Tuesday, 18 September 2012

மக்கள் காதில் பூ


டீசல் விலை உயர்வை  காரணம் காட்டி லாரி வாடகையை 15 சதவீதம் உயர்த்துவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. அமைப்பின் பெயர் அப்படி வைத்திருக்கிறார்கள். இதை அறியாதவர்கள் லாரி வாடகை உயர்வுக்காகவும் காங்கிரசை கண்டித்து அறிக்கை விடக்கூடும். இந்த அமைப்பின் மேற்பார்வையில் 80 லட்சம் லாரிகள் ஓடுகிறதாம். தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. பயண தூரத்தை பொருத்து ரூ. 20 முதல் ரூ. 40 வரை உயர்த்தியுள்ளனர். ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணங்களும் ஏற்றப்பட்டுள்ளன. சென்னை நகரில் ஓடும் 70 ஆயிரம் ஆட்டோக்களில் பத்தாயிரம் மட்டுமே டீசலில் இயங்குபவை. குறைந்தபட்சம் 20 ரூபாய் உயர்த்தி இருப்பதாக டிரைவர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

மூலப்பொருள் விலை உயரும்போது அதை பயன்படுத்தி உற்பத்தியிலோ சேவையிலோ ஈடுபடுபவர்கள் அதற்கான விலை அல்லது கட்டணத்தை உயர்த்துவது தப்பில்லை. ஆனால் அந்த உயர்வில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். பெட்ரோலைவிட டீசல் விலை குறைவு. ஆனாலும் டீசலில் இயங்கும் ஆட்டோக்கள் பெட்ரோல் ஆட்டோவுக்கு நிகரான கட்டணமே வசூலிக்கின்றன. சொல்லப்போனால் பயணிகளுக்கு இரண்டு வகை ஆட்டோக்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. பெட்ரோல் விலை உயரும்போது டீசல் ஆட்டோவுக்கும் சேர்த்து கட்டணம் உயர்த்துகின்றனர். இப்போது அதே போல டீசல் விலையை காரணம் காட்டி பெட்ரோல் ஆட்டோக்களும் கட்டணத்தை உயர்த்தி விட்டன. ஆம்னி பஸ் சங்கம் கூறும் கணக்குப்படி, டீசல் விலை உயர்வால் ஒரு பஸ்ஸுக்கு ரூ. 900 கூடுதலாக செலவாகும்.  ஆனால் கட்டண உயர்வால் 1200 ரூபாயாவது கூடுதலாக கிடைக்கும். ஆக, மத்திய அரசால் இவர்களுக்கு குறைந்தபட்சம் 300 தினசரி கூடுதல் லாபம்.  விலை, வரி, கட்டணம் எது உயர்ந்தாலும் அந்த சுமையை மக்கள் தலையில் ஏற்றிவைப்பது வாடிக்கையாகி விட்டது. அதன் பிறகு அப்பாவிகள் போல டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் அறிவித்து மக்கள் காதில் பூ சுற்றுவது நல்ல வேடிக்கை.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment