Saturday, 12 January 2013

ரிஸானா

30-01-2007

அல் த்வாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி, சவுதி அரேபியா.


எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள். கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.

அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை"

ரிஸானா நபீக்.

அல் த்வாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி, சவுதி அரேபியா.


இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மூதூர் பகுதி கிராமமொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை ரிஸானாவை 17 -வயதில் வீட்டு வேலைக்காக அனுப்புகிறார்கள். தங்களுடைய வறுமையைப் போக இக்குழந்தையை வீட்டு வேலைக்கு அனுப்ப சட்ட ரீதியான சாத்தியங்கள் இல்லாத போது 1998-ல் பிறந்த ரிஸானாவில் பிறந்த நாளை 1982 என மாற்றி வயதை அதிகமாக்கி பாஸ்போர்ட் எடுத்து அனுப்புகிறார்கள். இது இலங்கையில் மட்டுமல்ல அரபு நாடுகளுக்கு இப்படியாக பல ஏழைக் குழந்தைகள் ஏஜெண்டுகள் மூலம் அனுப்பப்படுகிறார்கள். ஏழ்மையைத் தவிற வேறு எந்த காராணங்களையும் சொல்ல முடியாது. ஆனால் தேயிலைப் பயிற் செய்கைக்கு கங்காணிகள் என்ற பெயரில் ஏஜெண்டுகள் எப்படி ஏழைகளை 19-ஆம் நூற்றாண்டில் கடத்திச் சென்று மலைக்காடுகளில் விட்டார்களோ, அப்படியே ஏஜெண்டுகள் இந்த ஏழைகளை கடவுச்சீடுகள் மூலம் அரபு நாடுகளுக்குக் கடத்துகிறார்கள்.

10 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 16 வயது ரிஸானா நபீக் சமைக்கிறாள், துணி துவைக்கிறாள், வீட்டைச் சுத்தம் செய்கிறாள், தன் எஜமானியின் நன்கு மாத குழந்தைக்கு ஊட்டுகிறார். கடைசியில் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றதாக 17 வயதில் கைது செய்யப்பட்டு இப்போது 24 வயதில் தலை வெட்டப்பட்டு சவூதி மன்னராட்சி அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்.

தமிழைத் தவிற வேறு மொழியறியாத ஒரு குழந்தை தன்னை விட 17 வயது குறைவான நான்கு மாதக் குழந்தையை கவனித்துக் கொள்கிறது. இடம் புதிது, மொழி தெரியாது. சம்பவம் நடந்த போது வீட்டிலும் எவரும் இல்லை. ஒரு சின்னக் குழந்தையிடம் ஒரு பெரிய குழந்தை துரதிருஷ்டமான ஒரு நேரத்தில் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் ரிஸானாவும் நடந்தாள். ஏனெனில் ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் குழந்தைக்கு நடக்கிறது, அதற்கு புரை ஏறி மூச்சுக்குழாய்க்குள் பால் அடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பிராயமோ, புரையேறிய குழந்தையை சரிந்த வாக்கில் படுக்க வைத்து முதுகைத் தட்டிக் கொடுத்தால் ஒரு வேளை சரியாகும் வாய்ப்பு உள்ளது என்பதோ இந்தப் பெரிய குழந்தைக்கு எப்படித் தெரியும் என எதிர்ப்பார்க்க முடியும்?

ஆக மொத்தம் ரிஸானா வறுமையின் நிமித்தம் சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சிறைக்குச் சென்று விடுகிறார். சிறையில் கழிந்த இந்த ஏழு ஆண்டுகளில் அவருக்காக ஒரு வழக்கறிஞர் கூட நியமிக்கப்பட்டு வாதாடியதாகத் தெரியவில்லை. நிலப்பிரவுத்துவம் வீழ்ந்து முதலாளித்தும் நமக்கு இந்த நவீன உலகையும் சிந்தனைப் போக்கையும் கொடுத்த பின்னரும் இன்னமும் மன்னராட்சி முறையை சவுதி அரேபியா வைத்திருக்கிறது. வஹாபிசம் எனப்படும் படு பிற்போக்கான சிறிதும் ஜனநாயகமற்ற கடும் ஒழுக்க தேசியவாதப் போக்கைக் கொண்ட சவுதி, அரபுத் தேசியத்தின் அடையாளமாக தன்னை நிறுத்திக் கொள்கிறது.

