Monday, 31 December 2012

வட கொரியா - சர்வதேச தோல்வி

வட கொரியா வெற்றிகரமாக ராக்கெட் ஏவி சோதனை செய்திருப்பது, அந்த நாட்டை நேர்வழிக்கு கொண்டுவர எடுக்கப்படும்  சர்வதேச முயற்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் சவால். சாதாரணமாக ஒரு நாடு இப்படியான சோதனையை வெற்றிகரமாக செய்வது கவலைக்குரிய விஷயம் அல்ல. வட கொரியா சாதாரண நாடல்ல. ரவுடி தேசம். மக்களுக்கு உரிமைகள் கிடையாது. அரசு அடக்குமுறை. பஞ்சம், பசி, பட்டினியால்  நூற்றுக்கணக்கில் மக்கள் மடிகிறார்கள். வரிகளை போட்டு மக்களை பிழிந்து, பணத்தையெல்லாம் ஆயுத உற்பத்திக்கு செலவிடுகிறது அரசாங்கம். ஐ.நா சபையின் எந்த தீர்மானத்தையும் எச்சரிக்கையையும் அது மதிப்பதில்லை. அதனால் சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அண்டை நாடான சீனா ஆதரவில் வடகொரியாவின் பிழைப்பு நடக்கிறது. இந்த பின்னணியில்தான் ராக்கெட் விட்டிருக்கிறது. ஏற்கனவே அதனிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுகுண்டுகள் இருக்கின்றன. அடிக்கடி மிரட்டுவதால் பக்கத்து நாடுகள் பயப்படுகின்றன. குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் குரங்கு போல சீனா பின்னாலிருந்து ஆட்டுவிக்கிறதோ என்ற சந்தேகமும் இவற்றுக்கு உண்டு. இதன் விளைவு விரைவில் நடக்க இருக்கும் தென் கொரிய மற்றும் ஜப்பானிய தேர்தலில் எதிரொலிக்கும். அமைதி, நட்புறவு, பொருளாதார முன்னேற்றம் என்று பேசி வந்த அந்த நாடுகளில் பாதுகாப்பு, ஆயுத பலம், ராணுவ தயார் நிலை போன்ற வார்த்தைகள் பிரசாரத்தில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளன. 

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்த சர்வாதிகாரி கிம் சுங் இறந்து, அவர் இடத்துக்கு வந்த மகன் கிம் ஜோங் சர்வதேச எதிர்ப்பை மீறி ராக்கெட் சோதனை நடத்தியதை அவரது பிரஜைகள் கொண்டாடுகின்றனர். சட்ட திட்டங்களுக்குள் அடங்காத ரவுடி தேசம் என்று பெயர் பெற்ற இரானும் பாகிஸ்தானும் கொரியாவுக்கு உதவியுள்ளன. ஐ.நா தீர்மானம், பொருளாதார தடை, அரசு முறையான உறவு துண்டிப்பு, தனிமைப்படுத்துதல் போன்ற வழிகளில் எந்த நாட்டையும் மாற்றுப்பாதைக்கு திருப்ப முடியாது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. தவறு செய்யும் மனிதனாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி ஒதுக்கி வைக்காமல் உறவு கொண்டு பழகித்தான் நல்ல வழிக்கு கொண்டுவர முடியும்.



நன்றி: Dinakaran 

மாயாவதியின் கோபம் நியாயமானதே

நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சபாநாயகருக்கு தெரியாமல் போனாலும், அவரது இருக்கைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சபை செயலாளர் அனைத்து விதிகளையும் கரைத்து குடித்திருப்பார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சபாநாயகர் எடுக்க வேண்டிய முடிவு அல்லது நடவடிக்கை இதுதான் என்று சம்பந்தப்பட்ட விதியை நம்பரோடு ஒரு சீட்டில் எழுதி அவர் பார்வைக்கு வைப்பதை டீவி ஒளிபரப்பில் பார்க்கிறோம். அமளி நடந்தால் சபையை ஒத்திவைக்குமாறு செயலாளர் கூறுவதில்லை. அது தலைவரே சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி எடுக்கும் முடிவு. அதைத்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆட்சேபித்துள்ளார். மாநிலங்களவையில் அமளி தொடங்கியதும் அதை அடக்கி விட்டு சபையின் நடவடிக்கைகள் தொடர வழி செய்யாமல் அதன் தலைவர் ஹமீத் அன்சாரி சபையை ஒத்திவைத்து விட்டு வெளியேறி விடுவதாக நேருக்கு நேர் குற்றம் சாட்டியுள்ளார் மாயாவதி. தலைவரை யாரும் , பிரதமர், அமைச்சர்கள் உட்பட , கேள்வி கேட்பதோ குற்றம் சொல்வதோ மரபல்ல. மாயாவதி அந்த மரபை தகர்த்ததும் சபை ஸ்தம்பித்து விட்டது. அன்சாரி அதிர்ச்சியுடன் வெளியேறி விட்டார். பிரதமரும் அமைச்சர்களும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் அவரை சந்தித்து வருத்தம் தெரிவித்து சமாதானம் செய்துள்ளனர்.மாயாவதி கண்டுகொள்ளவில்லை. பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு  வேண்டும் என்பது அவரது நீண்டகால கோரிக்கை.   அதற்கான மசோதாவை இந்த தொடரிலேயே கொண்டு வருவதாக உறுதி அளித்ததால்தான் அன்னிய முதலீடு பிரச்னையில் அரசுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் வாக்களித்தது என்பது ஊரறிந்த ரகசியம்.  ஆனால், வாக்கெடுப்பில் காப்பாற்றிய இன்னொரு கட்சி சமாஜ்வாடி இந்த ஒதுக்கீட்டை  எதிர்க்கிறது. அவர்கள் அமளி தொடங்கியதும்  சபையை அன்சாரி ஒத்திவைப்பதை இரு நாட்களாக கவனித்த மாயாவுக்கு இதில் ஏதோ சதி இருப்பதாக சந்தேகம் தோன்றியிருக்கிறது. அதுதான் சபையில் அன்சாரிக்கு எதிராக வெளிப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை கருத்து சொல்ல விடாமல் வெளியேற்றுவது சரியான நடவடிக்கை அல்ல என்றால், அவர்கள் அமளியில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் சபையை ஒத்திவைப்பதும்கூட ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் நடவடிக்கை ஆகாதுதான்.




நன்றி: Dinakaran 

பொம்மை தேசம் - சீனா

டாய் ஸ்டோரி திரைப்படம் பிரபலமானது. தொடர்ச்சியாக மூன்று படங்கள் வெளியாகி அத்தனையும் உலக அளவில் வசூலில் பெரும் சாதனை படைத்தன. பொம்மைகளுக்கு புது மவுசு பெற்றுக் கொடுத்த படங்கள் அவை. பொம்மைகள் விற்பனை எகிறியதால்,  சீனாவுக்கு செல்வம் குவிந்தது. உலக பொம்மைகளில் 75 சதவீதத்துக்கு மேல் அங்குதான் வடிவம்  பெறுகின்றன. மைக்கேல் உல்ப் என்ற ஜெர்மன் ஃபோட்டோகிராபர் 'தி ரியல் டாய் ஸ்டோரி' என்ற தலைப்பில் இப்போது காட்சிக்கு வைத்துள்ள தொகுப்பு படங்கள், சீனாவின் பொம்மை தொழிற்சாலைகளின் நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அதிர வைக்கின்றன. அந்த ஆலைகளில் வேலை செய்பவர்கள் 90 சதவீதம் பேர் கிராமங்களில் பிழைக்க வழி இல்லாததால் நகரங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள். பொருளாதார ரீதியில் சீனா பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்திருப்பதாக செய்தி படிக்கிறோம். ஆனால் அங்கு இன்னமும் 48 கோடி பேர் தினமும் 2 டாலர் கூட வருமானம் கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. முக்கால் வாசிக்கு மேற்பட்ட ஏழைகள் கிராமங்களில் வசிக்கின்றனர். நகரங்களில் உள்ள பொம்மை தொழிற்சாலைகளுக்கு வேலையாட்கள் கிடைப்பது இங்கிருந்துதான். சிறையே மேல் என்று சொல்லும் அளவுக்கு இந்த ஆலைகளில் கெடுபிடிகள். ஷிஃப்ட் தொடங்குவதற்கு 15 நிமிடம் முன்பு ஆஜராக வேண்டும். உணவு இடைவேளை வரை அங்கிங்கு அசையாமல் நின்றபடியே வேலை செய்ய வேண்டும். யாருடனும் பேசக்கூடாது. கெமிக்கல் பெயின்ட் ஸ்பிரே செய்வது உள்ளிட்ட ஆபத்தான வேலைகளுக்கும் சுவாச பாதுகாப்பு முகமூடி, கண்ணாடி, கவசம் கிடையாது. மாதம் 200 மணி நேரம் ஓவர்டைம் செய்ய வேண்டும். விடுப்பு கிடையாது. எடுத்தால் மாத சம்பளம் கிடையாது. 

பெண்கள் 30 வயதானால் கட்டாய ஓய்வு. கிராமங்களில் இருந்து குடி பெயர கட்டுப்பாடுகள் இருப்பதால், இவர்கள் நகரவாசிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை. அதனால் அரசு நலத்திட்டங்கள் கிடையாது. உற்பத்தி செய்யும் பொம்மைகளை விடவும் இந்த தொழிலாளர்களின் நிலைமை பரிதாபத்துக்கு உரியது என்று உல்பின் போட்டோக்கள் காட்டுகின்றன.மனித உரிமைகளை புதைத்த மண்ணில் வளர்க்கப்படும்  மரங்களில் மலர்கள் பூக்குமா? பூத்தாலும் அவை மணக்குமா?



நன்றி: Dinakaran 

மார்கண்டேய கட்ஜு - அசாதாரணமான சிந்தனை.

மார்கண்டேய கட்ஜு 20 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றினார் என்பது ஆச்சரியம். அசாதாரணமான சிந்தனை. மரபுக்கு மாறான பேச்சு. அதிர வைக்கும் யோசனைகள். இதெல்லாம் நடுநிலை பிறழாத நீதிமானுக்கு பொருந்தாத இயல்புகள். அனைத்தையும் அடக்கி வைத்திருக்கிறார். ஓய்வு பெற்ற பின்னர் தடைகள் இல்லாததால் கதவு திறந்து கொட்டுகின்றன அதிரடியான கருத்துக்கள். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பொறுப்பு வேகத்தடையாக தெரியவில்லை. பல் இல்லாத அந்த பதவிக்கு அசுர சக்தி கிடைக்கவும் அவர் பாடுபடுகிறார். 'காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என்றால் இந்தியாவுடன் பாகிஸ்தான் மீண்டும் இணைய வேண்டும்' என்கிறார் கட்ஜு. எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் பலருக்கு இதை கேட்டு ரத்தம் கொந்தளிக்கலாம். சாத்தியமா அல்லவா என்பதல்ல பிரச்னை. கட்ஜுவின் பார்வையில் அதுதான் நிரந்தர தீர்வு. அதை சொல்ல அவருக்கு உரிமை கிடையாதா, என்ன? அது மாதிரிதான் 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று கட்ஜு சொன்னதும். ஒரு இந்திய தந்தையின் ஸ்தானத்தில் அமர்ந்து பிரஜைகளை குழந்தைகளாக பாவித்து விமர்சிக்கிறார். 'இப்படி இருந்தால் நீ விளங்க மாட்டாய்' என்று அப்பா திட்டுவது பிள்ளை உருப்பட வேண்டுமே என்ற அக்கறையின்  வெளிப்பாடு. நார்வே தேசத்து அறிவாளிகள் வேண்டுமானால் இதற்காக கட்ஜுவை காரா கிரகத்தில் அடைக்க துடிக்கலாம். ஆனால் நமது முட்டாள் தேசத்தின் பாரம்பரியம் வேறு ரகம். இப்படித்தான் சிந்திக்க வேண்டும்; இப்படித்தான் பேச வேண்டும் என்று மனிதமூளையை நேர்படுத்தும் மேற்கத்திய அணுகுமுறை 400 ஆண்டுகள் முன்புவரை நமக்கு அந்நியமாயிருந்தது. அனைத்து வகையான சிந்தனைகளுக்கும் பேச்சுகளுக்கும் இடமளித்த விசாலமான நாகரிகம் நம்முடையது. இடைப்பட்ட காலத்தில் தொலைத்து விட்டதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். 'கொதிக்கும் நீரில் தவளையை போட்டால், உடனே துள்ளி வெளியே விழும். தோல் போனாலும் உயிர் பிழைத்திருக்கும். அதே தவளையை குளிர்நீரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சூடு ஏற்றினால் அதற்கேற்ப தவளை தன்னை அனுசரித்துக் கொள்ளும். ஆனால் கடைசியில் உயிர் இருக்காது' என்று டேனியல் குய்ன் என்ற நாவலாசிரியர் குறிப்பிடுவார். குளிர் நீர் சுகமே மேலென்று நமது சமூகம் நினைத்தால் கட்ஜுக்களுக்கு கடிவாளம் போடலாம்.




நன்றி: Dinakaran 

படிக்கட்டு மரணங்கள்

பயமுறுத்தும் நிலைக்கு பஸ் பயணம் வந்து பல காலம் ஆகிவிட்டது. நகரங்களில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது இன்னும் ஆபத்து. எல்லோருக்கும் தெரியும். மாணவர்கள் உட்பட. ஆனாலும் கவலைப் படுவதில்லை. வயது அப்படி என்று பொதுவான காரணம் சொல்ல முடியாது.ஜாக்கிரதையாக பஸ்ஸின் உள்ளே நின்று பயணிக்கும் மாணவர்களுக்கும் அதே வயதுதான். பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டதால் படிக்கட்டில் தொங்கித்தான் போக வேண்டியிருக்கிறது என்பதும் திருப்தியான பதிலல்ல. உயிரைவிட வகுப்பு பெரிதல்ல என்பதை அவர்களே ஒப்புக் கொள்வார்கள். வளர்ப்பு காரணம் என்று சொன்னால் பெற்றோர் மீது மொத்த பழியையும் சுமத்துவதாக தோன்றும். ஆக, படிக்கட்டு சாவுகளுக்கு காரணம் போலீஸ்  மெத்தனம் என்றால் மற்றவர்கள் மாற்றுக் கருத்து சொல்ல மாட்டார்கள். சென்னை பெருங்குடியில் நடந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் அநியாயமாக பலியாகி இருக்கிறார்கள். ஒரு திருப்பத்தில் முன்னால் சென்ற லாரி திடீரென பின்னோக்கி வந்ததாகவும், அதன் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் வலதுபுறம் ஒடித்தபோது பின்னால் உள்ள படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் லாரியின் மீது மோதி அடிபட்டு கீழே விழுந்து துடித்து இறந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. பலமுறை எச்சரித்தும் கேட்காமல்  படிக்கட்டில் தொங்குபவர்களை பயமுறுத்தி உள்ளே கொண்டுவர பஸ் டிரைவர்கள் ஒரு உத்தியை கையாள்வதுண்டு. வேறொரு வண்டியின் மீதோ தூண் மீதோ மோதுவதுபோல் வேகமாக ஓட்டிச் சென்று, கடைசி நொடியில் சட்டென்று விலகி விடுவது. இது எல்லா நேரங்களிலும் திட்டமிட்டபடி நடப்பதில்லை. பெருங்குடி அசம்பாவிதம் அப்படி நடந்ததா என்பது டிரைவருக்கு மட்டுமே தெரியும். படிக்கட்டு பயணத்தை அடியோடு தடுக்க பெரும் செலவில் தானியங்கி கதவு பொருத்திய பஸ்கள் வாங்கப்பட்டன. இன்று அவை மூட வழியின்றி கயிறால் கட்டி வைக்கப்பட்டுள்ளன. படியில் நிற்காதே என டிரைவர், கண்டக்டர் கண்டித்தால் மாணவர்கள் தாக்குகிறார்கள். போலீஸ் நிலையத்துக்கு சென்றாலும் பலனில்லை. மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என்று மேலிருந்து  உத்தரவு வரும்போது அவர்கள் என்ன செய்ய முடியும். இந்த சோகத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற உறுதி யாரிடமும் இல்லை.




நன்றி: Dinakaran 

எடியூரப்பா தனிக் கட்சி - உதிரும் பூக்கள்

கர்நாடகாவில் சக்தி வாய்ந்த லிங்காயத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தனிக் கட்சி தொடங்கியிருக்கிறார். தேசிய தலைவர்களுடன் ஏற்பட்ட மோதலில் மேலும் ஒரு பிராந்திய கட்சி உருவாகியிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் பாஜ அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. புதுக் கட்சிகள் உருவாவதற்கு பல காரணங்கள். ஒரே கட்சியே இரண்டாய் உடைவது, தேசிய கட்சியை உடைத்து தனியாக கொடி பிடிப்பது என பல ரகங்கள். சாதி பலமும், தொண்டர்கள் ஆதரவும் இருந்தால் கட்சி தொடங்கவும் அடுத்து ஆட்சியை பிடிக்கவும் தைரியம் வந்துவிடும். அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துவிட்டு, அது இல்லாமல் போகும்போது அதை தாங்கிக் கொள்ளவே முடியாது. முதல்வராக இருந்தவர் எடியூரப்பா. கர்நாடகாவில் பாஜ ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர். தன்னால்தான் பாஜ ஆட்சியை பிடித்தது என உறுதியாக நம்புபவர். ஆனால் எந்த தேசிய கட்சியும் பிராந்திய தலைவரால்தான் கட்சிக்கு பலம் என்பதை ஏற்பதில்லை. பாஜவும் அப்படித்தான். அதனால்தான் ஊழல் புகார் எழுந¢த போது, பதவி விலகியவருக்கு அவரின் பலம் தெரிந்தும் மீண்டும் பதவி கொடுக்கவில்லை. தேசிய தலைவர்களுக்கு பிராந்திய அரசியல் நிலைமை புரிவதில்லை. புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இது ஒரு பிரச்னை என்றால், கட்சியே தாங்கள்தான் என பிராந்திய தலைவர்கள் நினைப்பது இன்னொரு பிரச்னை.

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் என சில கட்சிகள்தான் உள்ளன. காங்கிரஸ் கட்சி கடந்த பல ஆண்டுகளில் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாய் இருந்து, பிராந்திய தலைவர்கள் வெளியேறியதால் எதிர்க் கட்சியான கதை உண்டு. அதேபோல், காங்கிரசால் முடியாததை காங்கிரசில் இருந்து வெளியேறி சாதித்த தலைவர்களும் உண்டு. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஒரு உதாரணம். இங்கும் மூப்பனார் தமிழ்மாநில காங்கிரசை ஆரம்பித்து, கட்சி நடத்தி மீண்டும் காங்கிரசோடு இணைந்தது தனிக் கதை. மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் உடைந்து, தேசியவாத காங்கிரஸ் உருவானது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரசை உருவாக்கினார். இத்தனைக்கு பிறகும் காங்கிரஸ் இருக்கிறது. இப்போது பாரதிய ஜனதா உடைய ஆரம்பித்திருக்கிறது.




நன்றி: Dinakaran 

மாலத்தீவு அரசு இந்திய நிறுவனத்துக்கு கொடுத்த அடி

மாலே விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து இந்திய கம்பெனியை வெளியேற்றி இருக்கிறது மாலத்தீவு அரசு. நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவுபடுத்த ஜிஎம்ஆர் நிறுவனம் முன்வந்தது. அரசுக்கு 423 கோடி கட்டணம் செலுத்திவிட்டு, 25 ஆண்டுகளுக்கு இயக்கலாம். வருமானத்தில் முதல் நான்காண்டு 1 சதவீதமும், பின்னர் 10 சதவீதமும் அரசுக்கு கொடுக்க வேண்டும். 2010ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜிஎம்ஆர் கோடிகளை கொட்டி விமான நிலையத்தை நவீனமாக்கியது. திடீரென ஏற்பட்ட ஆட்சி மாற்றம் புது சூழலை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக ஜிஎம்ஆருடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விமான நிலையத்தை அரசு ஏற்றுள்ளது. சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு போட்ட ஒப்பந்தத்தை ஆட்சி மாற்றம் அசைக்க முடியாது என சட்டம் தெரிந்தவர்கள் சொல்வது நடைமுறைக்கு பொருந்தாத வாதம் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.இந்திய கம்பெனிக்கு இது புதிதாக இருக்கலாம். இந்தியாவுக்கு அல்ல. கோக், என்ரான் நிறுவனங்கள் விரட்டப்பட்டுள்ளன. 'எந்த பெரிய வர்த்தக ஒப்பந்தமும் நாட்டின் இறையாண்மையை விட புனிதமானதல்ல' என்று சிங்கப்பூர் நீதிமன்றம் சொன்னதை பல நாடுகள் பல சந்தர்ப்பங்களில் செயலில் காட்டியுள்ளன. 'நாட்டு நலனுக்கு எதிரானது' என்ற வாசகத்தை போட்டால் போதும். ஜிஎம்ஆர் பொன்முட்டையிடும் வாத்தை அறுக்க முயன்றதாகவும் சிலர் சொல்கின்றனர். 

விமானங்களுக்கு பெட்ரோல் விற்கும் உரிமை ஜிஎம்ஆரிடம் இருந்ததால் அதிலேயே கணிசமான  75 சதவீதம் & வருமானம் வந்தது. அதுபோக, விமான நிலைய வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் பயணிக்கு 25 டாலர் கட்டணம் வசூலித்தது. இன்சூரன்ஸ் சர்சார்ஜ் என்று 2 டாலர். இதற்கு மாலத்தீவு மக்களிடம் கடும் எதிர்ப்பு. போராட்டம் வலுத்ததால் வசூல் நிறுத்தப்பட்டது. பதிலாக அரசே அந்த தொகையை ஜிஎம்ஆருக்கு கொடுத்தது. இதனால் கொந்தளிப்பு அதிகமானது. நியாய தர்மங்கள் ஒருபுறம் இருந்தாலும் வெறும் மூன்றேகால் லட்சம் மக்கள் வசிக்கும் சின்னஞ்சிறு நாடு ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனத்தை ஒரே உதையில் தூக்கியடித்த துணிச்சலுக்கு நிச்சயம் வேறொரு பின்னணி இருக்க வேண்டும். அது இந்தியாவை சுற்றிலும் வலை பின்னும் சீனா தவிர வேறு யாராக இருக்க முடியும்?




நன்றி: Dinakaran 

நாடகம் நன்றாகவே நடந்தது

தீர்மானம் நிறைவேறாது என்பது அதை கொண்டு வந்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அதிசயம் நடக்காதா என்ற நப்பாசையில் அடியெடுத்து முன்வைத்தன. அரசுக்கு தோல்வி ஏற்படாது என்பது ஆளும் கட்சிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் வாக்கெடுப்புடன் விவாதம் நடத்த சம்மதித்தது. சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது அரசு எடுத்த நிர்வாக முடிவு. இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறவில்லை.அதற்காக சாய்ந்து படுத்திருந்தால் சரிப்படுமா?  எதிரணி திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்ற வரும்போது நாமும் பங்கேற்று பாத்திரத்துக்குரிய வசனங்களை பேசி பாவம் காட்டுவோம் என்று அதிகார தரப்பும் தீர்மானித்தது. முடிவு முதலிலேயே தெரிந்துவிட்டால் நாடகம் சுவைக்காதே. அதனால் உத்தர பிரதேசத்தில் எலியும் பூனையுமாக அரசியல் நடத்தும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் துணை பாத்திரங்களாக சேர்க்கப்பட்டனர்.'அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம்; அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று அப்புறம் முடிவு செய்வோம்' என முலாயம் சிங்கும் மாயாவதியும் அறிவித்ததும் சஸ்பென்ஸ் பற்றிக் கொண்டது. அபிநயத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதை இருவரும் நிரூபித்தனர். மக்களவையில் வாக்கெடுப்பு நடந்தபோது வெளிநடப்பு செய்த முலாயம், 'அரசின் பதில் திருப்தியாக இல்லை; அதனால் வெளிநடந்தோம். அந்த சாக்கில் அரசு ஜெயித்தது பற்றி எனக்கு தெரியாது' என்று சொல்லி சிறந்த வசனத்துக்கான விருதை தட்டிச் சென்றார். மாநிலங்களவையில் மாயாவதியோ, 'அன்னிய முதலீடு நல்லதில்லை என்றாலும் இந்த அரசுக்கு எதிரான ஓட்டு மதவாத சக்திகளை பலப்படுத்தும் என்பதால் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்' என்று அறிவித்து கைதட்டலை அள்ளினார். 

வாக்கெடுப்பு தேவையில்லை என்று ஆரம்பம் முதலே கூறிவந்த இடதுசாரிகள் அதில் கிடைத்த தோல்விக்கு தார்மிக வெற்றி என முத்திரை குத்தி திருப்தி அடைய நேர்ந்தது. தீர்மானத்தை முன்மொழிந்தும் விவாதத்தை முடித்து வைத்தும் பேசிய அதிமுக அணித்தலைவர், 'அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அன்னிய முதலீடுகள் ரத்து செய்யப்படும்' என்று முத்தாய்ப்பாக அளித்த வாக்குறுதி இந்த ஆண்டின் சிறந்த பஞ்ச். வால்மார்ட், கேரிஃபோர், டெஸ்கோ உஷார்.




நன்றி: Dinakaran 

பத்திரிகைகளின் சுதந்திரமும் உரிமைகளும்

இங்கிலாந்து பத்திரிகைகளின் அளவற்ற சுதந்திரத்தை கட்டுப்படுத்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் எடுத்த நாசூக்கான முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.  அங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பத்திரிகைகள்  சுதந்திரமாக செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும், பணக்காரர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள் பாதகமான செய்திகள் வெளிவராமல் தடுக்க அந்தரங்க உரிமைக்கு பங்கம் என்ற புகாருடன் நீதிமன்றத்தை நாடி பாதுகாப்பு பெறுவது  சென்ற நூற்றாண்டில் அதிகரித்தது. பல நாளிதழ்கள் வம்பு வழக்கை தவிர்ப்பதற்காக பெரிய மனிதர்கள், நிறுவனங்களின் செய்திகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டன. இதனால் வாசகர்கள் குழம்பினர். பரபரப்பு, கிளுகிளுப்புக்கு பெயர் பெற்ற டேப்லாய்ட் எனப்படும் பகல்நேர நாளிதழ்கள் இந்த குட்டையில் மீன் பிடிக்க இறங்கின. அரசு, அரச குடும்பம், கோடீஸ்வரர்கள், நட்சத்திரங்கள் எவராக இருந்தாலும் தனி உரிமைகள் கிடையாது என்று கூறி அனைவரின் அந்தரங்கத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர ஆரம்பித்தன.வழக்குகளுக்கு அஞ்சவில்லை. டெலிபோனை ஒட்டு கேட்பது, இ,மெயிலை ஹேக் செய்வது, பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற சட்டவிரோத வழிகளில் தகவல் சேகரித்து செய்தியாக்கி வெளியிட்டன. ஊடக சக்கரவர்த்தியாக சித்தரிக்கப்படும் ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமான தி சன், நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் பத்திரிகைகள் இது தொடர்பான விசாரணையில் சிக்கின. நியூஸ் இதழை மூட நேர்ந்தது. இந்த சூழ்நிலையில் அரசு நியமித்த நீதிபதி லெவசன் பொது விசாரணை நடத்தி அரசிடம் 2,000 பக்க அறிக்கை கொடுத்துள்ளார். தவறு செய்யும் பத்திரிகைகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்துடன் கூடிய புதிய அமைப்பை ஏற்படுத்துவது உட்பட 47 பரிந்துரைகளை லெவசன் தெரிவித்துள்ளார்.  அதற்கு சம்மதிக்காவிட்டால் சட்டம் இயற்றப்போவதாக பிரதமர் எச்சரித்துள்ளார். அதையடுத்து 40 பரிந்துரைகளை எடிட்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

பிரஸ் கம்ப்ளெயின்ட்ஸ் கமிஷன் என்ற இப்போதுள்ள அமைப்பை கலைக்கவும் சம்மதித்துள்ளனர். பத்திரிகைகள், டெலிவிஷனுக்கு சுய கட்டுப்பாடு மட்டும் போதாது என்ற கோஷம் இந்தியாவில் வலுத்து வரும் நேரத்தில் பிரிட்டனில் நடைபெறும் மாற்றம் இங்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும்.



நன்றி: Dinakaran 

ஒலிம்பிக்கில் இழப்பு யாருக்கு?

ஒலிம்பிக்கில் இப்போதுதான் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை பெற தொடங்கியிருக்கிறார்கள். அதற்கும் முடிவு கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது. தேர்தலை முறைப்படி நடத்தவில்லை என்று கூறி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில். எல்லா நாடுகளுக்கும் ஒரே விதிமுறைதான் என்பது அவர்களின் வாதம். இங்கோ இடியாப்ப சிக்கல். காமன்வெல்த் போட்டி ஊழல் சர்ச்சையில் சிக்கி, பல ஆண்டுகளாய் பொறுப்பில் இருந்தவர்கள் கைது, சிறை என சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டதால் சங்கம் நிலைகுலைந்தது. களை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மத்திய விளையாட்டு அமைச்சகம் வயது வரம்பு உட்பட சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது. புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை அரசியல் குறுக்கீடு இன்றி நடத்த வேண்டும் என்று பல மாதங்களாகவே எச்சரித்து வந்தது உலக அமைப்பு. அரசின் விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு சிக்கலை இன்னும் அதிகமாக்கியது. போதுமடா சாமி என்று தலைமை தேர்தல் ஆணையரே ஒதுங்கிக் கொள்ள, தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே, ஊழல் சர்ச்சையில் சிக்கி சிறை சென்ற லலித் பனோட் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது ஐஓசியை வெகுவாக கடுப்பேற்றி இருக்க வேண்டும். நிர்வாக குழு கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்வது என்று முடிவு செய்துவிட்டார்கள். இதனால் ஐஓசி நிதியுதவி கிடைக்காது. அதன் கூட்டங்களில் நமது நிர்வாகிகளை அனுமதிக்க மாட்டார்கள். இதெல்லாம் கூட பரவாயில்லை, இந்திய அணி என்ற அந்தஸ்தே பறிபோய்விடும்.'சஸ்பெண்ட் நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலைக்கு சங்க நிர்வாகிகள்தான் காரணம்' என்று விளையாட்டு அமைச்சரும், 'பிரச்னை பற்றி மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டோம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை' என்று ஐஓஏ தலைவர் விஜய் மல்கோத்ராவும் (பொறுப்பு) சாக்கு சொல்கிறார்கள். சஸ்பெண்ட் முடிவை எதிர்த்து விளையாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட வழி இருக்கிறது. ஆனால், வல்லரசாகும் கனவில் இருக்கும் இந்தியாவுக்கு அது பெருமை சேர்க்குமா?




நன்றி: Dinakaran 

ஒரு ரூபாயை ஏழையின் கையில் சேர்க்க அரசு 9 ரூபாய் செலவிடுகிறது

அரசு மானியங்களை மக்களுக்கு பணமாக  வழங்கும் டைரக்ட் கேஷ் டிரான்ஸ்ஃபர் திட்டத்தை நிறுத்தி வைத்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை மத்திய அரசுக்கு சாதகமான அதிர்ஷ்ட காற்று என்று கருத இடமிருக்கிறது. நல திட்டங்களின் மகுடமாக குறிப்பிடப்படும் இந்த திட்டத்தை முழுமையாக சோதித்து பார்த்து, ஓட்டைகளை கண்டுபிடித்து அடைத்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்க மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பம் இது. இத்திட்டம் அமலுக்கு வரும்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.36,000 அன்பளிப்பு போல கிடைக்கும் என்கிறார்கள். குறைந்தபட்சம் ஐயாயிரம் என அதிகாரிகள் கூறுகின்றனர். 25 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். இவர்களுக்காகவும் சற்று மேலே உள்ளவர்களுக்காகவும் மொத்த உற்பத்தியில் 14 சதவீதம் மானியமாக செலவிடப்படுகிறது. கெரசினை எடுத்துக் கொள்வோம். அதன் சந்தை விலை லிட்டருக்கு ரூ.50. ரேஷன் கடைகள் மூலம் ரூ.14க்கு விற்கப்படுகிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை மானியமாக ஆயில் கம்பெனிகளுக்கு அரசு வழங்குகிறது. அதில் நிறைய ஊழல். ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை ஒரு புறமும், தேவைக்கு மேல் வாங்கி வேறு நபர்களுக்கு விற்கும் பயனாளிகள் ஒரு புறமுமாக முறைகேடு பரவலாக இருக்கிறது. எனவே, மக்களை சந்தை விலைக்கே வாங்கச் சொல்லிவிட்டு, மானியத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு தீர்மானித்துள்ளது. 'கிராமங்களில் வங்கி கிளைகள் கிடையாது; கிளை இருந்தாலும் மக்களுக்கு எழுத படிக்க தெரியாது; தெரிந்தாலும் வங்கியில் எடுக்கும் பணம் ஆண்களால் மது அருந்துதல் போன்ற செலவுகளில் கரைந்துவிடும்; மொத்தத்தில் இப்போது கிடைக்கும் மலிவு விலை கெரசினும் கிடைக்காமல் ஏழைகள் இருட்டில் கிடப்பார்கள்' என்று சிலர் கடுமையாக எதிர்க்கின்றனர். 

மாற்றத்தை விரும்பாதவர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள். மானியங்களில் ஊழல் இருக்கட்டும். ஒரு ரூபாயை ஏழையின் கையில் சேர்க்க அரசு 9 ரூபாய் செலவிடுகிறது. அதில் பெரும்பகுதி அனாவசியமான நிர்வாக செலவுக்கு போகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டியாக வேண்டும். இல்லையேல் பொருளாதார சீர்திருத்தம் என்பதற்கே அர்த்தம் கிடையாது.




நன்றி: Dinakaran 

உலக அழிவு - பூமி இன்னும் சுழல்கிறது.

21ம் தேதி வெள்ளிக்கிழமை , 21.12.2012 , அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி ரஷ்யா முழுவதும் டெங்கு வேகத்தில் பரவுவதால் பொதுமக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள். உலக அழிவு பற்றி பல நாடுகளில் செய்தி பரவியிருக்கிறது. ரஷ்யா அளவுக்கு மக்கள் நடுங்கவில்லை. தென் அமெரிக்காவின் மாயன் இன மக்களின் காலண்டரை முன்னிட்டு சொல்லப்படும் எத்தனையோ ஆரூடங்களில் ஒன்று பூமியின் அழிவு பற்றியது.சிலைகள், கோயில்கள் என்று இந்தியாவை நினைவுபடுத்தும் பல கலாசார சின்னங்கள் கொண்ட மாயன் நாகரிகம் அழிந்துவிட்டது. தாக்கம் குறையவில்லை. அவர்கள் உருவாக்கிய ஒரு காலண்டர் 5125 ஆண்டுகளுக்கு உரியது. அது 21ம் தேதி முடிவுக்கு வருகிறது. காலண்டரே முடியும்போது மறுநாள் எப்படி விடியும் என்று கேட்கிறார்கள். பேட்டி, கட்டுரை, வரைபடம் என்று ஊடகங்கள் ஊதி ஊதி பெரிதாக்குவதால் மக்களுக்கு கிலி பிடித்துள்ளது. ரஷ்ய சிறைகளில் மயான அமைதி நிலவுகிறது. விரோதிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மன்னிப்பு கேட்டு கண்ணீர் வடிக்கிறார்களாம். கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் இல்லை. நிறைய வாங்கி வைத்திருப்பவர்கள் அண்டை வீட்டுக்காரர்களையும் வீடற்றோர் முகாம்களையும் அழைத்து இலவசமாக அள்ளிக் கொடுக்கிறார்கள். உலகம் அழியாது என்று அரசு உரத்த குரலில் விடுக்கும் அறிவிப்பு எவர் காதிலும் விழவில்லை. மாயன் நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் பெரு, பிரேசில் நாடுகளுக்கு அமெரிக்கர்களை கொண்டுபோய் குவிக்கின்றன சுற்றுலா விமானங்கள். குழந்தைகளும் இளைஞர்களும் இதனால் பிரமை பிடித்து தற்கொலை பற்றி சிந்திக்க தொடங்கியிருப்பதால் மேற்கத்திய அரசுகள் கவலை அடைந்துள்ளன. நாசா விஞ்ஞானிகள் தலையிட்டு உலகம் அழியாது என்று உறுதி அளித்து வருகின்றனர். ராட்சத எரிகல் பூமியை தாக்கி அழிக்கும் என்கிறது ஒரு கோஷ்டி. கடைசியாக ஆறரை கோடி வருடங்களுக்கு முன் அப்படி நடந்தது. டைனோசர்கள் அப்போது அழிந்தன. இப்போதைக்கு சான்ஸ் இல்லை என்கிறது நாசா. பூமிக்கு இந்த சோதனை புதிதல்ல. கடந்த  400,00,00,000 ஆண்டுகளில் அதன் முடிவை பலரும் பல விதமாக கணித்துள்ளனர். கணித்தவர்கள் போய்விட்டார்கள்; பூமி இன்னும் சுழல்கிறது. எவராலும் தடுக்க முடியாததை பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது?




நன்றி: Dinakaran 

பாலஸ்தீன வரலாற்றில் புதிய அத்தியாயம்

அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்புகளை தாண்டி பாலஸ்தீனத்துக்கு முதன்முறையாக ஒரு நாடு அந்தஸ்து கிடைத்திருக்கிறது. ரோமில் இருக்கும் வாட்டிகன் சிட்டி போன்று தனி அந்தஸ்து பெற்ற நாடு என்ற அங்கீகாரத்தை ஐ.நா. சபை அளித்திருக்கிறது. 188 நாடுகளை உறுப்பினர் களாகக் கொண்ட சபையில் 138 நாடுகள் ஆதரித்துள்ளன. பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள். இஸ்ரேல் கொந்தளித்துப்போய் இருக்கிறது.எத்தனை நாடுகள் இருந்தாலும¢ புதிய நாடுகள் உருவாவது காலத்தின் கட்டாயம். அப்படித்தான் பாலஸ்தீனம் உருவாகியிருக்கிறது. இதற்கு முன்பு இஸ்ரேல் உருவானது தனிக் கதை. அது 1914. துருக்கி சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனத்தில் 5 லட்சம் அராபியர்களும் 65 ஆயிரம் யூதர்களும் இருந்தார்கள். 1917ல் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் தனி நாடு வாக்குறுதி அளிக்கிறார் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர். போருக்கு பிறகு பாலஸ்தீனம் பிரிட்டன் கைக்கு வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறுகிறார்கள். அரேபியர்களிடம் இருந்த நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். பிரிட்டன் ஆதரவுடன் 1948ல் இஸ்ரேல் உதயமாகிறது. பூர்வகுடி பாலஸ்தீனியர்கள்  பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள். யாசர் அராபத் தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் உருவாகிறது. இந்த இயக்கத்துக்கு ஆதரவு அளித்துவந்த எகிப்து, ஜோர்டான் நாடுகளை தாக்கிய இஸ்ரேல் அவற்றின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அங்கு இஸ்ரேலியர்களை குடியமர்த்த ஆரம்பிக்கிறது. விடுதலை இயக்க தலைவர்களை தனது மொஸாத் உளவு படை மூலம் உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும் கொன்றுவருகிறது. சுற்றிலும் எதிரிகள் இருந்தாலும் அமெரிக்காவின் ஆதரவுடன் அத்தனை எதிர்ப்புகளையும் இன்றுவரை இஸ்ரேல் சமாளித்து வருகிறது.  

இந்த நிலையில்தான் பாலஸ்தீனியர்கள் இருக்கும் வெஸ்ட் பேங்க், காஸா பகுதிகளுக்கு தனி நாடு அந்தஸ்து தரப்பட்டுள்ளது. கேட்க நாதியில்லாத நிலையில் இருந்த பாலஸ்தீனம் இனி, தனக்கு எதிரான போர்க் கொடுமைகளை எதிர்த்து ஐ.நா.வில் முறையிடலாம். உலக கோர்ட்டில் வழக்கு தொடரலாம். நினைத்த நேரத்தில் இனி இஸ்ரேல் தாக்குதல் நடத்த முடியாது. தட்டிக் கேட்க ஐ.நா.வும் உலக நாடுகளும் இருக்கின்றன. இது பாலஸ்தீன வரலாற்றில் புதிய அத்தியாயம்.




நன்றி: Dinakaran 

நார்வேயின் கலாசாரம்

மகனை கண்டித்த இந்திய அம்மா அப்பாவை நார்வே போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ள செய்தி இங்குள்ள பெற்றோருக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஏழு வயது சிறுவன் பள்ளியில் இருந்து வேனில் வீட்டுக்கு திரும்பும்போது கால்சட்டையில் சிறுநீர் கழித்து விட்டானாம். ஒருநாள் பள்ளியில் இருந்து யாருடைய பொம்மையையோ வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறான். 'இதெல்லாம் தப்பு; இனிமேல் இப்படி செய்தால் உன்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விடுவோம்' என்று பெற்றோர் எச்சரித்துள்ளனர். அடி விழுந்ததா என்பது தெரியவில்லை.அவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். ஐதராபாத் டிசிஎஸ் ஊழியர். கம்பெனி அவரை நார்வேக்கு அனுப்பியது. மனைவி அங்குள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றுகிறார். இரண்டு பையன்களில் இவன் மூத்தவன். 'அம்மா அப்பா அடிக்கடி என்னை மிரட்டுகிறார்கள், அடிக்கிறார்கள்' என்று ஆசிரியரிடம் சொல்லியிருக்கிறான். அவர் நிர்வாகத்திடம் சொல்ல, அவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இது தெரியாமல் மகன்களுடன் தம்பதி இந்தியா வந்து மூன்று மாதம் தங்கினர். நவம்பரில் கணவனும் மனைவியும் மட்டும் நார்வே சென்றனர். எட்டு மாதம் எதுவும் சொல்லாமல் சும்மா இருந்த போலீஸ் பாய்ந்து வந்து அவர்களை பிடித்து சிறையில் போட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. 'பெற்றோராலும் உறவினர்களாலும் சரியாக வளர்க்க முடியாது என்று நாங்கள் கருதுவதால் குழந்தைகளை எங்கள் பாதுகாப்பிலேயே வைத்துக் கொள்வோம்' என்று நார்வே குழந்தைகள் பாதுகாப்பு கழகம் தெரிவித்தது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வேலைக்காக சென்றிருந்த தம்பதி. நார்வேயில் எல்லோருக்கும் எல்லா வகை சுதந்திரமும் இருக்கிறது. பெரியவர்களுக்கு சமமாக குழந்தைகளுக்கு தனிமனித உரிமைகள். தமிழ்நாட்டைவிட 3 மடங்கு பெரிய நிலப்பரப்பு. ஆனால் மொத்த ஜனத்தொகை சென்னையின் பாதிதான். தேவைகள் பூர்த்தியாகி விட்டதால் சுதந்திரத்தையும் உரிமைகளையும் போற்றி பாதுகாக்கிறது. குழந்தைகளை அடித்து வளர்ப்பது பெற்றோரின் உரிமை மட்டுமல்ல, கடமையும்கூட என்று போதிக்கும் இந்திய கலாசாரத்துக்கும் நார்வேக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. அங்கு குடியேறுபவர்கள் அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டியதுதான்.




நன்றி: Dinakaran 

Tuesday, 25 December 2012

சபைக்குள் யாரும் யாரையும்விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல

நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும் செயல்பட விடாமல் முடக்குவது தவறானது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியிருப்பதை ஜனநாயக ஆர்வலர்கள் ஆமோதிப்பார்கள்.  ரகளையில் ஈடுபடுவது எதிர்க்கட்சிகள் என்றாலும் அதற்கான சூழலை உருவாக்குவதில் அரசுக்கும் பங்குண்டு. அந்த சந்தர்ப்பங்கள் விதியின் பெயரால் உருவாக்கப்படுகின்றன. இந்த விதியின் கீழ் இந்த நடவடிக்கையை , விவாதம், வாக்கெடுப்பு, தீர்மானம் போன்ற ஏதோ ஒன்று , அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் நிராகரிக்கும்போது பிரச்னை தொடங்குகிறது. அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்தக்கூடிய எந்த முயற்சியும் வெற்றி பெற சபாநாயகர்கள் அனுமதிப்பதில்லை என்பதை பார்க்கிறோம். கட்சி விசுவாசத்துக்கு அப்பாற்பட்ட நடுநிலையாளராக அவர்கள் செயல்பட்டால் எதிர்க்கட்சிகள் ஆட்சேபிக்க வழியிருக்காது. அந்த நாற்காலியே எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதற்காக தனக்கு தரப்பட்ட கருவிதான் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி தலைமைக்கு நன்றிக்கடன் செலுத்தும் துதிபாடியாக சபை விதிகளை கையாளும்போது விளைவுகள் சுமுகமாக இருக்காதுதான். சட்ட மன்றங்களோடு ஒப்பிடும்போது நாடாளுமன்றத்தில் இந்த நிகழ்வுகள் கண்ணியமாக  சமாளிக்கப்படுகின்றன. எவ்வளவு கூச்சல் குழப்பம் நேர்ந்தாலும் சபை ஒத்திவைக்கப்படுகிறதே தவிர, உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றுவது, கூட்டத்தொடர் முடியும்வரை சஸ்பெண்ட் செய்வது என்றெல்லாம் செய்வதில்லை. விவாதத்துக்கோ எதிர்க்கட்சிகளின் கருத்துக்கோ இடமில்லாமல் மசோதா அல்லது தீர்மானம்  நிறைவேற்றுவது, கேள்வி எழுப்ப வழியில்லாத விதியின் கீழ் அறிக்கை வாசிப்பது போன்றவை தங்கள் உரிமையை நசுக்குவதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. வெளியிலுள்ள மக்களின் உணர்வுகளையே அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பிரதிபலிக்கின்றனர். தப்பாக இருந்தாலும் அந்த கருத்துக்களை பேச அனுமதிப்பதுதான் ஆரோக்யமான அணுகுமுறையாக இருக்கும். எண்ணிக்கையில் குறைந்த உறுப்பினர்கள் இருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை கிடையாது என்று எந்த விதியும் சொல்லவில்லை. சபைக்குள் யாரும் யாரையும்விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்பதை அனைவரும் புரிந்து நடந்தால் அமளிக்கு இடமிருக்காது. அலுவல்களும் முடங்காது.






நன்றி: Dinakaran 

காவிரி பிரச்னை பொறுப்பு யாருக்கு?

காவிரி பிரச்னை அது தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறது. இது எத்தனையாவது தடவை என்பதற்கு கணக்கே இல்லை. இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இழுபறியாக நீடிக்கும் நதி நீர் பிரச்னை உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. எந்த அடிப்படையில் காவிரி நீரை பங்கிடுவது என்ற முதல் ஒப்பந்தம் 1892ல் போடப்பட்டது. அப்போது கர்நாடகா இல்லை. அது மைசூர் ராஜாங்கமாக இருந்த காலம். மன்னர் ஆட்சி. தமிழகம் அன்று மெட்ராஸ் ராஜதானி என்ற பெயரில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. அந்த முதலாவது ஒப்பந்தத்திலேயே மைசூருக்கு திருப்தி கிடையாது. தொடர்ந்து நச்சரித்ததன் விளைவாக வெள்ளைக்கார அரசு 1914ல் ஒரு நடுவரை நியமித்து சமரசம் பண்ண சொன்னது. அதன் பலனாக 1924ல் புது ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் ஆயுள் 50 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இரண்டு மாநிலங்களிலும் ஜனத்தொகை அதிகமானது. குடிநீர் தேவை அதிகரித்தது. உணவு தேவையும் உயர்ந்ததால் நெல் பயிரிடும் நிலப்பரப்பு கணிசமாக உயர்ந்தது. இதனால் பாசனத்துக்கு தேவையான நீரின் அளவும் கூடிக்கொண்டே வந்தது. பருவமழை ஒழுங்காக பெய்யும் காலங்களில் இந்த தேவைகள் எல்லாம் பூர்த்தியாகிறது. மழை பொய்க்கும்போது பிரச்னை வெடிக்கிறது. இரண்டும் மாறி மாறி நடப்பதால் இழுபறி தீர்ந்தபாடில்லை. காவிரி நடுவர் மன்றம், காவிரி ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு என்று உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அடுக்கடுக்காக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஒன்றும் நடக்கவில்லை. 

அரசு, பிரதமர், கோர்ட் போன்ற எந்த அரசியல் சாசன அதிகார அமைப்பினாலும் கர்நாடகாவை அசைக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் அங்குள்ள அனைவரும் கட்சி, மதம், ஜாதி முதலான வேறுபாடுகளை மறந்து  ஓரணியில் நிற்கின்றனர். அதனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியவில்லை. நியாயம் கேட்டு போராடுபவர்களுக்கு ஏனைய வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் நீதிமன்றத்தின் கதவுகள் சாத்தப்படுவதில்லை என்று தமிழகம் நம்பியது. அந்த கதவுகளை திரும்ப திரும்ப தட்டுவதற்கு காரணம் அந்த நம்பிக்கை. அது இன்று ஆட்டம் கண்டிருக்கிறது.





