அர்த்தத்தில் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இந்த நூற்றாண்டிலும் அந்த கருத்து உண்மையாக வாழ்கிறது. செல்போனில் குறுந்தகவல் யார் அனுப்பியது? எதற்காக அனுப்பினார்? உண்மையாக இருக்குமா? வெறும் மிரட்டலா? எந்த கேள்விக்கும் பதில் தேடும் மனநிலையில் இங்கே எவரும் இல்லை. அசாமில் போடோ பழங்குடி மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எங்கள் நிலங்களையும் பிழைப்பையும் பறிக்கிறார்கள் என்பது போடோக்களின் புகார். அவர்களைவிட உரிமைகளில் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்பது முஸ்லிம்களின் நிலைப்பாடு. பக்கத்து நாடான பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது பெரும்பான்மை இனத்தவரான பவுத்தர்கள் நடத்திய தாக்குதல் இணையதளங்கள் மூலம் பரவிய விதம் இங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கி இருந்ததால், அசாம் சம்பவங்கள் அதை மேலும் விசிறிவிட உதவியது.

சீன பூகம்பம், தாய்லாந்து ஆர்ப்பாட்டம் என பல ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களை அப்படியே பர்மாவில் நடந்ததாக இணையத்தில் யாரோ சித்தரித்துள்ளனர் என்பது நிறைய பேருக்கு தெரியாததால் பதற்றம் நீடித்தது. அதை பயன்படுத்தி விஷமிகள் அசாமியர்களை குறிவைத்து மிரட்டல் எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகின்றனர். ஒட்டுமொத்த வடமாநில மக்களும் இதனால் மிரண்டு போயிருக்கிறார்கள். பிரதமர் சொன்னதுபோல இதில் அந்நிய சதியும் இருக்கக்கூடும். வதந்திகளை உடனே தடுக்க தவறினால் ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையிலும் பிரச்னைகள் விசுவரூபம் எடுக்கும். நிச்சயமாக அது இந்தியாவுக்கு நல்லதல்ல.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment