Friday, 10 August 2012

அவர்களும் மனிதர்கள்

அவர்களும் மனிதர்கள்

காவல் துறையின் மெத்தனம் பற்றி பத்தி பத்தியாக எழுதும் பத்திரிகைகள், ஒரு புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கும்போது அதை கண்டுகொள்வதில்லை என்று உயர் அதிகாரிகளுக்கு ஒரு ஆதங்கம் உண்டு. காவல் துறை மட்டுமல்ல எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவரவர் கடமையை ஒழுங்காக செய்யும்போது யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். கடமையை செய்ய தவறும்போதுதான் அத்தனை கண்களும் நம்மை கவனிக்கின்றன. சட்டமும் அப்படித்தான் செயல்படுகிறது. இருந்தாலும் எப்போதாவது எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகளை ஊடகங்கள் பதிவு செய்ய தவறுவதில்லை. நடிகை ஷோபனா புகார் கொடுத்த சில மணி நேரத்துக்குள் காவல்துறை பம்பரமாக சுழன்று அவரது கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த செய்தி அத்தகைய ஒன்று. ஆழ்வார்பேட்டையில் செல்வந்தர்கள் வசிக்கும் அமைதியான பகுதியில் ஷோபனா குடியிருக்கிறார். அருகிலுள்ள பிளாட்பாரத்தில் தள்ளுவண்டியில் டீக்கடை நடத்துகிறார் ஒரு பெண்மணி. அங்கு டீ குடிக்கும் வாலிபர்கள், தன்னிடம் நடனம் கற்றுக் கொள்ள வரும் பெண்களை கிண்டல் செய்வதாகவும் தட்டிக் கேட்டால் மிரட்டுவதாகவும் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் நடிகை. உடனே விரைந்து சென்று டீக்கடையை அப்புறப்படுத்திய காவலர்கள், நடன மாணவிகளின் பாதுகாப்புக்காக சீருடை அணியாமல் அப்பகுதியில் ரோந்து செல்லவும் ஆரம்பித்துள்ளனர். செல்வாக்கு உள்ளவர்களுக்கு சட்டம் செல்லப்பிள்ளை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக சைக்கிளுக்கு காற்றடித்து பிழைக்கும் பெரியவர் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. அவருக்கும் முன்னாலிருந்து டீக்கடை நடத்தி வந்த நெல்லைக்கார பெண்மணிக்கு ஷோபனா வீட்டின் காவலாளிதான் உள்ளிருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து கொடுத்து உதவுவாராம். சமீபத்தில் குடிவந்த ஷோபனாவுக்கு இது தெரிந்ததும் காவலாளியை கண்டித்துள்ளார். டீக்கடை பெண்மணி முன்வந்து  மன்னிப்பு கேட்டும் பயனில்லை. சைக்கிளுக்கு காற்றடிப்பவருக்கும் மூன்று முறை அம்மணியால் இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறதாம். அதிகாரிகள் தீர விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டதால் இப்போது அவருக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.பங்களாக்களில் எப்போதும் ஏதாவது வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். அந்த வேலைகளை செய்யும் கூலித் தொழிலாளர்கள் அவ்வப்போது ஒரு டீ குடிக்க ஒரு கிலோமீட்டர் போய்வர இயலாது. விட மாட்டார்கள். சாப்பாடும் பிரச்னைதான். அளவு சாப்பாடு 80 ரூபாய் விற்கும் பவன்களின் கிளைகள்தான் பக்கத்தில் இருக்கும்.   இப்படி ஒருவாய் சோற்றுக்கும் தேனீருக்கும் தவிக்கும் ஏழைகளுக்கு உதவ முளைத்தவை தள்ளுவண்டி கடைகள். உழைப்பும் பிழைப்பும் சங்கமமாவது அங்கேதான். சைக்கிளுக்கு காற்றடிப்பவர், அறுந்த செருப்புக்கு தையல் போட்டு தருபவர், குடை ரிப்பேர் செய்பவர், இஸ்திரிக்காரர், வறுகடலை வண்டிக்காரர் இவர்களெல்லாம் மேல்தட்டு, நடுத்தட்டு மக்களுக்கு அவசியப்படாமல் போய்விட்ட உழைப்பாளிகள். கீழ்த்தட்டு மக்களின் பிழைப்புக்கு இன்றியமையாத அச்சாணிகள். இவர்களை வேரோடு பிடுங்கி தூரத்தில் விட்டெறிய வேண்டும் என்று நினைப்பது பாவம்.

மாநகரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் புல்டோசர் விளையாட்டு அதைத்தான் செய்ய முனைகிறது. மூன்று நான்கு தலைமுறைகளாக ஒரே இடத்தில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்துவதே தவறு. ஆக்கிரமித்த பகுதிகளுக்கு மின்சார இணைப்பு, சாலை, குடிநீர் குழாய், ரேஷன் கடை, வாக்காளர் அட்டை எல்லாமும் கொடுத்த அதிகாரிகளையும் அவர்களுக்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகளையும் எவரும் குறை சொல்வதில்லை. சாக்கடையாக நாறும் கூவத்தின் கரையோரம் குடிசை போட்டு குடியிருக்க ஆறறிவு படைத்த மனிதனுக்கு ஆசை பிறக்குமா? அரை நிமிடத்தில் பாலத்தை கடப்பதற்குள் எந்த நோய் புகுந்துவிடுமோ என்ற பயத்தில் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்கிறோம். அவர்கள் குழந்தை குட்டிகளுடன் அங்கேயே வசிப்பது ஆசையினால் அல்ல. நகரங்களில் ஒரு சதுர அடி பாக்கியில்லாமல் மொத்த நிலமும் பணக்காரர்கள் கைக்கு போய்விட்டது. நடுத்தர வர்க்கம் வாடகை கொடுக்க முடியாமல் திணறுகிறது. இந்த  வீட்டுச் சந்தையில் தினக்கூலிகள் எங்கே போக முடியும். டீக்கடையில் வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு செல்பவர்களுக்கு ஈவ் டீசிங்கில் ஈடுபட நேரமிருக்காது. அதற்கு பிறகு சிகரெட் வாங்குபவர்களுக்கு 10 நிமிடம் கிடைக்கிறது. டீக்கடைகளில் சிகரெட் விற்கக்கூடாது என்ற தடையை கண்டிப்புடன் அமல்படுத்திய வரையில் இதுபோன்ற புகார்கள் வரவில்லை. ஈயை ஒழிக்க வீட்டை கொளுத்த வேண்டுமா, என்ன?




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment