யாருக்கும் ஆபத்தில்லை
ஆமாம், கட்சியை காட்டிக் கொடுத்த துரோகிகளை போட்டுத் தள்ளினோம், என்ன தப்பு… என்ற கேள்வி கேரள அரசியலில் நீண்ட காலத்துக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கும். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து புது கட்சி தொடங்கிய டி.பி.சந்திரசேகரன் கொலையின் மர்ம முடிச்சுகள் விலகுவதற்கான தூரத்து அறிகுறிகூட தென்படவில்லை. அவரது மரணம் குறித்து கட்சி மவுனம் காத்தபோது முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தனக்கே உரித்தான துணிச்சலுடன் அதை கண்டித்தார். கட்சியின் மாநில தலைமை பொறுப்பிலுள்ள பினராயி விஜயனின் ரத்தக்கொதிப்பு தாறுமாறாக எகிறும் அளவுக்கு விமர்சித்தார். மார்க்சிஸ்ட் கட்சி பிறப்பதற்கு முன்பிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவராக இருந்த எஸ்.ஏ.டாங்கேயின் சர்வாதிகார போக்குடன் விஜயனின் நிர்வாகத்தை ஒப்பிட்டார். விஜயன் இந்த வலையில் சிக்காமல் தப்பினாலும், அவரது தீவிர ஆதரவாளரான இடுக்கி மாவட்ட செயலாலர் எம்.எம்.மாணி மாட்டினார். 'அரசியல்ரீதியாக யாரெல்லாம் நமக்கு எதிரிகள், துரோகிகள் என்ற பட்டியல் தயாரித்து அவர்களை ஒழித்துக் கட்டுவது புதிதல்ல. ஏற்கனவே பலரை அப்படி போட்டு தள்ளியிருக்கிறோம்' என்று மாணி கொடுத்த விளக்கம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மக்களுக்கு அது எதிர்பாராத செய்தியல்ல என்றபோதிலும், ஒரு பொதுவுடமை கட்சியின் நிஜ முகம் அந்த கட்சியின் தோழர் மூலமாகவே அம்பலம் ஏறியதை வரவேற்றனர். இதற்கு மேலும் விஜயனை பதவியில் நீடிக்க விட்டால் கட்சிக்கு நல்லதில்லை என்று பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத்துக்கு அச்சுதானந்தன் கடிதம் எழுதினார். அச்சுதானந்தனை விட்டுவைத்தால் கட்சி காணாமல்போய்விடும் என்று விஜயனின் ஆட்கள் எச்சரித்தனர். இந்த சூழ்நிலையில் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு, அச்சுதானந்தன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மாநில அளவிலேயே பேசி தீர்த்துக் கொள்ளுமாறு பணித்துள்ளது. இரண்டு தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தலைமையை மாற்றியாக வேண்டும் என்ற கருத்தை அதில் அச்சுதானந்தன் பலமாக வலியுறுத்தியுள்ளார்.
மக்களிடம் பெரும் செல்வாக்கு இருப்பதால் அச்சுதானந்தன் மீதும், கட்சி அமைப்பை இரும்புப் பிடியில் வைத்திருப்பதால் விஜயன் மீதும் மார்க்சிஸ்ட் தலைமை கடைசி வரை நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தோழர்கள் பேசிக் கொள்வது மீண்டும் உண்மையாகி இருக்கிறது.
மக்களிடம் பெரும் செல்வாக்கு இருப்பதால் அச்சுதானந்தன் மீதும், கட்சி அமைப்பை இரும்புப் பிடியில் வைத்திருப்பதால் விஜயன் மீதும் மார்க்சிஸ்ட் தலைமை கடைசி வரை நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தோழர்கள் பேசிக் கொள்வது மீண்டும் உண்மையாகி இருக்கிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment