Wednesday, 23 April 2014

Fwd: அருள்கூர்ந்து நூல்களைப் படவடிவக்கோப்பாக்கவும்




நண்பர்களுக்கு வணக்கம்
மேலுள்ள இணைப்பில் உலகஅளவில் பாதுகாக்கப்பட்ட நூல்கள் மற்றும் இதழ்களின் பட்டியல் உள்ளது. பட்டியலில் ஒருங்குறியில் தட்டச்சு செய்து பார்க்கவும். பட்டியலைத் தலைப்பு வழியிலும் அகரவரிசைப்படுத்தலாம். ஒரு பக்கத்திற்கு 25 முதல் 500 எண்ணிக்கையிலானவற்றை ஒரே பக்கத்திலும் பார்க்கலாம். விடுபட்ட இதழ்கள் மற்றும் நூல்கள் இருந்தால் அருள்கூர்ந்து திரட்டவும். உலகஅளவில் இயங்குகிற அனைவரது ஒப்புதலுடன் ஒரு முழுமையான காட்சிப்படுத்துதலைப் பின்வரும் காலங்களில் செய்யலாம். ஆனால் அதற்கு முன் உடைந்து போகிற, நூல்களையும் இதழ்களையும் கண்டறிந்து அவற்றை படவடிவக்கோப்புகளாக்குவது நமது முதன்மையான பணியாக இருக்கட்டும். யார் வேண்டுமானாலும் இந்தப் படவடிவக்கோப்பாக்குதலைச் செய்யலாம். விரும்புகிறவர்களுக்கு ஸ்கைப் வழியாகப் பயிற்சியும் தர விழைகிறேன். அச்சடித்த அந்த நூல் உடைந்து போனால் பிறகு அதனைக் காப்பாற்றவே முடியாது. தனியொருவரிடம் இருக்கும் அந்த நூலை படவடிவக்கோப்பாக்கி வைத்தால் அது அழியாமல் பாதுகாக்கப்படும். எனவே நூல் வைத்திருப்பவர்கள் அதனைப் பாதுகாக்கத் திட்டமிடவும். தமிழம் வலை இணையத்தில் உள்ள மேலுள்ள பட்டியல் - என்பார்வைக்கு வந்தவற்றின் பட்டியல் மட்டுமே. விடுபட்டவை இருக்கலாம். தனித்தனியாக உருவாக்கி வைத்திருக்கும் பட்டியலை படவடிவக்கோப்புடன் அனுப்பினால் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன். ஏன் இந்தப் பட்டியல் ? இந்தப் பட்டியலால் என்ன பயன் ? இது படிப்பவருக்கானது அல்ல. படவடிவக்கோப்பு உருவாக்குபவருக்கானது. உருவாக்கிய நூல்களையே மீண்டும் உருவாக்காமல், நேரத்தை வீணடிக்காது இயங்க இந்தப் பட்டியல் உதவும். பட்டியலில் விடுபட்டவற்றை உருவாக்கத் திட்டமிட்டால் ஒரு நிலையில் தமிழில் வெளியான அனைத்து நூல்களையும் நாம் படவடிவக்கோப்பு ஆக்கி விடலாம். இதற்கான முன்முயற்சியே இந்தப் பட்டியல். நூல் வைத்திருப்பவர்கள் அருள்கூர்ந்து உதவவும். அந்த நூல் ஆக்கியவரை உயிர்ப்பித்து அடுத்த பல தலைமுறையினருக்கும் காட்சிப்படுத்தலாம். படவடிவக்கோப்பாக்காது வைத்து இருந்தால் 70 - 100 ஆண்டுகளுக்குள் அவை உடைந்து யாருக்குமே பயனற்றதாகிவிடும். அருள்கூர்ந்து திட்டமிடவும்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை. மின் அஞ்சல் pollachinasan@gmail.com.  பேச  9788552061
உலகஅளவில் பாதுகாக்கப்பட்டவற்றின் பட்டியல் காண  http://win.tamilnool.net/search/worldlist.htm

--
தமிழ்க்கனல் -  பேச: 9788552061  -  www.thamizham.net

Tuesday, 14 May 2013

சர்வதேச ரீதியாக ஆதித்தமிழர்களின் கடல்பயண நிபுணத்துவம்

பழந்தமிழர்கள் ஆமைகளின் வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்று ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிரமணி என்ற ஒரிசா பாலு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார். இதில் ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை" என்ற தலைப்பில் ஒரிசா பாலு பேசியதாவது: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன.
இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்.
பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது.
இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன.
ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.

Monday, 4 February 2013

இயற்கை முதற்கொண்டு எல்லாத் தரப்பினராலும் ஏமாற்றப்படுபவன்தான் விவசாயி.


ஹேப்பி பொங்கல் என்று வாழ்த்து சொல்கிறார்கள்.வீடு தேடி சென்று நேரில் வாழ்த்து சொல்லி சிரித்து மகிழ்ந்த காலம் என்றோ முடிந்து விட்டது. வாழ்த்து அட்டை வாங்கி கையெழுத்து மட்டும் போட்டு ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் திணித்து விட்டு புன்னகைத்துக் கொண்ட காலகட்டமும் மலையேறி போய்விட்டது. அட, செல்போனில் பேசக்கூட நேரமும் பொறுமையும் இல்லாமல் எஸ்எம்எஸ் வழியாக வாழ்த்து அனுப்புகிறோம். அனுப்பியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இருபது வருடத்துக்குள் வாழ்க்கை முறை என்னமாக மாறிவிட்டது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் புரட்சிகரமாக வளர்ந்திருக்கிறது. பார்ப்பதும் பேசுவதுமான புலன்வழி தொடர்புகள் அடியோடு அறுந்து போயின. தமிழ் எழுத்துக்களை குறுந்தகவல் சேவையில் உள்ளடக்க செல்போன் கம்பெனிகள் அப்படியொன்றும் ஆர்வம் காட்டாததால் அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடக்கியது மாதிரி 247 எழுத்துக்களை 26க்குள் அடக்கி புதுத்தமிழ் உருவாக்கி இருக்கிறோம். பொங்கும் மங்கலம் எங்கும் நிறையட்டும் என்பது மாதிரியான மரபு வழி வாழ்த்துக் கூற எழுத்து வளம் போதாத காரணத்தால் விஷ் யு எ ஹேப்பி பொங்கல் என்று தமிழர் திருநாள் வாழ்த்து சொல்வது பிரபலமாயிற்று. தவறுக்கு வாய்ப்பு குறைவு. அதனால் தப்பில்லை. மொழியை பார்க்காதீர்கள், பாஸ்.. மனதை பாருங்கள் என்று ஆறுதல் கூறுவதை ஏற்பது தவிர வழியில்லை.என்றாலும், உழவர் திருநாள் வாழ்த்துக்கள் என்ற வாசகம் எங்காவது பார்வையில் பட்டால் மனமும் உறுத்துகிறது.உழவன் எங்கே நன்றாக இருக்கிறான், திருநாள் கொண்டாட? மழை பொய்த்து விட்டது. நதி வறண்டு விட்டது. நிலத்தடி நீர் தாழ்ந்து விட்டது. எஞ்சியதை உறிஞ்சி மேலே கொண்டுவர நினைத்தால் மின்சாரம் கிடையாது. மாய மந்திரம் செய்து மகசூல் பார்த்தால் விலை கிடைக்காது. உழக்கு மிஞ்சாது என்ற பழமொழி மட்டும் பொய்க்காமல் இருக்கிறது. என்ன செய்வான் விவசாயி. எப்படி கொண்டாடுவான் உழவர் திருநாள்?இயற்கை முதற்கொண்டு எல்லாத் தரப்பினராலும் ஏமாற்றப்படுபவன்தான் விவசாயி. காவிரி நதியோரம் நடக்கும் சோக நிகழ்வுகளை பார்ப்பதால் மட்டும் கலங்கவில்லை நம் நெஞ்சம். வைகை, தாமிரபரணி என்று எந்த நதிக்கரையை எடுத்துக் கொண்டாலும் இதுதான் நிதர்சனம்.பேராசைக்கார மனிதன் நீரையும் நிலத்தையும் திருடி இயற்கையை சுரண்டிக் கொழுத்தான். குற்றுயிராக்கப்பட்ட இயற்கை வளங்களால் கைவிடப்பட்டு அடித்தட்டு உழவன் கண்ணீர் வடிக்கிறான். இங்கல்ல. இந்தியா முழுமையிலும் இன்று விவசாயி நிலைமை இப்படித்தான் இருக்கிறது. பெரு நகரங்களில் ஊடகங்களின் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்பதால் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்யும் விவசாயிகளின் முகங்கள் யார் கண்களிலும் படுவதில்லை.ஆனால் நெல்லும் கோதுமையும் கம்பும் கரும்பும் பயிரிட்டு பாதுகாத்து அறுவடை செய்து அதை வயலில் கால் பதித்திராத, நெற்பயிர் எப்படி இருக்கும் என்பதை பார்த்திராத கோடானு கோடி மக்களின் பசிக்கு உணவாகப் படைக்கும் இந்திய உழவன் தன்மானம் மிக்கவன். விதைத்த பயிரெல்லாம் கருகி வயல்கள் கட்டாந்தரையாகி நஷ்டம் தலைக்கு மேல் போனாலும் கவுரவத்தை விட்டு யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டான். அவன் மானஸ்தன்.அதனாலேயே அவனை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.இதில் அரசாங்கத்தை அரசியல்வாதிகளை அதிகாரிகளை இனம் பிரித்துப் பார்க்க எந்த அவசியமும் கிடையாது. 300 ரூபாய் கூலியுடன் 30 ரூபாய் இனாமை எந்தக் கேள்வியும் இல்லாமல் முடிவெட்ட செலவழித்துவிட்டு சலூனில் இருந்து வெளியே வரும் நடுத்தர வர்க்கத்து அறிவுஜீவிகள், வீடு தேடி கூடை சுமந்து வரும் கீரைக்காரியிடமும் வாழைப்பழ வண்டிக்காரனிடமும் கூச்சமே இல்லாமல் பேரம் பேசி அவர்களின் வயிற்றிலடிக்கும் காட்சிகளை நாள்தோறும் பார்க்கிறோம். சாமானியர்களாக தங்களை சொல்லிக் கொள்ளும் இவர்களை விடவும் போலிகள் எவருமில்லை. சரி. இவ்வாறு அனைத்துத் தரப்பினராலும் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்ப வேண்டுமானால் நமது விவசாயிகள் என்னதான் செய்ய வேண்டும்?செய்யக்கூடாததை சொன்னால் போதும். விவசாயிகள் வேறு யாரையும் நம்பக்கூடாது. கர்நாடக அரசு, நதிநீர் ஆணையம், நீதிமன்ற ஆணைகள், தடையற்ற மின்சாரம், மானியம், கட்சிகள், வாக்குறுதிகள், வானிலை அறிக்கை… எதையும் யாரையும் நம்பாமல் & நம்பியிருக்காமல் & விவசாயி தன்னைத் தானே மீட்டெடுக்க வேண்டும். காலம் காலமாக கடைப்பிடித்த வழிமுறைகள் இப்போது பலனளிக்காததால் சொந்தக் காலில் நிற்க என்ன செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும். அது சுலபம் அல்ல. ஆனால் முடியாதது அல்ல.
ஒருவேளை, முயன்று பார்த்தும் எந்த பலனும் கிட்டவில்லை என்று தெரிய வருமானால், வேளாண்மைத் தொழிலுக்கே விடை கொடுக்கவும் துணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு உறைக்கும்.
அதுவரை நாமெல்லாம் கொண்டாடுவது போலிப் பொங்கல்.




நன்றி: Dinakaran 

பலமிருந்தால் மற்றதெல்லாம் துச்சம்தான்.

பாகிஸ்தான் பிரதமரை கைது செய்யுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. உத்தரவை நிறைவேற்ற வேண்டிய காவல் துறை  அரசின் அங்கம். அதனால் பிரதமர் பிழைத்தார். அரசு மீது ராணுவத்தின் நிழல் படர்ந்திருக்கிறது. அது விரும்பாதவரை பிரதமருக்கு காப்பு இல்லை. முன்பு இருந்த பிரதமரும் இதே சூழ்நிலையை சந்தித்தார். நீதிமன்றத்தில் ஆஜரானார். உண்மையில் நாட்டின் அதிபர் மீதான வழக்கில் அவர் பகடைக்காய் ஆனார். அதிபர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை.  அதனால் பிரதமர் தொல்லைக்கு ஆளானார்.   அதற்கும் முன்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவரை அன்றைய அதிபர் பதவி நீக்கம் செய்ததால் பெரிய போராட்டம் வெடித்தது. அதன் முடிவில் த.நீ மீண்டும் பதவிக்கு வந்தார். அன்று தொடங்கிய அரசு & நீதிமன்றம் மோதல் இன்னும் முடியவில்லை.இலங்கையிலும் தொடங்கி இருக்கிறது. ஷிராணி பண்டாரநாயக தலைமை நீதிபதியாக இருந்தார். அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் ஆளும் கட்சிக்கு கோபம். 117 எம்.பி.க்கள் அவர் மீது புகார் கொடுத்தனர். அதன் பேரில் அவரை பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது. அதை ஏற்று அதிபர் ராஜபக்ச ஷிராணியை  நீக்கியுள்ளார். நாடாளுமன்றத்தின் தெரிவுக் குழு அதற்கான அதிகாரம் படைத்தது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை ராஜபக்ச பொருட்படுத்தவில்லை. பல நாடுகளின் எச்சரிக்கையையும்தான். அவர் இதையெல்லாம் பொருட்டாக நினைப்பதில்லை என்பது நமக்கு தெரியும்தானே.என்றாலும் சில விஷயங்கள் நெருடுகின்றன. ஷிராணி ஒருபோதும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டவர் அல்ல. சட்டக் கல்லூரி பேராசிரியராக இருந்தவரை அன்றைய அதிபர் சந்திரிகா உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக்கினார். தலைமை நீதிபதியாக உயர்த்தியவர் ராஜபக்ச. எனவே இப்போது அவர் நியமித்துள்ள மோகன் பீரிஸ் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவே இருந்ததில்லை என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் எடுபடாது. 
பாகிஸ்தானில் அரசு பலவீனம். எனவே அது மண்டியிட வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இலங்கையில் அரசு வலுவானது. எனவே நீதிமன்றம் தலைவணங்க வேண்டும் என விரும்புகிறது.
பலமிருந்தால் மற்றதெல்லாம் துச்சம்தான்.




நன்றி: Dinakaran 

காணாமல் போனவர்கள்

காணும் பொங்கலன்று சென்னையில் 105 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவது பெரிய விஷயமில்லை. மாவட்டங்களைவிடவும் தலைநகரில் காணும் பொங்கல் கூட்டம் அதிகமாக இருப்பதால் அது பெரிய எண்ணிக்கையும் இல்லை. மெரினா கடற்கரையில் குவிந்த கூட்டத்தில் 68 குழந்தைகளும், எலியட்ஸ் பீச்சில் 2, தீவுத்திடல் பொருட்காட்சியில் 35 குழந்தைகளும் பெற்றோரை விட்டு எப்படியோ பிரிந்துவிட்டன. காவல்துறையின் சிறப்பான ஏற்பாடுகளால் அந்த குழந்தைகள் ஒரு மணி நேரத்துக்குள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. 75 மீட்டருக்கு ஒரு கோபுரம் வீதம் அமைத்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்துள்ளனர். இரு கோபுரங்களுக்கு இடையே ஒரு இன்ஸ்பெக்டர் + நான்கு கான்ஸ்டபிள்கள் ரோந்து சென்றுள்ளனர். ஒலிபெருக்கி மூலம் இடைவிடாத  எச்சரிக்கை. இதனால் வழி தவறிய குழந்தைகள் உடனடியாக காவலர்களின் வசம் வந்தன. எல்லாம் 4 முதல் 10 வயது குழந்தைகள். அவர்களுக்கு பிஸ்கட், சாக்லெட், தண்ணீர் கொடுத்து பயம் போக்கி விசாரித்துள்ளனர். ஐந்தாறு வயது குழந்தைகளுக்கு பெற்றோர் பெயரை சொல்ல தெரியவில்லை. தன் பெயரை மறக்கவில்லை. ஆனால் மழலை உச்சரிப்பால் குழப்பம். மைக்கில் சரியான தகவலை சொல்ல முடியவில்லை. அப்போதுதான் ஒரு காவலருக்கு அந்த யோசனை பிறந்திருக்கிறது.  அப்பா அம்மா செல்போன் நம்பர் தெரியுமா என்று கேட்டிருக்கிறார். குழந்தைகள் உற்சாகமாக தலையசைத்து  10 இலக்க போன் நம்பரை கரெக்டாக சொல்லியிருக்கின்றனர். ஒலிபெருக்கியின் உதவி இல்லாமலே பெற்றோரை சுலபமாக வரவழைத்து குழந்தையை ஒப்படைத்திருக்கின்றனர். சிலர் மட்டும் நன்றி கூறாமல் சிடுசிடுப்புடன் இழுத்துச் சென்றுள்ளனர். தவற விடுவதற்கென்றே கடற்கரைக்கு அழைத்து வந்தார்களோ என்று போலீசை சிந்திக்க வைத்தவர்கள் அவர்கள்.

பெயரை விட நம்பர் குழந்தைகள் மூளையில் ஆழமாக பதிகிறதா அல்லது மன ரீதியாக இதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சிகள்தான் தெளிவுபடுத்த முடியும். ஆனால், வில்லங்கமான செய்திகளுக்கே பழகிப்போன சென்னை போலீஸ், பொதுமக்களின் பாராட்டை பெறும் வகையிலும் செயல்பட முடியும் என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது.




நன்றி: Dinakaran 

மத்திய அரசு நடவடிக்கை - அசட்டு துணிச்சல்

லட்டு சாப்பிட்டதும் கொஞ்சம் மிக்சர் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் வழக்கம் நமக்கு பழக்கமானது. மத்திய அரசு அதைத்தான் செய்திருக்கிறது. மானிய விலையில் 6 சிலிண்டர்தான் என்பதை 9 ஆக உயர்த்தியது. பரவாயில்லையே என்று சொல்ல மக்கள் நினைத்தபோது டீசல் விலையை 45 பைசா உயர்த்தி விட்டது. மிக்சருக்கு பதில் மிளகாய் பொடி. ஏதோ ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று ஒரு நாள்கூட மக்கள் மெத்தனமாக இருந்துவிட கூடாது என்பதில் மேலிடத்தில் யாரோ கவனமாக இருப்பது புரிகிறது.உறுதியான எந்த முடிவும் எடுக்காமல் காலத்தை ஓட்டுவது; எந்த எச்சரிக்கையும் தராமல் அதிரடியாக முடிவை அறிவிப்பது. இப்படி இரண்டு தொலைமுனைகளில் ஒன்றை வழிமுறையாக பின்பற்றுவது அரசுக்கு அழகல்ல. டீசல் விலை உயர்வால் 15,000 கோடி கூடுதலாக கிடைக்கும். சிலிண்டர் எண்ணிக்கை உயர்வதால் 10,000 கோடி கூடுதல் செலவாகும். மீதி?ரயில்வே, அரசு போக்குவரத்து கழகங்கள், ராணுவம் போன்றவை லிட்டருக்கு 10 ரூபாய் அதிகம் கொடுத்து டீசல் வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் சுமையில் அந்த மீதி கரைந்துவிடும். ரயில்வேக்கு மட்டும் செலவு 2,700 கோடி அதிகரிக்கும். நிதியமைச்சர் தெளிவாக கூறிவிட்டார்: இந்த உயர்வு மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் எனது பட்ஜெட்டுக்கு பயன்படப்போவதில்லை. பிறகேன் இந்த வீண் வேலை. மானியங்களால் ஆயில் கம்பெனிகளுக்கு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் இழப்பு. அதை குறைக்க முதல்கட்டமாக பெட்ரோல் விலையை சந்தை விலைக்கு சமமாக்கியது அரசு. சர்வதேச விலைக்கு ஏற்ப அது ஏறி இறங்குகிறது. அக்டோபரில் 56 பைசா குறைந்தது. நவம்பரில் 95. நேற்று 25 பைசா. 

இதற்கு மக்கள் பழகிவிட்டனர். டீசலையும் அப்படி மாதம் 40,45 பைசா வீதம் ஏற்ற கம்பெனிகளுக்கு அனுமதியாம். 9 ரூபாய் 60 பைசாவை சரிக்கட்ட 19 மாதம் இப்படி உயர்த்த வேண்டும். அதோடு லாரி, பஸ், ரயில் கட்டணமும் சிமென்ட், காய்கறி விலைகளும் அதிகரிக்கும்போது மக்கள் என்னாவது? அடுத்த 16 மாதத்துக்குள் 10 சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த நடவடிக்கை அசட்டு துணிச்சலாக தோன்றுகிறது.




நன்றி: Dinakaran 

இலவசமாக கொடுத்த விஞ்ஞானிகளை விலைக்கு வாங்க அரசு முடிவு

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அவசியம். இது அனைத்து வேலைகளுக்கும் பொருந்தும். நேரம், காலம் பார்க்காமல், விடுமுறை கூட எடுக்காமல் வேலை பார்ப்பவர்களையும் இருக்கும் அத்தனை லீவையும் ஒன்று கூட விடாமல் எடுப்பவர்களையும் ஒரே மாதிரி நினைப்பது சரியாக இருக்காது. விஞ்ஞானிகள் முதல் ரகம். அவர்கள் ஓரளவுக்கு கவுரவமான வாழ்க்கை வாழ பணம் அவசியம். அது கிடைப்பதில்லை. அந்த நிலை இனி மாறப்போகிறது.விஞ்ஞானிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்கள் பணிக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகளும் இருப்பதில்லை. அதனால்தான் டாலர்களில் கொட்டிக் கொடுக்கும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு பறக்கிறார்கள். அங்கு அவர்கள் ஆராய்ச்சி செய்து  கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களை, தயாரிக்கும் பொருட்களை பல மடங்கு விலை கொடுத்து இந்தியா வாங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படி வெளிநாடு பறந்த சிறந்த விஞ்ஞானிகளை அதிக சம்பளம் கொடுத்து மீண்டும் இந்தியாவுக்கே வரவழைக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தாயகம் திரும்ப சம்மதிக்கும் விஞ்ஞானிகளுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (ரூ.55 லட்சம்) கவுரவ ஊதியமும், குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய வீடும் கிடைக்கும். இங்கு வந¢து போக, தங்கியிருக்க ஆகும் செலவையும் அரசே தரும். ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சியில் ஈடுபடலாம். புகழ்பெற்ற கல்லூரிகளில் பாடம் எடுக்கலாம். தேர்வு செய்யப்படும் விஞ்ஞானிகள் உடனே வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உண்டு. அதற்குள் வந்து இந்தியாவில் பணியாற்றலாம். இதன் மூலம் இந்திய ஆராய்ச்சிப் பணிகள் மேம்படும். அதோடு இளைய விஞ்ஞானிகளுக்கும் ஒரு ஊக்கமாக இது இருக்கும் என திட்டக் குழு துணைத் தலைவர் கூறியிருக்கிறார்.இதே போன்ற ஒரு திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா அமல்படுத்தியது. கைநிறைய சம்பளம், அதோடு சொந்த நாட்டுக்கு உழைப்பதில் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் காரணமாக பல சீன விஞ்ஞானிகள் தாயகம் திரும்பினர். இது சீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுதான் இந்தியாவிலும் நடக்கப் போகிறது.