இம்மாதிரியான தண்டனை முறைகளால் மக்களை நிரந்தரமான அச்சத்துள் வாழ வைப்பதே அதன் ஆன்மா. இஸ்லாத்தின் மேன்மை மிக்கவனாக தன்னை காட்டிக் கொள்ளும் மன்னராட்சி சவுதியில் மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த தொழிலாளார்களில் நிலை மிக பரிதாபம், வறுமையாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சுதந்திரமானவைதான் இங்கிருந்து செல்லும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படும் நிலையில் இதிலிருந்து முஸ்லீம் தொழிலாளர்களும் விதிவிலக்கில்லை. பணக்காரன் தன் சாதிக்காரனாக இருந்தாலுமே அவனை ஒரு வர்க்க அடிமையாக மட்டுமே எப்படி நடத்துவானோ அப்படித்தான் இந்த ஏழை முஸ்லீம்கள் மீது கூட வாஹாபிசம் எவ்வித கருணையும் காட்டுவதில்லை. அது சவுதிக்குள் ஏழை பணக்காரன் என்ற வேறு பாடில்லாமல் இந்த தண்டனை முறையைக் கொண்டிருப்பதாக நான் வாசித்தேன். ஆனால் இதே வஹாபிசம் அமெரிக்க , ஐய்ரோப்பிய தேசியத்திடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.


நீதிமன்றங்களோ, அவர்களின் போலீசாரும், அவர்களின் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களும் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தீர்ப்பு எழுதும். இவர்தான் குற்றவாளி என்பதை எளிதில் தீர்மானித்து விடுகிற நீதிமன்றம். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதில்லை. சவுதியின் பணக்கார முஸ்லீம்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்ய, கார் ஓட்ட ஏழை முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் முஸ்லீம் அல்லாதவர்களை தங்களின் வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது. ரிஸானா என்னும் சிறுமியைப் பொறுத்தவரை அவருக்கு மொழி பெயர்ப்பாளாராக இருந்தவர்கள் குறித்து அரிய முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்ட போதும் ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போதும் தலை துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்னரும் அந்தக் குழந்தையின் நினைவில் என்ன ஓடியிருக்கும் எனத் தெரியவில்லை. புரையேறி இறந்து போன நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளித்திருந்தால் ரிஸானா விடுவிக்கப்பட்டிருப்பார் என்னும் நிலையில் அவர்கள் அந்த மன்னிப்பை இன்னொரு குழந்தைக்கு வழங்க முன் வரவில்லை.

2004-ம் ஆண்டில் இயக்குநர் கமலின் 'பெருமழக்காலம் 'படம் மலையாளத்தில் வந்தது. ரஸியா வின் கணவன் ஒரு விபத்தாக ரகுநாத அய்யர் என்பரைக் கொன்ற கொலைக்குற்றத்தின் பேரில் தலைவெட்டும் தண்டனைகுள்ளாகி வளைகுடா நாட்டில் இருக்க, கொல்லப்பட்ட ரகுநாத அய்யரின் மனைவியிடம் ரஸியா குற்றத்தை மன்னிக் கோருவதுதான் கதை. ரகுவின் மனைவி மன்னித்தால் தன் கணவன் விடுவிக்கப்படுவான் என்பதாகச் செல்லும் கதையில் நுட்பமாக ஒரு உயிரை இழந்த, இன்னொரு உயிரைக் காப்பற்றப் போராடும் இரண்டு பெண்களின் மன உணர்வுகளை மிக நுட்பமாகச் சொல்லியிருப்பார் கமல். இப்படியான வாய்ப்புகள் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம் என்னும் நிலையில் மன்னிக்கும் தேவையிருந்தும் கூட அந்த வாய்ப்பில்லாமல் வாளால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் இந்த சிறுமி.கொடூரமான இந்த வாள் வெட்டைத்தான் இந்துப் பாசிஸ்டுகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தக் கோருவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


