Sunday, 26 August 2012

நாடாளுமன்றத்தை முடக்குவது ஆபத்தான விளையாட்டு

நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்ற பாரதிய ஜனதா கட்சியின் அறிவிப்பில் பளிச்சென்று வெளிப்படுவது ஆணவம். 'பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் விலக வேண்டும்; நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும்; இதற்கு அரசு சம்மதித்தால் சபை நடக்கவிடுவோம்' என்று முரண்டு பிடிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளே விரும்பாத கோரிக்கையை காங்கிரஸ் எப்படி ஏற்றுக் கொள்ளும் என்பதை பா.ஜ தலைவர்கள் விளக்க வேண்டும். 'நிலக்கரி எடுக்கும் உரிமத்தை ஏலம் விடாமல் கம்பெனிகளுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு வந்திருக்க வேண்டிய பல்லாயிரம் கோடி தனியாருக்கு போயிருக்கிறது' என்று கணக்காயர் அறிக்கை கூறுகிறது. நிலக்கரி உரிமம் வழங்குவது அப்போது பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், முறைகேடுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்பது பா.ஜ வாதம். 'ஏலம் வேண்டாம் என்று  மேற்கு வங்கம், ஒடிசா,  ஜார்கண்ட், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் எதிர்த்ததால் ஒதுக்கீடு செய்தோம். அதில் ஒளிவுமறைவு இல்லை' என்கிறது அரசு. முழுமையாக விவாதிக்கவும் புகார்களுக்கு பதில் அளிக்கவும் தயார் என்கிறார் பிரதமர். விவாதத்தில் பங்கேற்று பிரச்னையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி தனது குற்றச்சாட்டுகளை நாட்டு மக்கள் முன்பு நிரூபிக்க பா.ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பேச்சாற்றல் மிகுந்த அதன் தலைவர்கள் வாதத்தை நேரடி ஒளிபரப்பில் மக்கள் கேட்கட்டும். விரிவான விவாதத்துக்கு வாக்குறுதி அளித்த அரசு கடைசி நேரத்தில் ஜகா வாங்கினால் அதையும் மக்கள் பார்க்கட்டும். பிரதமர் பதிலளித்தால் கேட்கட்டும். பிறகு அவர்களே தீர்ப்பு வழங்கட்டும். எதுவுமே வேண்டாம், கீழே இறங்கு என்று கோஷமிட்டால் எடியூரப்பா முகமும் பெல்லாரி சுரங்கமும்தான் மக்களின் நினைவுக்கு வரும். ஏலத்தை எதிர்த்தவை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதும்கூட. நிலக்கரி தவிரவும் இந்த நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. இயற்ற வேண்டிய, திருத்த வேண்டிய சட்டங்கள் காத்திருக்கின்றன. அதையெல்லாம் மறந்துவிட்டு நாடாளுமன்றத்தை முடக்குவது மக்களின் உரிமைகளை நசுக்குவதற்கு சமம். அந்த ஆபத்தான விளையாட்டு ஒரு தேசிய கட்சிக்கு தேவையற்றது.



நன்றி: Dinakaran

No comments:

Post a Comment