நன்றி: Dinakaran 

மம்தாவின் அமுதமொழி

சுஷில் குமார் ஷிண்டே பேச்சால் எழுந்த பரபரப்பில் மம்தாவின் அமுதமொழி அமுங்கி விட்டது. இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கிறோம் என்பதை மறந்து விட்டாரோ என்று ஷிண்டேயை விமர்சிக்கிறார்கள். மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருப்பது நினைவில்லையோ என்று மம்தாவை கேட்க தோன்றுகிறது. '10 தடவை பிரதமரை கேட்டு விட்டேன். இதற்கு மேல் என்ன செய்வது? அடிக்கவா முடியும்?' என்று பேசுபவரை பார்த்தால் வேறெப்படி தோன்றும். மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு வாங்கிய கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்யுங்கள்; கடனை திருப்பி செலுத்துவதிலும் மூன்று வருடம் இடைவெளி தாருங்கள் என்று மம்தா கேட்டு வருகிறார். இந்த கோரிக்கையை பிரதமரிடம் பல முறை வலியுறுத்தியும் அவர் கண்டு கொள்ளவில்லையாம். அதைத்தான் பொதுக்கூட்டத்தில் மேற்கண்டவாறு வெளிப்படுத்தியுள்ளார். பிரதமரை அடிப்பது என்று ஒரு முதல்வர் பேசுவதா என்று உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.  வங்காளிகள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். 'வருமான வரி சுங்க வரி அது இது என்று என் மாநில மக்களின் பணம் 40,000 கோடியை மத்திய அரசு பிடுங்கிக் கொள்கிறது. வெறும் 18,000 கோடிதான் நமக்கு தருகிறது. இது போக வாங்கிய கடனுக்கு வருடம் 26,000 கோடி வட்டி + தவணை கேட்கிறது. என்ன அநியாயம் பாருங்கள்' என்று மக்களிடம் முறையிட்டார். பெரிய சலசலப்பு ஏதுமில்லை. அடுத்த அம்பு எய்தார். 'இதுவரை இருந்த மார்க்சிஸ்ட் அரசு தான் கடன் வாங்கியது. அந்த கட்சிதான் திருப்பி செலுத்த வேண்டும். என்னிடம் கேட்பது என்ன நியாயம்?' என்று குமுறினார். அரசு வாங்கிய கடனை கட்சி எப்படி செலுத்த முடியும் என்றால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார். 

'அந்த கட்சிக்கு நிறைய கட்டிடங்கள், சொத்துகள் இருக்கின்றன. அவற்றை ஏலத்தில் விற்று எடுத்துக் கொள்ளுங்கள்' என்று மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளார். 2002ம் ஆண்டிலேயே  அவர் கேட்டார். 'ஏழை தொழிலாளர்களின் கட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் ஊருக்கு ஊர் இவ்வளவு சொத்து வாங்கி குவிப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பி,  அதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த அளவுக்கு புரட்சிகரமான பொருளாதார சிந்தனைக்கு காது கொடுத்தால் பிரதமருக்கு பாவம் எங்கிருந்து பேச்சு வரும்?




நன்றி: Dinakaran 

பொற்கால உதயம்

வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கும்போது பல விஷயங்கள் பிரமிக்க வைக்கும்.  'இந்த அளவுக்கு நமது நாடு எப்போது முன்னேறும்?' என்ற ஏக்கம் உண்டாகும்.  நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே அந்த சிந்தனைகளை அடக்கம் செய்துவிட்டு வழக்கமான வாழ்க்கையில் ஒன்றிவிடுவார்கள் பலர். சிலர் சில நாட்கள் அந்த சிந்தனைகளை சுற்றியிருப்போருடன் அலசிவிட்டு, அதெல்லாம் இங்கே சாத்தியப்படாது என்ற முடிவோடு மறந்துவிடுவார்கள். என்ன தடைகள் இருந்தாலும் அதை தாண்டி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று களத்தில் இறங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களில் ஒருவர். நதிகளை இணைக்க வேண்டும் என்பது அவரது பிரதான கனவு. அதை காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா போன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளியாக அவர் பார்க்கவில்லை. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் நிலமும் நீரும் சார்ந்த பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகளுக்கு ஒட்டுமொத்த தீர்வாக நதிகள் இணைப்பு அமைவதற்கான சாத்தியக்கூறை உணர்ந்திருந்தார். அதனால்தான் ஒரே கோஷத்தை முன்வைத்து இரண்டாயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரையை மேற்கொண்டார். மக்கள் சக்தியை ஓர் இயக்கமாக உருமாற்றும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும் படித்தவர்கள், பணம் படைத்தவர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த தங்களால் இயன்றதை செய்தாலே நாடு முன்னேறிவிடும் என்று அவர் விதைத்த சிந்தனை பல்லாயிரம் உள்ளங்களில் வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவது, குடிசைக்கு வெளியே வர இயலாத நோயாளிகளை சந்திக்க டாக்டர்களை அழைத்துச் செல்வது, பெண்களுக்கு நவீன தொழில்கள் கற்றுக் கொடுப்பது என்று தமிழகம் முழுவதும் தனியாகவும் குழுக்களாகவும் ஏராளமானவர்கள் பொது சேவையில் ஈடுபட்டிருப்பது அதற்கு சாட்சி. எக்ஸ்னோரா போன்ற அமைப்புகளின்  சேவைக்கு சற்றும் குறைந்ததல்ல இவர்களின் பணி. வாரம் ஒருநாள் ஒருமணி நேரம் ஒதுக்கி எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அடித்தட்டு மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவுவோம் என்று எல்லோரும் முன்வரும்போது இந்தியாவின் பொற்காலம் உதயமாகும்.





நன்றி: Dinakaran 

கட்கரி போய் ராஜ்நாத்

நிதின் கட்கரி இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட இருந்ததை வெற்றிகரமாக தடுத்து விட்டார்கள். யார் தடுத்தார்கள் என்பதில் கருத்தொற்றுமை இல்லை. காங்கிரஸ்தான் வருமான வரி துறையை ஏவி கட்கரிக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனையிட வைத்து அவரது வாய்ப்பை தடுத்து விட்டதாக பாரதிய ஜனதா மேலிடம் கூறுகிறது. கட்சியில் அவருக்கு எதிரான கோஷ்டி சாமர்த்தியமாக காய் நகர்த்தி தடுத்ததாக காங்கிரஸ் சொல்கிறது. இரண்டுமே உண்மை என்றால் தவறில்லை. கட்கரி பெரும் தொழிலதிபர் என்பது ரகசியமல்ல. முதல் முறை தலைமை பதவிக்கு வர அது அவருக்கு பயன்பட்டது. ஆனால் அவரது நிறுவனங்கள் முறைகேடாக செயல்பட்டு லாபம் ஈட்டியதாக புகார்கள் எழுந்தபோது அவர் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை. இதனால் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. ஊழலின் பெயரால் காங்கிரசை கடுமையாக விமர்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரே ஊழல் பேர்வழி என்று தெரிந்தால் யார் மதிப்பார்கள் என்று ஜெத்மலானி தொடங்கி பல தலைவர்கள் பகிரங்கமாக கண்டித்தனர். கட்சி பிளவு படும் சூழ்நிலையில் கட்கரி  பதவி விலக முன்வந்தார். ஆனால், மீண்டும் அவரையே தலைவராக்கும் திட்டத்தின் ஒரு  அத்தியாயம்தான் அந்த விலகல் என்று தெரிய வந்ததும் அதிருப்தீ பரவியது. இனிமேல் ஊ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லையே நாம் உச்சரிக்க முடியாது என மூத்த தலைவர்கள் கலங்கினர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட  கட்கரிக்கு எதிராக கொடிதூக்க அவர்களுக்கு துணிவில்லை. மகேஷ் ஜெத்மலானி போன்ற மூன்றாம் தலைமுறையினர் கட்கரியை எதிர்த்து போட்டியிட முனைந்தனர். இந்த நேரத்தில்தான் வருமான வரி அதிகாரிகள் நுழைகின்றனர். கிளைமாக்சில் திருப்பம். கட்கரி ஒதுக்கப்பட்டு ராஜ்நாத் சிங் தலைவராகிறார். 'உள்துறை அமைச்சர் ஷிண்டேயை நீக்காவிட்டால் நாடாளுமன்றம் நடக்க விடமாட்டோம்' என்று அவர் முழங்குகிறார். 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த (வருமான வரி) அதிகாரிகளை சும்மா விடமாட்டோம்' என்று கட்கரி மிரட்டுகிறார். அரசியல் மாற்றத்துக்காக ஏங்கும் பொதுமக்களின் பொறுமை வேகமாக கரைந்து கொண்டிருப்பதை பாரதிய ஜனதாவும் உணர மறுப்பது உண்மையில் பரிதாபம்.





நன்றி: Dinakaran