Thursday, 21 June 2012

மண் கேக் சாப்பிடும் மக்கள் - ஹைதி

மண் கேக் சாப்பிடும் மக்கள் - ஹைதி

ஆம், சில வருடங்களுக்கு முன் பூகம்பம் புரட்டிப் போட்ட அமெரிக்காவின் மிக அருகில் இருக்கும் அந்த சின்னச்சிறு நாடு தான்.

அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு. இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகிறார்களாம். ஹைதியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால், அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்கமுடியாது. கடைசியில் எப்போது சாப்பிட்டீர்கள் என்றால் யாருக்கும் அது நினைவில் இல்லை.

குழந்தைகளுக்கு முதல் நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகிறார்கள். மறுநாள் குழந்தை வயிற்று வலியால் துடிக்கும். அடுத்த நாள் பட்டினி. அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும். அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து கொடுத்து மண் கேக் அந்த குழந்தைகளுக்கு பழகிவிடும். இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது. பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி மன்கேகிர்க்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் தயாரிக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும்விட ஹைதியை கடுமையாக பாதித்து இருக்கிறது. சாப்பிட முடியாமல் இறந்துகொண்டே இருப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வெங்காயம், வெள்ளைபூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடுகளையே நம்பி உள்ளனர். உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை. விளை நிலங்கள் என்று எதுவும் இல்லை. எல்லாமே பொட்டல் காடுகள்தான். எஞ்சியிருந்த காடுகளையும், விறகிற்காகவும், கரிக்காகவும்  அழித்துவிட்டார்கள்.

நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980ல் ஹைதியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது (உண்மையில் திறந்து விடுமாறு  உலக வங்கியால் கட்டாயப்படுத்தப்பட்டது). எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம். அதற்கு வரிகள் கிடையாது. இதன் விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால் விலைதான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது. போராட தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் போய், இறுதியில் பிச்சை எடுக்க தொடங்கினர்.

பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மண் கேக் சாப்பிட்டனர். வாலிபர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர். இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக மாறி வருவது உலகிற்கு தெரியவந்து, மண் கேக் சாப்பிடும் செய்திகளும் படங்களும் வெளியாகி உலகை உலுக்கிகொண்டிருக்கின்றன.

பொருளாதாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால் இதுபோன்ற ஹைதிகளும், சோமாலியாக்களும் உருவாகிக் கொண்டேதானிருக்கும். விழித்துக் கொள்ளுமா அல்லது விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுமோ இந்தியப் பொருளாதாரம்?






No comments:

Post a Comment