நன்றி: Dinakaran 

சீண்டி பார்க்கிறது சீனா

உலக அமைதி ஒன்றுதான் எங்கள் குறிக்கோள் என்று எப்போதும் சொல்லிக் கொள்ளும் சீனா, ராணுவ பலத்தை அதிகரிப்பதிலும்  அண்டை நாடுகளை சீண்டி பார்ப்பதிலும் காட்டும் ஆர்வம் சர்வதேச அரங்கில் பல சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. போர் நடத்தி இந்தியாவின் கணிசமான நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ள சீனா, அதே போன்று பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள இந்திய நிலப்பகுதிகள் பலவற்றை தானமாக பெற்று அங்கெல்லாம் சாலைகள் அமைத்து அவசரகால ராணுவ நடமாட்டத்துக்கு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுடனான எல்லைக்கோட்டை அங்கீகரிக்க மறுத்து அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுகிறது. அதே சமயம் காஷ்மீரை இந்தியாவின் அங்கமாக ஏற்க மறுக்கிறது. அங்கிருந்து சீனா செல்ல விண்ணப்பிப்பவர்களின் இந்திய பாஸ்போர்ட்டை கண்டுகொள்ளாமல் தனி காகிதத்தில் விசா முத்திரை இட்டுத் தருகிறது. இந்த சூழ்நிலையில் ஏனைய அண்டை நாடுகளுடனும் எல்லை பிரச்னையில் மல்லுக் கட்டுகிறது சீன அரசு. புதிதாக அது வழங்கும் பாஸ்போர்ட் புத்தகத்தில் பக்கத்து நாடுகளுக்கு சொந்தமான தீவுகள், கடல் பகுதிகளை எல்லாம் சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக வரைபடம் அச்சிட்டுள்ளது. அருணாசல் மாநிலத்தையும் காஷ்மீருக்கு மேலுள்ள அக்சாய் சின் பகுதியையும் சீனாவின் அங்கமாக காட்டும் அப்படத்தை இந்தியா நிராகரித்துள்ளது. தென் சீன கடலில் பல பகுதிகளை படத்தில் வளைத்துப் போட்டுள்ள சீனாவுக்கு பிலிப்பைன்ஸ், வியட்னாம், ப்ரூனை, வட கொரியா, மலேசியா, தைவான் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 வழக்கமாக சீனாவின் அத்துமீறல்களை பெரிதுபடுத்தாமல் தரைவிரிப்புக்கு கீழே தள்ளி மறைக்கும் இந்திய அரசு முதல் முறையாக ஏட்டிக்கு போட்டியில் இறங்கியுள்ளது. இந்தியாவுக்கு வர விசா கேட்கும் சீனர்களின் பாஸ்போர்ட்டில் இந்திய வரைபடத்தை முத்திரையிட்டு கொடுக்கிறது பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம். வியட்னாம், பிலிப்பைன்ஸ் நாடுகளும் சீன பாஸ்போர்ட்டை ஏற்காமல் தனி தாளில் விசா முத்திரை குத்த தொடங்கியுள்ளன. ஜப்பானுக்கு சீனா மிரட்டல் விடுத்த பரபரப்பு இப்போதுதான் ஓய்ந்துள்ளது. தேவைக்கு மீறி ராணுவ பலத்தை பல மடங்கு பெருக்கியுள்ள சீனா வேண்டுமென்றே அண்டை நாடுகளை வம்புக்கு இழுத்து பலத்தை சோதிக்க திட்டமிடுவதாக சந்தேகம் எழுகிறது.





நன்றி: Dinakaran 

ஆகாஷ் வெற்றிக்கு முட்டுக்கட்டை

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 92 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கின்றன. 170 லட்சம் பேர் வசிக்கும் டெல்லியில் 425 லட்சம் செல்போன்கள் உள்ளன. தொலைத்தொடர்பில் இவ்வளவு பெரிய புரட்சி நடக்கும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள். எனினும் அடுத்த கட்டமான கம்ப்யூட்டர் வழி இன்டர்நெட் இணைப்பு என்பது பெரிய சவாலாக இருக்கிறது. இதனால் டிஜிட்டல் டிவைட் என்று குறிக்கப்படும் இருப்பவன் , இல்லாதவன் இடைவெளி தொடர்ந்தது. அதை நிரப்ப மத்திய அரசு கண்டுபிடித்த வழி அசாதாரணமானது. ஆகாஷ் என்று பெயரிடப்பட்ட டேப்லட் கம்ப்யூட்டரை மலிவு விலையில் மக்களுக்கு , முதல் கட்டமாக மாணவர்களுக்கு , வழங்க முடிவெடுத்தது. இந்தியர்களுக்கு சொந்தமான  டேட்டாவிண்ட் என்ற இங்கிலாந்து நிறுவனத்துக்கு அதை தயாரித்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் அது வழங்கிய ஆகாஷ் சொதப்பினாலும், சற்று கூடுதல் செலவில் அடுத்து வந்த ஆகாஷ் 2 அனைத்து தரப்பிலும் பாராட்டை பெற்றிருக்கிறது. அரசு 2263 ரூபாய்க்கு வாங்கி அதில் பாதி விலையில் மாணவர்களுக்கு கொடுக்கிறது. மிக மலிவான டேப்லட் என்பதால் உலகின் கவனம்  ஆகாஷ் பக்கம் திரும்பியிருக்கிறது. இன்று ஐ.நா சபையில் ஆகாஷ் 2 செயல் விளக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, ஆகாஷையும் இந்தியாவையும் மட்டம் தட்டும் பிரசாரமும் தொடங்கியிருக்கிறது. ஆகாஷ் டேப்லட்டின் பாகங்கள் சீனாவில் செய்யப்பட்டவை; இந்திய தயாரிப்பு என்பது ஏமாற்று வேலை என சிலர் கூறுகின்றனர். ஆகாஷ் வடிவமைப்பும் மென்பொருளும் இந்திய மூளையில் உதித்தவை. பாகங்களை சீனாவில் தயாரிப்பதில் என்ன தவறு? உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ஆப்பிள் பிராண்ட் கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், டேப்லட்டுகள்  எல்லாமே சீனாவில் உற்பத்தி ஆகின்றன.

 அங்கு அதற்கான வசதிகள் அதிகம் இருப்பதால் செலவு குறைவு. ஆர்டருக்கு ஏற்ப பாடியை சீனா தயாரித்து அளித்தாலும் ஆகாஷ் உள்ளிருக்கும் மூளையும் சக்தியும் இந்தியர்களுடையது. அரசுக்கு , அதாவது மக்களுக்கு , சொந்தமான தொலைத்தொடர்பு, போக்குவரத்து துறைகளை நலிந்த நிலைக்கு தள்ளுவதில் பிரயோகிக்கப்பட்ட அதே உத்திகள் ஆகாஷ் விஷயத்திலும் புலப்படுகிறது.





நன்றி: Dinakaran 

Saturday, 15 December 2012

16 டிசெம்பர் ஞாயிறு அன்று சென்னை இலயோலா கல்லூரியில் கணினித் தமிழ் மாநாடு

> தோழர்களே, வரும் ஞாயிறு அன்று 16 டிசெம்பர் சென்னை இலயோலா கல்லூரியில் கணினித் தமிழ் மாநாடு நடைபெறுகிறது . இது ஒரு முழு நாள் மாநாடு காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். அடுத்த தலைமுறை தமிழை மின்வடிவில் படிக்க வேண்டும் என்றால் தமிழு
> க்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது . இன்று நாம் செய்யவில்லை என்றால் தமிழ் இனி மெல்லச் சாகும் . அதற்கு நாம் இடம் தரக் கூடாது. கணினியில் இந்திய அரசின் இந்தித் திணிப்பையும் ஆளுமையும் நாம் எதிர்கொள்ள வேண்டும் . தமிழின் ஆளுமையை நிலை நாட்ட வேண்டும் . அதனால் தமிழ் இன, மொழி ஆர்வலர்கள் அவசியம் இந்த மாநாட்டில் பங்கெடுக்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் . மதிய உணவும் மாநாட்டில் வழங்கப்படும். தொடர்புக்கு 9566224027