அளவற்ற கருணையையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் பேசும் குரானோ அல்லாவோ இந்த ரிஸான் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ள 17 வயதில் கடைசியாக தங்கள் மகளை வழியனுப்பியவர்கள் பிணமாகவேனும் ரிஸானாவைக் காண்பார்களா என்பது தெரியவில்லை. அவர்களின் வறிய வாழ்வும் மாறவில்லை பிள்ளையும் இல்லாமல் போய் விட்டது. எல்லையற்ற அல்லாவின் கருணையில் ரிஸானாவின் இடம் எதுவெனத் தெரியவில்லை. ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போது அவள் என்ன நினைவுகளோடு வாழ்ந்திருப்பாள். மூதூரை, தன் உறவுகளை, கொஞ்சம் முந்தைய தன் பால்யத்தை, விளையாடிய விளையாட்டை, தன் சகாக்களோடு இட்ட சண்டையை, சிரிப்பின் துளிர்ப்பை, தன் தாய் பட்ட கஷ்டத்தை, தந்தையின் துயரத்தை, ஒரு காதல் கனவை, நடனத்தை, நாடு திரும்புவதை, மூதூரின் வீதிகளின் புதிய மனுஷியாக நடப்பதை, அரபு தேசத்திலிருந்து வாங்கி வந்த மிட்டாய்களை உறவுகளுக்கு கொடுப்பதை, புதுத்துணி எடுத்துக் கொடுப்பதை, குடிசை வீட்டை ஒரு சுவராக மாற்றுவதை, முற்றத்தில் சின்னதாய் ஒரு செம்பருத்தி வளருவதை….. ரிஸானா எதையெல்லாம் கனவு கண்டிருப்பாய்…. ஒரு தனித்த கனவு அல்ல அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின் கனவல்லவா?

அத்தனையும் ஒரு வெட்டில் சிதறிப்போனக் கனவோ…. என் அன்பே

(புகைப்படங்கள் பானுபாரதி விமலின் முகநூல் பக்கத்திலிருந்தும், சில தளங்களிலிருந்தும் எடுத்தாளப்பட்டது

Sunday, 6 January 2013

சித்ரவதையில் பல ரகங்கள் உண்டு

கல்வியின் சிறப்பை பெரியவர்கள் பல வகையில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். முட்டாளை அறிவாளியாக்கும், முரடனை மென்மையாக்கும், பொய்யனை சத்தியனாக்கும், திருடனை காவலனாக்கும் என்று கல்வியின் மந்திர சக்தியை படித்தவர்கள் மட்டுமின்றி படிப்பை தவற விட்டவர்களும் சிலாகித்து பேசுகின்றனர். எல்லாம் பொய்யோ என்று எண்ணும் வகையில் அவ்வப்போது சம்பவங்கள் நடைபெறுகின்றன. பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பிடிபடுகின்றவர்கள் உயர்கல்வி பயின்றவர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பதாக அறியும்போது கல்வி அதன் சக்தியை இழந்துவிட்டதா அல்லது காலம் தலைகீழாக மாறிவிட்டதா என்று குழம்பிப்போகிறோம். என்றாலும்கூட, ஒரு பேராசிரியர் தனது மனைவியை அம்மிக் குழவியால் அடித்து, நெஞ்சில் ஏறி மிதித்து, கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கிறார் என்ற செய்தியை படிக்கும்போது பலத்த அதிர்ச்சி ஏற்படுகிறது. திருவள்ளூரை அடுத்துள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ துறையின் தலைவராக பணியாற்றும் அவர் மாணவனாக இருந்தபோதே  அரசுப் பதக்கங்கள் உட்பட பல விருதுகளை குவித்தவர் என்கிறார்கள். கல்லூரியிலும் நல்ல பெயருடன்தான் முதன்மைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்து, 13 வயதில் மகள் இருக்கும் நிலையில் அவருக்கு இந்த கொலைவெறி எப்படி வந்தது என தெரியாமல் நண்பர்களும் உறவினர்களும் திகைத்துப் போயிருக்கிறார்கள். முதல்கட்ட விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் கணவன் , மனைவி இடையே ஆரம்பத்தில் இருந்தே ஈகோ பிரச்னை இருந்து வந்ததாக கூறுகின்றனர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மனைவி, வேறு யாரையாவது மணந்திருந்தால் மகாராணி போல் வாழ்ந்திருப்பேன் என்று அடிக்கடி இவரை சீண்டியதாகவும் கூறுகின்றனர். பேராசிரியர் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய போதிலும், பிச்சைக்காரன்கூட இதைவிட அதிகம் சம்பாதிக்கிறான் என்று குத்திக் காட்டினால் வலிக்கும்தானே. சித்ரவதையில் பல ரகங்கள் உண்டு. அதில் ஆண் பெண் வேறுபாடு கிடையாது. அதேபோல எல்லா காயங்களும் வெளியில் தெரியாது. எனினும், தொடரும் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமானால் விலகிச் செல்வதுதான் சரியான வழி என்பதை மெத்தப் படித்தவர் உணராமல்  போனது உண்மையில் துரதிர்ஷ்டம்.





நன்றி: Dinakaran

Wednesday, 2 January 2013

வீட்டுக்கு வீடு துப்பாக்கி

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் நியூ டவுன் மக்களுக்கு மிகவும் மோசமான நாள் அது. அன்றுதான் சாண்டி ஹுக் பள்ளியில் புகுந்த இளைஞன், 20 குழந்தைகள் உள்பட 26 பேரை சுட்டுக் கொன்றான். ம¦ள முடியாத துயரில் மூழ்கியிருக்கிறது அமைதியான அந்த பகுதி. அமெரிக்காவில் வீட்டுக்கு வீடு துப்பாக்கி இருக்கும். அங்கெல்லாம் நிலத்தின் பரப்பளவு அதிகம். மக்கள்தொகை குறைவு. வீடுகளும் நெருக்கமாக இருக்காது. அதனால் கொள்ளையர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள துப்பாக்கி அவசியம் என்பார்கள். அதனால் விற்பனையும் அதிகம். எத்தனையோ அப்பாவிகள் தோட்டாவுக்கு பலியானாலும் துப்பாக்கி மோகம் மட்டும் குறையவில்லை. இது குறித்து விமர்சனம் செய்தோ, எதிர்த்தோ யாராவது அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தால் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டு விழுகாது. அந்த அளவுக்கு துப்பாக்கியை நேசிக்கிறார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவின் இந்த துப்பாக்கி கலாசாரத்துக்கு அப்பாவிகள் பலியாவது இது முதன்முறையல்ல. 1999ல் கொலராடோவில் உள்ள கொலம்பியன் பள்ளியில் புகுந்த இரண்டு சிறுவர்கள் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 2007ல் வர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் ஒரு இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில் 32 பேர் பலியானார்கள். இப்போது 26 பேர். இதில் 20 குழந்தைகளுக்கு 7 வயது கூட நிறையவில்லை என்பதுதான் பரிதாபம். வீட்டில் தாய் நான்சியை சுட்டுக் கொன்றுவிட்டு, பள்ளிக்கு வந்த ஆடம் லான்சா என்ற இளைஞன், பள்ளி வளாகத்தில் 100 முறை சுட்டிருக்கிறான். இறந்த பின்னும் சுட்டிருக்கிறான். இந்த வெறியாட்டத்தில் குழந்தைகளின் உடல்கள் சிதைந்து போனதால், அவர்கள் போட்டிருந்த ஐ.டி. கார்டை வைத்துத்தான் பெற்றோரை அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள் போலீசார். லான்சா மன நலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்கிறார்கள் போலீசார். அப்படியானால் அவன் கையில் கிடைக்கும் வகையில் துப்பாக்கிகளை வைத்திருக்கலாமா? நான்சியிடம் போலீசார் பயன்படுத்தும் 2 கைத் துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் எம்4 துப்பாக்கி உள்பட 5 துப்பாக்கிகள் இருந்துள்ளன. ஆசிரியை பணியில் இருந்தவருக்கு எதற்கு இத்தனை துப்பாக்கிகள் என்பதை யார் விளக்குவார்கள்? துப்பாக்கிகளுக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் எதிர்ப்புக் குரல் கிளம்பியிருக்கிறது. இந்த முறை மக்களிடம் இருந்தே. அதனால் பலன் இருக்கும் என நம்பலாம்.




நன்றி: Dinakaran